Thursday, 8 January 2026

அனுபவப் பாடங்கள்.

அனுபவப் பாடங்கள்.

ஆயிரம் பாடங்கள் படித்தாலும்
அனுபவம் படித்ததே வழிமுறை
சாயிர பொழுதில் வாழ்ந்தோரின்
சாதனை யாவும் திருமறை.

எழுதிய தெல்லாம் அனுபவங்கள் 
விழுமியங்கள் சொல்லும் பாடங்கள்.
வாழ்ந்து முடித்த பெரியோரின
வாழ்க்கை ஓவ்வொன்றும் வேதங்கள்.

கற்பனை வடித்த கனவுகளை
கண்களில் கண்ட உண்மை களை
சொற்பதம் சொன்ன சரித்திரங்கள்வ
அற்புதம் வென்றவர் சித்திரங்கள்.

நூலென நுழையும நூலிழைகள்
நுழைந்து விளையும் காதுளைகள்
நூல்கள் நூற்ற பதவுரைகள்
ஆள்வன ஆற்றும் பொழிப்புரைகள்.

கலைகள் எல்லாம் கற்றவைகள்
கற்றவை எல்லாம் பெற்றவைகள்.
பெற்றவை கற்றவை அனுபவங்கள் 
உற்றவை ஏற்றவை பாடங்கள்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 31 December 2025

கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது--அது
கொலை செய்யவும் தயஙகாதது.
சிந்திக்கச் செய்யாதது--நொடியில்
செய்பிழை உணராதது.

அறிவினை மழுக்குங் கோபம்--புத்தி
தெளிவினைக் கலக்கி விடும்
புரிவினைத் தடுக்குங் கோபம்--உண்மை
அறிவினைக் கெடுத்து விடும் .

யோசிக்க மறுக்குங் கோபம்--உற்ற
நேசத்தை மறக்கச் செய்யும்.
தோசத்தைத் தோண்டுங் கோபம்--நிச
வேசத்தைக் காட்டி விடும் 

சமரசம் ஆகாக் கோபம் --மன
சமநிலை சிதைத் தழிக்கும்.
அமைதியைக் கலைக்குங் கோபம் --உள்
ஆன்மாவை அடக்கி விடும்.

விழிகள் சிவக்குங் கோபம் --இரத்த 
அழுத்தம் அதிகம் ஆக்கும்.
இதயத்தை இறுக்குங் கோபம் --செயல்
இயல்பினை சிதைத்து விடும்.

ஆராய அவசரக் கோபம்--அப்புறம்
ஆவதையும் ஆராயாது.
நேர்வதை எண்ணாதக் கோபம்---பின்
பார்வையை மறந்து விடும்.

பகைமைக்கு வித்தாகுங் கோபம்--உறவு
பசுமைக்கு பஞ்சம் ஆக்கும்.
அழிவுக்கும் ஆரம்பம் கோபம்--உயர்
வளர்ச்சியைத் தடுத்து விடும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

ரெட்டைச் சடைக்காரி

ரெட்டைச் சடைக்காரியே

கொல்லுறியேக் கள்ளியே!

வட்ட விழிக் கொள்ளியே--சுட்டு

வாட்டுறியே  என்னையே!


உன்னப் பெத்தவ யாரடி

எனக்கு அத்தை  அவளடி.

மச்சான் எவனோ பாக்கல!

மாமன் குணத்தக் கேக்கல!


முன்னப் பின்ன அறியல

முறையப் பத்தியும் நினைக்கல.

எப்படி நுழைஞ்சக் கனவுல

இப்படிப் படுத்துற உசுறல.


காந்தக் கண்ணோ இழுக்குற! 

காரணம் புரியலக் கவுக்குற. 

சிரிச்சும் சிரிக்காம சிரிக்கிற 

பறிச்சது மனசு பாவன்டி.


இடுப்பு எங்கடிக் காணல. 

மடிப்புச் சுங்கடி மறப்புல.

