Thursday, 26 December 2013

நீதியும் நிறம் மாறும்.

சங்கம் பங்கம்

விலை மகளெல்லாம்
கலை மகளென்றே
தலைவிதி மாறும்
நிலைமை ஆகும்!

தாலியும் கூட
வேலியை மீறும்.
தகாத உறவும்
தர்மம் ஆகும்.

ஆணும்  ஆணும்
காமம் பழகும்
அனுமதி விதியும்
அவசரம் ஆகும்!

தேவை கருதும்
திருடுங்கூட
பாவம் விலகும்
பாதுகாப்பாகும்!

கொலைகள் புரியும்
கொடூரங்கூட
நிலைமைகள் கூறி
நியாயங்களாகும்!.

சங்கம் அமைத்து
சண்டைக்கு நின்றால்
பங்கம் எதுவும்
அங்கீகாரம் ஆகும்!

சங்கம் ஒன்றில்
சங்கமம் கொண்டால்
நெறி பிழை யாவும்
உரிமைகள் ஆகும்.

அரசியலமைத்து
எதுவும் செய்வார்
உரசிப் பார்த்தால்
ஊரையும் எரிப்பார்!

சட்டங்கள் வளைந்து
சண்டைக்குப் பயந்தால்
குற்றங்கள் நித்தமும்
கும்மிதான் அடிக்கும்!

அரசியலும் சினிமாவும்
அவரவர் பிழைப்பு!
புரியாமல் ஏனோ!
எரிகிறாய் வீணே!

வேடங்கள் கலைந்தால்
பாடங்கள் புரியும்!
விழித்தால் தெளியும்
குழியொளி இருளும்!

உரிமைக்குப் போரானால்
சரிதான் நேரானால்.
திருத்தவும் சங்கமானால்
அருத்தம் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment