Friday, 28 November 2025

ஆலமரம்.

ஆலமரம்

குளக்கரையில் ஒரு ஆலமரம் --செழித்து 
கிளை பரப்பி வாழும் மரம்.
நிழல் அகற்றி இலை நிரப்பி--அகன்று
வளம் கொழித்து ஆளும் மரம்

தேடி வந்த பறவைகளை--ஒன்றாய்
கூடி வாழ்ந்த உறவுகளை.
ஓடி வந்த கழுகு ஓன்று --உறவை
ஓட்டி விடப் பார்க்குதம்மா.

கலைத்து விடக் கத்துதோ--பந்தம்
உலைத்துக் கெடச் சுற்றுதோ.!
பழுத்து விட்ட இலைகளே--உழுத்து
நிலை குலைந்து உதிர்ந்தனவோ!

தேடி ஓடிக் கலைத்துப் போன--திருட்டுக்
கழுகு மட்டும் பறந்தது.
பொன் மனத்துச் சொந்தங்களை--எந்த
வன்மனந்தான் குலைத்திடுமோ!

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்--நன்றி
ஆராரும் மறந்தும் போனாலும்.
அம்மாவால் காத்த மரம்--இதை
ஆரசைக்கக் கூடும் அம்மா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 24 November 2025

உழைத்து வாழ்க!

தமிழைப் பிழைக்காதே!

உழைத்து வாழ வேண்டும்---பிறர்
உழைப்பில் வாழ்தல் பாவம்.
பிழைத்துப் பேசுந் தமிழில் --பிற
மொழிக் கலப்பென்ன இலாபம்

தாய்மொழி தவிர்த்தல் பாவம்--பேசி
பிறமொழி இழித்தலும் நோகும்.
தாயை மதிப்பது யோகம்--அதுபோல்
தாய்மொழிக் காப்பதும் தாகம்.

தாய்மொழி கழிப்பது வேசம் --பெற்ற 
தாயை இழிப்பதும் மோசம்
பிறமொழி கலந்து பேசி--தனது
பிறப்பை இழிப்பாள் தாசி.

தூய்மைப் பாசம் தாய்மை--தாய்
வாய்மொழி மணக்கும் மேன்மை,
நோய்மைப் பிறமொழி வாசம்--ஈன்ற
தாய்மை மறக்கும் நாசம்.

அம்மா என்ற சொல்லில்---உயிர்
ஆன்மா உயிர்க்கும் உள்ளில்.
சும்மாப் பிறமொழி மோகம்--வீண்
சுமையாய் சுமக்கும் ரோகம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Sunday, 23 November 2025

சின்னக்குட்டி.

சின்னக்குட்டி.

அடியே சின்னக்குட்டி செல்லம்மா!
விடிஞ்சிரிச்சா சொல்லம்மா
விடியலுனு சொன்னாங் களே
விடிஞ்சிரிச்சா பொன்னம்மா.?

அடைஞ்சு போன ஆதவனோ!
அடைஞ்சி எங்க தொலைஞ்சானோ!
காந்தி சொன்ன விடியலைப் போல்,
காரிகையரும் காண்பா ரோ!

நடு இரவே ஆனாலும்
நகை யோடு நங்கையர்
சுதந்திரமாய் உலாவி வர
நிரந்தரம் விடிஞ்சிரிச்சா.?

பால் குடிக்கும் பிஞ்சுகளை
பாலியல் வன் கொடுமை.
காமக் கொடூ ரர்களின்
களி யாட்டம் குறைஞ் சிரிச்சா?

கொலைக் களவு கொள்ளைகளும்,
நிலை குலைந்து முடியவில்லை.
விலை இல்லா சலுகைகளும்,
தலை குனிந்து முடங்கவில்லை.

அடங்க வில்லை விபத்துக்களும்,
அரங்கேறுது தினம் தினமும்.
அடக்கிட நாளை இல்லை.
விடியலுக்கு வேளை இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


.


Friday, 21 November 2025

கரை மேல் காக்க வைத்தான்.

கரை மேல் காக்க வைத்தான்.

தரை மேல் பூக்க வைத்தான்--இறைவன்
கரை மேல் காக்க வைத்தான்--என்னவரை
தண்ணீரில் ஓட விட்டான்--பெண்ணை
கண்ணீரில் கரைய விட்டான் 

கட்டிய கணவர் கடலில் உழைக்கிறார்.
தொட்டில் குழந்தை தூக்கத்தில் விழிக்கிறான்
தட்டில் சோற்றைத் தட்டிக் கழிக்கிறான்
தந்தை எங்கென எட்டி உதைக்கிறான்.