வெடுக்கு நடையின் மிடுக்குல

படபடக்குது மனசுல.


நடப்பது எதுவோ நடக்கட்டும்.

நடந்தும் நலமே விடியட்டும்.

பழனிச்சாமி அருளாலே

பாலும் பழமும் கிடைக்கட்டும்


காத்துல பாவாடை பத்திரம் பாத்துக்கோடி அள்ளுது.

மானம் போகுமோ அஞ்சாதே!

மாமன் என்னை மிஞ்சாது.


கொரனா ஒழிஞ்சும் போனது

குடும்பம் ரெண்டும் கலந்தது.

கோவில் வாசல் திறந்தது.

ஆவது எல்லாம் ஆகட்டும்.


Saturday, 27 December 2025

சாதனை


சாதனை.

அறிவால் செயலால் உலகம் பயன்பெற சாதிப்பது சாதனை
சாதனைதான் புகழ். புகழே பேர் சொல்லும்.
இறப்புக்குப்பின்னும் வாழ என்ன நீ சாதித்தாய்?

இறந்தபின் உடலோடு பேரும் அழிகிறது.
இருக்கும்வரை அழைக்கத்தான் பேரும் உடலும்.
புகழுடையார்க்கு மரணமில்லை
புகழுடையார் மட்டுமே பேருடன் வாழ்கின்றனர்.

உயிர் இருந்தால் பணக்காரன்.
உயிரற்றால் பிணந்தானே.
பிணத்துக்கு
பேருமல்ல உறவுமல்ல.
உயிருக்குத்தான் உறவும் பேரும்
உடலுக்கல்ல.

உயிர் பிரியும்போதே உலகமும் உன்னை மறந்து போகும்
உயிருள்ள வரைதான் உறவும் உரிமையும்
மரணம் வரைதான் வசதியும் வாழ்க்கையும்
மரணம் வரைதான் பகையும் வெறுப்பும்

மரணம் ஒரு தண்டனையல்ல விடுதலை.
பாவியின் மரணத்தைக்கூட நியாயப்படுத்தல் பாவம்.

கொ.பெ.பி.அய்யா

அண்ணன் என்னடா தம்பி என்னடா!

அண்ணன் என்னடா தம்பி என்னடா!

அண்ணன் என்னடா! தம்பி என்னடா!
கொஞ்ச நாள் உறவினிலே
தன்னோடு ஒருத்தி துணையா வரும்வரை,
பெண்சாதி பிள்ளைகள் 
குடும்பம் ஆகும்வரை
தன்னோட குடும்பம் தனியே பிரியும்வரை,
அண்ணன் தம்பி உறவும் அதுவரைதானடா.

சொந்தம் பந்தம் சுயநலமாகிச் சுருங்கிப் போனதடா.
பற்று பாசம் எல்லாம் விலகி
பகையாய் உறவும் விசமாய் ஆனதடா.
என்ன சொந்தம் என்ன பந்தம்
எல்லாம் கொஞ்சநாள் பழக்கம் போலானதடா.

சின்னஞ்சிறு வயசுலதான்டா.
அண்ணந் தம்பி உறவுந்தான்டா,
அடிச்சாலும் புடிச்சாலும்
துடிச்ச இரத்தன்டா,
அடிபுடியாகிக் கொலைவெறிக் கோலம் ஏனடா?

பள்ளிக்கூடம் போகையில
துள்ளி நாம விளையாடயில
அள்ளி அள்ளி முத்தமிட்ட
அண்ணன் தம்பி உறவுதானடா.
சொல்லிச் சொல்லி வியந்த உறவடா,
சுற்றம் பேசக் கசந்து போனதடா.

தாயவள் சொல்லைக் கேட்டோமடா.
தந்தைச் சொல்லை மதித்தோமடா.
பாய் ஒன்றில்தானே படுத்தோமடா.
பகுத்துண்டு சேர்ந்து மகிழ்ந்தோமடா
வளரும் போதிருந்த
பாசமெங்கடா?
வாழும் போது மட்டும்
வழிமாறிப் போனதென்னடா?

