Friday, 20 December 2013

புதுமைப்பெண்ணே புறப்படு!

பெண்ணே மன்னிப்பாயா?

பெண் அரசியே உன்
எண்ண உரசல்களால்
எழும் தீயோ! சீறுவது நீயோ!
எழுவதில் புரிகிறது.

பத்தினியும் கொலைக்
கத்தியாவாள் என்பதை
பழமொழியில்தான்
படித்தோம் அன்று .

ஆனால் அதுதான்
அதிசய உண்மைகள்! 
நித்தமும் செய்திகள்!
நிகழ்வன இன்று!

குடித்துத் தினமும்
அடித்துக் கொடுமை!
குடிக்கக் கஞ்சியும்
குழந்தைக்கு இல்லை.

கெடுக்கும் சூதினால்
அடுப்பும் எரியவில்லை!.
வயிறுதான் எரிகிறது.
வறுமை வெப்பத்தால்.

தடுத்துக் கேட்டால்
கொடுமைச் சூடுகள்.
படுக்கைப் பகிர்வுகள்
முடுக்கும் பசியினால்.

தட்டுமுட்டுச் சாமான்கள்
கட்டும் புடவைகள்
அத்தனையும் அடக்கம்
அடகுக் கடையிலே.

படிக்கும் பிஞ்சுள்
பள்ளி மறந்தன.
துடிக்கும் பசியினால்
துயர ஓலங்கள்.

நரகம் இதுவென
பழகிப் போனாலும்
கரையும் மழலைகள்
உறைவதென் செய்வாள்?

கூலி வேலையில்
கும்பி கழுவித்தான்
பாவி இவனால்
ஆவி கலைகிறாள்.

ஆணாதிக்கம் அதுதான்
வீணாதிக்க மதனால்
தானும் குழந்தையும்
தற்கொலைதான் விடுதலை.!

பேதையர் அப்படியும்
பாதையை மாற்றியும்
சனியன் கணவனை
புனிதக்கொலை செய்வரோ!!

புதுமைப் பெண்களும்
புறப்பட்டதும் சரிதான்!
பதுமை அல்லவென
பறை சாற்றியதும் சரிதான்!

ஆனால்

கொலைக் குற்றமாகி
குடும்பம் அழிந்தபின்
நிலையற்று சிறுசுகள்
அலைவதும் சரிதானோ!

வகைகெட்ட கணவனை
வாரிசுக்காக மன்னிப்பீர்!
புகையட்டும் அவனாக
போகட்டும் தானாக.

சுதந்திர நாட்டிலிங்கு
சுதந்திர சுவாசமெங்கு?
விதங்கள் பலவாக
நிதம் மூச்சு போகுதிங்கு.

மனிதம் தொலைந்தும்
புனிதமிழந்ததோ!
பொய்மையோ சுதந்திரம்!
வறுமையோ நிரந்தரம்!

ஏழையர் வாழ்விங்கு
ஈழம்போல் ஆனதோ!
நாளும் கழிவதிங்கு
யுகம்போல் நகருதிங்கு.

மதுவுக்கும் சூதுக்கும்
மரண தண்டனை கொடுப்பீர்!
மனித இனத்திற்கிங்கு
விடுதலை அளிப்பீர்!


கொ.பெ.பி.அய்யா

No comments:

Post a Comment