வைகறைக் காலைப் பொய்கரைப் போனவர்
மைபொழு தாகியும் மறுகரைக் காணோம்
சிங்களப் பாவியர் செய்வார் பிணை
வங்கக் காவல் ராமசாமி துணை.

நிச்சயம் ஆழ்கடல் நீளும் எல்லை
இலச்சத் தீவை இழந்ததால் தொல்லை.
இறைவன் படைத்த கடலுக்கும் சண்டை 
உடைவது நாளும் மீனவர் மண்டை.

உலகத்து உறக்கம் கலையவும் இல்லை.
கலகத்தின் கலக்கம் விலகவும் இல்லை
உழைப்பவர் கவலை ஓயவும் இல்லை.
பிழைப்பது எப்படி புரியவும் இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 20 November 2025

மீனவர் உலகம்.

மீனவர் உலகம்.

வானே காவல் தானேத் துணையாக
மீனே வாழ்வாக கரையே கனவாக
நாளும் பிழைக்கும் மீனவக் கூட்டம்.
ஆளும் அரசுகள் வேணும் நோட்டம்

வேர்வைக்  குளியலில் விளைந்த உப்பு
கரைந்து கடலில் நிறைந்தது உவர்ப்பு
கரை சிந்தும் கண்ணீர் கடலில் கலப்பு.
தரை வந்தே சுவைப்பர் நந்நீர் இனிப்பு

பார்வை யாவும் வீசிய வலையில்
தீர்வை இறைவனில் தேடும் பிழைப்பில் 
வாழ்வைத் தினமும் தொடுகின்ற நிலையில்
வாழும் சமூகம் மீனவர் கனவில்.

நாட்டுக்கு உணவளிக்கப் போருக்குப் போகிறார்.
சீட்டுக்குப் பணமளிக்கக் கடலுக்குள் நோகிறார்.
தனக்கென என்னதான் தன்பாடு தேடுகிறார்.
மனக்குறை நோவுக்கு  யாரைத்தான் நாடுகிறார்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Wednesday, 19 November 2025

எங்கோ மின்னொளி தோணுதே

தங்கம் தாரகை நாணுதே!

எங்கோ மின்னொளி தோணுதே!
தங்கம் தாரகை நாணுதே!
திங்கள் எழுந்திடத் தயங்குதே!
எங்கும் ஒளிமயம் விளங்குதே!

பொழுது புலருதோ! மலருதோ!
நிழல் வளருதோ! நீளுதோ!
வழி தெரியுதோ! புரியுதோ!
விழி !பேசுதோ! கூசுதோ!

அதி காலைப் பொழுதென அகவுதோ!
புது வேளை நாளெனக் கூவுதோ!
விடியல் தானென வாசல் திறந்ததோ!
வீதிகள் கோலங்கள் நிறைந்ததோ!

காலங் காட்டி நேரம் மறந்ததோ!
கோலம் பார்த்து ஓரம் மறைந்ததோ!
நாளும் இதுபோல் இல்லையே!
யாவும கடந்தது எல்லையே.!

இதுவவென்ன நிகழ்ந்தது அதிசயம்..
எதுவெனக் கசிந்தது இரகசியம்.
புதுப்பெண் ஒருத்தி வரவுதான்.
அதுவெனப் புகழ்ந்தது தரவுதான்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 18 November 2025

செம்மொழி வாழ்த்து.

செம்மொழி வாழ்த்து.

முதல் ஒலியாம், 'அம்மா '
வளர் மொழியாம் செம்மை
வாய்த்தயிரு, 
கண்ணாம், கருவிழியாம், 
தமிழே வாழி!
கன்னல் இனிமை, வளமை, 
நாளும் இளமை, 
தமிழே வாழி!

பிறக்கும் பொழுதே பிறக்கும் ஒலி
பிறக்கும் உறவு அம்மாவாம். 
சிறப்பிதுபோல் உண்டோ!
பிறமொழி ஏதும் சொல்வீரோ!
உறியது செம்மொழி 
தமிழே வாழி!.

அறம்பொரு ளின்பம் 
அதன்பின் பெறும்பேறும்,
திருக்குறள் பொதுமறை 
ஞாலப் பெருமை 
தமிழே வாழி!
அனைத்தும் திறமாய்,
அமைந்தும் வளமாய் 
அவனியில் வாழும் 
அருமைத் தமிழே வாழி!

பன்மொழி ஏற்றுப் 
பதித்த இலக்கியங்கள், 
வண்பொலி வேற்றி 
வளர்ந்துமே 
தன்னிலைத் திண்ணமும் 
தேறியும் முன்னிலைப் 
போற்றியும் செந்தமிழ் 
வாழி வழுத்து!
வாழி!வாழி!வாழிய 
செந்தமிழே வாழி!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

செல்லக் குழந்தைகளே!