கருவறை ஒன்றில்தானடா
உருவாகிப் பிறந்தோமடா.
ஓருயிரில்த் தானே உதித்தோமடா
பிரிவின்றிப் பாசமாய் வளர்ந்தோமடா.
அந்நியர் எவரும் பகைக்கும் போதிலே
ஒற்றுமைப் பலமா நின்னோமடா.
வாலிபமாகி விளைஞ்சோமடா.
குடும்பங்கள் பலவா கலைஞ்சோமடா.

தின்பண்டம் பகிரயில
தன்பங்குச் சண்டை இல்லடா.
வன்னெஞ்சப் பகையென்ன
சின்னெஞ்சில் தெரியலடா.
பிரிஞ்சிருக்க அறிஞ்சதில்ல
அறிஞ்சதொன்னும் மறைச்சதில்ல.
சொத்துண்ணு பிரிக்கையில
சொந்தம் பந்தம் நிசமேயில்லடா.

கூட்டமா வாழ்ந்தோமடா.
குடும்பமா ஆண்டோமடா.
நிலங்கூடி இருந்தோமடா
நிறைஞ்சது களஞ்சியன்டா.
முழமுழமா பகுந்தோமடா
களஞ்சியமேக் காணோமடா.
மச்செல்லாம் குச்சியாச்சி
மனைபலவா பிச்சாச்சிடா.

பங்காளி என்பவன் பகையாளிதானோடா.
நம்பியிடக் கூடாத நயவஞ்சகந்தானோடா
நண்பன் மட்டும் என்றுமே நல்ல துணைஆவானடா.
அண்ணன் தம்பி பாச மெல்லாம்
அறியாத வேசமடா.

கொ. பெ. பிச்சையா.









Wednesday, 24 December 2025

கரங்கள் கோடி மறித்தாலும்....

கரங்கள் கோடி கூடி மறித்தாலும்

கரங்கள் கோடி கூடி மறித்தாலும்
காலம் ஓடித் தேடி ஒளியாது.
ஓராள் என்று மாறாக எண்ணாதே.
ஒன்று பத்து நூறு ஆயிரம் 
இலட்சம் கோடியெனப் பல்கும்.
ஓரனுப் பரிமாண உண்மை விளங்கும்.

அதிகாரப் போதை கதிமாறி அழிக்கும்.
சதிகாரச் சூதை விதிசாடிப் பழிக்கும்.
வரலாற்றுப் பாதை அரக்கரை இழிக்கும்.
கொலைப் பாவங்கள் காலத்தில் விழிக்கும்.

நல்லவன் எதுவோ வல்லவன் அதுவே.
உள்ளதும் உண்மை வெல்வதும் நிசமே.
சொல்லும் சத்தியம் வல்லமை அதுவே
வெல்லும் சாத்தியம் உள்ளதும் நிசமே.

மக்கள் சக்தி மகத்துவ வெற்றி.
சகத்துவ உத்தி சரித்திர உண்மை.
அகத்துள் ஒருவன் அன்பின் வெற்றி.
முகத்திரை கிழித்து முடிப்பதும் உண்மை

துரியோன் கூட்டம் அரியணை ஆசை.
மதியாத ஆட்டம் புடுங்கியாச்சு பீசை
ஆகாத ஆசையில ஊத்துகிற தோசை.
வேகாத விரசத்தில  வீசுறாங்க கேசை.

கிழட்டு நரிக்கூட்டம் ஓடுதுபார் ஓட்டம்.
விளையாடி முடிஞ்சது கலைஞ்சதவர் ஆட்டம்.
வாலிபச் சிங்கங்கள் வந்தனக் களமாட
காலியிடம் நிறைஞ்சாச்சி நாளையெம் வசமாச்சு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 10 December 2025

அப்பாவைப் போலயாரு?

