அவலங்களின் வலி
வறுமை முதுமைத் தனிமை.
வன்மைக் கொடுமைத் தீமை.
சமூக நீதி மறுப்பிழிமை
சரித்திரம் புரட்டும் பிறப்புரிமை.
பலமேல் அடுக்கின் கோபுரம்.
கலசமாய் ஒரு சிலர் வாழ்வளம்.
தளத்துயர் பாமரன் சுமை தாங்கும்
களம் படும் அவலப் பாவச் சமூகம்.
உணவின்றி நீரின்றிக் காற்றுமின்றி
கனவின்றித் துஞ்சக் காலமுமின்றி
எடை மொத்தச் சமூக இரக்கமுமின்றி
கடைக்குடி நைகிறான் கேட்பாரின்றி.
காலம் இதுவும் கடந்து விட்டால்
கோலம் அவனிலை கிழிந்து விட்டால்
தூலம் முறிந்து பிரளயம் போல்பாழ்
சீலம்புரண்டு ஞாலம் தூள்.
வலிகள் ஆய்ந்து வகை காண்பீர்!
பலிகள் ஓய்ந்த தகை ஓம்பீர்!
துளியினித் தாமதம் துயரம்தான்.
எளியவன் பாவம் சாபம்தான்.
வரலாறு சொல்லும் அனுபவங்கள்
புரளாது கொள்ளும் நியாயங்கள்.
திரும்பும் தீக்கணைப் புரட்சியங்கள்
விரும்பும் பூக்கணை விடயங்கள்.
பூவொன்று புயலாய்ச் சீறுமுன்
மேவிப் பரவிச் சேருமுன்
தேவைகள் உணர்ந்து தீர்ப்பாரார்?
தேவனவனேப் புவிக் காப்பார்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment