Wednesday, 25 December 2013

மக்கள் விளங்கத்தான்.

தேடிக் கூடுவோம்!

என்னைத் தேடித் தேடி நீயும்
உன்னைத் தேடித் தேடி நானும்
திக்குத் தெரியாத காட்டில்
திரிந்து அலைகிறோம்நண்பா
புரிந்தும் தொலைகிறோம்.

நீயும் கவிஞன் நானும் கவிஞன்-ஒரு
நிலையில் இருக்க மறந்தோம்.
பாயும் கற்பனைகள் பயணத் திசைகளில்
நீயும் நானும் பிரிகிறோம்பின்
எண்ண அலைகளால் உணர்ந்து புரிகிறோம்.

தேடும் பொருளென்ன கூடும் விதமென்ன  
விடை சொல்லும் தருணங்களே!
ஓடும் பாதைகள் நேரும் அனுபவங்கள்
பாடும் பொருள் சொல்லுமே!அது
பாடிப் பரவசம் பரவும் திசை செல்லுமே!

ஓடும் திசைகள் தேடும் பொருள்கள்
ஒருமித்தம் ஆவதில்லை.
கூடும் பொழுததில் தேடிய செல்வங்கள்
கொட்டவும் மறுப்பதில்லை---தேடிக்
கண்டதில் விளங்கவும் பேதமில்லை.

மக்கள் விளங்க நாமே தேடும்
மனிதம் விளக்கும் மூலிகைகள்.
பற்பல பலன்கள் பற்பல விதங்கள்
சொற்கள் சொல்லும் சுந்தரக் கவிகள்--நாமும்
இப்புவி உயர இன்னும் தேடுவோம்.


கொ.பெ.பி.அய்யா.  

No comments:

Post a Comment