அப்பா அப்பாதான்.

அப்பா உன்போல் யாருனு சொல்ல.
ஆண்டவனுங் கூட உன் போல் இல்ல.
சொப்பனமே உனக்கு நானே 
அப்பா உனக்கு எல்லாம் நானே.

நடையைப் பழக்க விரலைப் பிடித்தாய்
உலக வழக்கைச் சொல்லித் தந்தாய்
வளர்ந்து படியேறக் கரம் கொடுத்தாய்
படிக்க வைத்து ஆளாக்க உழைத்தாய்.

விடியலை வேர்வையில் ஏற்றினாய்
படிகளில் ஏற்றி ஞானம் ஊட்டினாய்.
தோள்மீது உயர்த்தி ஞாலம் காட்டினாய்.
நீ காணா உலகை நான்காணச் செய்தாய்

உன்னுயரம் அதனில் என்னுயரம் கண்டாய்.
பின்னுயரம் கண்டு பெருமை கொண்டாய்
கனி கொடுக்கும் வரையும் காத்திருந் தாயோ!
கனிகொடுக் கும்போது நீ பறந்தாயோ!

ஆல மரமாய் நிழல்  தந்தாயே!
நாலும் அறிய நீ நிறைந் தாயே!
என்னென்ன ஆசைகள் என்மீது வைத்தாய்
எனக்காகத் தானே ஓடியோடி 
உழைத்தாய்

திருத்த் தானே வருத்தி நிமிர்த்தாய்
நிறுத்தி என்னை நிமிர்ந்து பார்த்தாய்.
பொருத்திப் புகழோடு வரைந்து வார்த்தாய
செருக்கில் என்னில் பெருமை சேர்த்தாய்.

கோவத்தில் அடித்துப் பின்னே
குழுங்கித் துடித்து அழுவாயே!
தீபம் வாழ்வில் ஏற்ற நீயே!
யோக மெல்லாம் ஏற்றாய் நீயே!

பக்கத்திலே படுக்கவைத்து
பழக்கம் விட்டு ஆற்றுவாய்
கக்கத்தில் தூக்கி வைத்து
கதைக ளெல்லாம் சொல்லுவாய்.

பாவி நான் அடிச்சேண்ணு
நீவி விட்டுக் கெஞ்சுவாய்.
கோவித்ததும் குத்தமுண்ணு
ஆவிக் கொஞ்சி முத்துவாய்.

தப்பு செஞ்ச என்னை நீ!
தண்டிக்காம விட்டுட்டு
ஒப்புக்கு அம்மா முன்னே கண்டிச்சாப்புல நடிச்சுருவ!

நல்லதொரு கூட்டாளி நீ!
நாளெல்லாம் பாட்டாளி நீ!
சுமைதாங்கிக் கல்லா நீ!
சுமந்து சுகம் கண்டாய் நீ!

என்ன நான் கேட்டாலும் நீ
இல்லயிண்ணே சொல்லமாட்டாய்.
கையில் காசு இல்லைண்ணாலும்
கடன் வாங்கக் கூச மாட்டாய்.

கொழுத்து நின்ன ஆலமரம்
உலுத்தப் பின்னே ஓய்ந்தது போல்
விழுது என்னை நம்பினாயோ!
தொழுது என்னைக் கடன் செய்தேனோ!

அப்பாவப் போலொரு 
தோழன் இல்ல 
அப்பாவப் போல் நல்ல 
ஆசானும் இல்ல
அம்மாவப் போலே சொல்ல 
ஆகாயம் நீயே அப்பா!

உன் நிசத்தை மதியாத நான்
உன் நிழலைக் கண்டு தொழுகிறேன்.
இருக்கும் போது புரியாத உன்னருமை
இல்லாத போதே அறிந்தேன் உன் பெருமை.
சும்மா சொன்னாப் போதாதப்பா.
அம்மை அப்பன் நீதானப்பா!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.