பாப்பாப் பாட்டு.

செல்லக் குழந்தைகளே
வெல்லக் கட்டிகளே!,
நல்லப் பேரெடுத்து
நாளைவழி நடத்துவீர்!

காந்தித்
தாதாப் போல உண்மை 
கட்டாயம் பேச வேணும்--நீ
சாந்தமாக அவர்போல 
சரித்திரம் படைக்க வேணும்.
அகிம்சை யெனும் ஆயுதமே--பொது
அறப்போர்கு கொள்ள வேணும்.

பாட்டெழுதிப் பாரதி போல்
பாரதத்தை மீட்டது போல்--உலக
நாட்டு மக்கள் நலம் வாழ
நலம்பாடிக் காட்ட வேணும்.
படைக்கப் பட்ட அத்தனையும்--சொந்த
உடைமை போல் காக்க வேணும்.

உரிமைக் காகப் போராடி
உயிர் நீத்த  உத்தமர்கள்--நமக்குப்
பெற்றுத் தந்த சுதந்திரத்தை
பேணி நன்றுக் காக்க வேணும்.
சனநாயகம் உயிர் மூச்சை--பாரில்
சமூகத்தில் போற்ற வேணும்.

வீடுகளே நாடுகளாம்
நாடுகளே மாநிலங்கள்---ஒன்றிய
உலகமே மைய்யமாக
ஓராட்சி ஆளவேணும்
மக்கள் ஒன்றுகூடி--- அமைதியில்
ஓரணியாய் வாழவேணும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 17 November 2025

கனவு காணுவீர்

கனவு காணுவீர்!

கனவு காணுவீர்! கனவு காணுவீர்
புதிய பாரதம் கனவு காணுவீர்!
கலாமின் இளைஞர் காந்திய இந்தியாக் கனவு காணுவீர்!

விதியென வெம்பி வீணாகிக் கிடக்காமல்,
கனவு காணுவீர்! கனவு காணுவீர்!
உலகின் முதன்மை உன்னத இந்தியாக் கனவு காணுவீர்! 
கலாமின் கனவு நினைவாகிடக் கனவு காணுவீர்.

ஊழல் ஓழிந்த உன்னத உலகைக் கனவு காணுவீர்.
ஆளுமை உண்மை  ஆளும் நன்மை
அடையக் கனவு காணுவீர்.
மேலும் மனிதம் வாழும் புனிதம் கனவு காணுவீர்.
நாளும் புதுமை போலும் இளமை இந்தியாவைக் கனவு காணுவீர்

ஏழ்மை யில்லா உலகினைக் கனவு காணுவீர்! 
இந்தியத் தலைமை ஏற்கு முலகைக்
கனவு காணுவீர்! 
அறிவியல் மேலாண்மை இந்தியாவைக் கனவு காணுவீர்.
பாழ்மை யில்லாப் படைப்பு உலகைக் கனவு காணுவீர்! 

இயற்கை வேளாண்மைக் கனவு காணுவீர்!
தரிசில்லாப் பசுமைப் பூமிக் கனவு காணுவீர்! 
பசுமை யெங்கும் பரவிய நிலங்கள்
கனவு காணுவீர்! 
நதிக ளெலாம் கைகோர்த் தோடிடக்
கனவு காணுவீர்!

வரண்ட பூமி வையம் காணாக் கனவு காணுவீர்.
பரந்த வயல்கள் பாரெங்கும் பரவக் கனவு  காணுவீர்.
பகைமை அறியாப் பாச உலகைக்,
கனவு காணுவீர்! 
சுயநலம் இல்லாச் சுற்றம் சூழக் கனவு காணுவீர்!

அச்சம் மறந்த உலகைக் காணக்
கனவு காணுவீர்! 
வீடுவாசல் பூட்டிடா விடுதலை காண
கனவு காணுவீர்! 
நடுச் சாமமும் பெண்கள் நடமாடிடக்
கனவு காணுவீர்! 
நகைப் பணம் ஆசை ஒழியக்  கனவு காணுவீர்! 

விலைவாசி ஆளுமை விவசாயி ஆளக் கனவு காணுவீர்! 
வேளாண்மைச் செருக்குத் தாளாண்மைக் கனவு காணுவீர்! 
வேலையிலா அவலம் ஒழியக் கனவு காணுவீர்! 
உழையாத் திருடர் உழைத்து வாழக்
கனவு காணுவீர்! 

இலவசச் சலுகை  ஏங்காச் சமூகம் கனவு காணுவீர்! 
விலையில்லா ஓட்டு விளங்கும் அரசியல் கனவு காணுவீர்!
பிச்சைக்கு அலைந்திடும்  பாவம் ஒழியக் கனவு காணுவீர்!
நடைபாதைக் குடும்பம் நாடறியா 
உண்மைக் கனவு காணுவீர்!

