Sunday, 29 December 2013

பாவம் செய்துவிட்டோம்.

பாவம் செய்துவிட்டோம்

அரசு இயல் தூயனை
ஆக்கம் செய் நேயனை
இல்லறம் துறந்தானை
ஈடில்லா அறத்தானை
உண்மையை வாழ்ந்தானை
ஊழலை வென்றானை
எளிமையே கொண்டானை
ஏழையில் நின்றானை
ஐயம் தெளிந்தானை
ஒழுக்கம் கண்டானை
ஓம் பொருள் சொன.னானை
ஔவியம் அறியானை
அஃறினையும் புரிந்தானை

கர்மவீரர் என்பவராம்
காமராசர் அன்னவராம்.
தர்மரையே தோற்கடித்தோம்
துர்மனிதக் கூட்டம் நாம்.

அரசியல் எனச்சாய்ந்து
அய்யகோ தோற்கடித்தோம்
அதுபாவம் அறியாதும்
அநியாயம் செய்துவிட்டோம்.

சனநாயகம் தோற்கடித்து
சரித்திரம் இழிவானோம்.
பணனாயக அரசியலில்
நிரந்தரமாய்க் கைதியானோம்

தங்கத்தை தொலைத்துவிட்டு
தகரத்தில் கொட்டடித்தோம்.
சிங்கத்தை விரட்டிவிட்டு
சிறுநரிகள் நுழையவிட்டோம்.

புருடனை புறந்தள்ளி
திருடனை உறவு வைத்தோம்.
அருமையை இழந்துவிட்டு
சிறுமையை வரவழைத்தோம்.

பாவம் செய்த பாவியர்க்கு
இலாபம் தான் என்ன வரும்?
கோவம் கொண்ட தர்மத்திடம்
சாபம்தான் வாங்கிக் கொண்டோம்.
.
பொதுநலம் எனமயக்கும்
சுயநல அரசியலை
புரிவதும் எந்நாளோ!
கரையேறல் எப்போதோ!

ஒப்பில்லா அவர்நாமம்
தப்பிடச் செப்புவர்.
ஒப்பிட எவருந்தான்
இப்புவியில் பிறப்பரோ!

பாவத்தின் தண்டனையை
சாபத்தின் முன்வினையை
மீண்டும் ஒரு காமராசர்
ஆண்டுதான் தீரப்பாரோ!

கொ.பெ.பி.அய்யா.

!

No comments:

Post a Comment