Sunday, 31 August 2025

பாலை வனமும் பூப்பூக்கும்.

பாலை வனங்கூட பூப்பூக்கும்.

பாலை வனங்கூடப் பூப்பூக்கும் அம்பி.
சோலை வளமாகக் காய்காய்க்கும் தம்பி.
ஆக்கும்  கரங்கள் அணிசேர்ந்தால் அம்பி
ஆகாயங் கையெட்டித் தொடுவானம் தம்பி.

ஆகாத ஒன்றேது துணிந்திட்டால் அம்பி.
வேகாத பருப்பேது விறகாலே தம்பி.
நோகாது நுங்குண்ண கிட்டாது அம்பி 
போகாது ஊருவந்து சேராது தம்பி.

மேடேறி ஆறேறி ஓடுமா அம்பி
காடூறக் கழனிக்குப் பாயுமா தம்பி.
செய்யாமல் எதுவும் சீருண்டா அம்பி.
பெய்யாமல் மழையும் நீருண்டா தம்பி.

பாடின்றி வாழ வீடில்லை அம்பி.
வீடின்றி ஊரு நாடில்லை தம்பி
உழையாப் பிழைப்பு உயிர்க்காது அம்பி.
மழைக் காலம் இளைமை தொலைக்காதே தம்பி.

கவிஞர் கொ. பெ. பிச்சையா.

Friday, 29 August 2025

இரகசியமும் அதிசயமும்

இரகசியம் அதிசயம்

பூவுக்குள் தேனெடுக்கும் இரகசியம்
தேனீக்குத்தான் தெரிந்த அதிசயம் 
வானுக்குள் நீ ரெடுக்கும் இரகசியம்
காற்றுக்குத்தான் அறிந்த அதிசயம்.

மாதுக்குள் மதுவிருக்கும் இரகசியம்
காதலில் தான் விளங்கும் அதிசயம் 
கண்ணாலே மொழி பேசும் இரகசியம்
பெண்ணாலே தான்மொழிந்த அதிசயம்.

வண்ணத்தின் கலைகண்ட இரகசியம்
வண்ணத்துப் பூச்சியின் அதிசயம்.
எண்ணத்தின் சிலை கொண்ட இரகசியம்
கண்ணத்தின் சுவை நின்ற அதிசயம்.

மொட்டுக்குள் மலர் விரியும் இரகசியம்
கட்டுக்குள் கன்னியின் அதிசயம்.
சிட்டாக வண்டாடும் இரகசியம்
பட்டாடைப் பாவாடை அதிசயம்.

பெண்ணென்றால் கண்ணென்ற இரகசியம்.
மண்ணின்ற மாண்பது அதிசயம்.
பொன்னென்ற ஒளி அந்த இரகசியம்
பெண்ணவள் வழிவந்த அதிசயம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Saturday, 2 August 2025

பசிக்குது

பசிக்குது 

பசிக்குதா பசித்தால் புசி.
புசித்தல்தான் உயிர்.
உயிர்த்தல்தான் உடல்.
உடல்தான் அடையாளம்.
அடையாளம்தான் வாழ்தல்.
வாழ்வது வழங்கல்.
வழங்கினால்தான் மனிதன்.
மனிதன்தான் மனதன்.
மனதனே வாழ்கிறவன்.
வாழ்ந்தவரே தெய்வம்.
தெய்வங்ககளைப் போற்றுவோம்.

கொ. பெ. பிச்சையா

..