சமாதானம் சமத்துவம் உலகைக்
கனவு காணுவீர்!
சாதி மதப் பேதம் ஓழியக் கனவு காணுவீர்! 
அந்நியம் மறந்த ஒன்றியம் உலகை
கனவு காணுவீர்!
எல்லோ ரெல்லாம் பெற்றோ மென
கனவு காணுவீர்!

பாலியல் வன்கொடுமை வேறோ டழியக் கனவு காணுவீர்! 
கொலைக் களவுக் கொடுமைக் குற்றம் நீங்கக் கனவு காணுவீர்! 
தனியொரு மனிதர்கும் உணவிலா வறுமை ஒழியக் கனவு காணுவீர்!
பிணி யில்லா உலகம் பேறாய்க் காண கனவு காணுவீர்! 

வானங் கீழேவாழும் உயிர்கள் யாவும் உறவெனக் கனவு காணுவீர்! 
நல்லோர் வல்லோர் நாடாளும் உண்மை கனவு காணுவீர்!
காந்தி காமராசர் கக்கன் போன்ற
கடவுள்கள் ஆளக் கனவு காணுவீர்!
இளைய பாரதம் இதுவே சமயம்.
இப்போதே கண் விழியுங்கள்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

வாய்ப்பு

வாய்ப்பு 

வாய்ப்பு வாய்க்கும் ஒரு முறை
வருந் தருணமும் ஒரு முறை
போனால் திரும்ப வாராது
ஆனால் அதுவே உனக்கான நேரம்.

தானாத் தானே அழைக்கும் 
வீணாப் போனாத் தொலைக்கும்.
யோகம் இருந்தால் திரும்பும்
ஆகுமென்றால்  மறுமுறை விரும்பும்.

வாய்ப்பு என்பது மழையது போல
ஏய்க்கும் பலமுறை பேய்வது போல
அதனால் மெத்தனம் கூடாது வீழ
எதனால் என்பதை யோசிக்க ஆழ.

தருணம் அது கணப்பொழுதுச் சலனம்
திரும்பாத சகுனம் அழுதென்ன பலனும்
மடியில் விழ நொடியில்  தவறக் கரணம் 
விடியல் முடிந்தும் தொடராது சரணம்.

வாய்க்கும் வாய்ப்பு ஒரு முறை
வாய்த்தது அதனை பற்றி அடை
வரவை விட்டு வருகைக்குக் காத்திராதே
இறைவன் ஆணை இதுவென விடாதே.

கவிஞர்.கொ. பெ. பிச்சையா.

Saturday, 15 November 2025

மனிதனைத் தேடி.........,...........!

மனிதனைத் தேடி,...............!

மனிதன் எங்கே வாழ்கிறான்
மனிதனைத் தேடி அலைகிறேன்.
மனிதன் போன்ற படைப்புக்களில்
மனதனைத் தொலைத்தே தேடுகிறேன்.

மனிதன் என்ற அடையாளம் 
மறந்து தொலைத்தான் இறைவனோ!
மனிதர் போன்ற படைப்புக்களில்
மனதை மறந்து விட்டு விட்டான்

மனிதரில் மனிதனைத் தேடுகிறேன்
இனம் தெரியாமல் வாடுகிறேன்.
ஆறறி வொன்றில் ஓரறிவை
தூரறிவாகத் துடைத்து விட்டான்.

மனதே இல்லா ஓருருவை
மனதன் என்றும் நம்புவதோ!
மனமும் குணமும் இருந்தவரை
மனிதன் என்றே வாழ்ந்திருந்தான்.

அன்பும் கருணையும் இரக்கமும்
பண்பும் பழக்கமும் அடையாளம்.
எலும்பும் தோலும் போர்த்தியதால்
உலவும் ஓரினம் மனிதமாமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 14 November 2025

நிமிர்ந்து நில்லடா தம்பி!

நிமிர்ந்து நில்லடா தம்பி 

நேரம் நலமே நமிர்ந்து நில்லடாத் தம்பி!
ஊரோடு நீ உறுதிக் கொள்ளடாத் தம்பி! 
நேரும் யாவும் உன்வச மாகுந் தம்பி! 
யாரும் வரட்டும் வெற்றி உனக்கே தம்பி! 
துணிந்து தொடர்ந்து செல்லடாத் தம்பி!
பேரும் புகழாகி வெல்லடாத் தம்பி!

தருணம் நிகழ்வதும் தாராளம் அல்ல
வருணம் போலதும் வருகையும் அல்ல.
எப்போது வருமோ எவரும் அறியார்
அப்போது அதுவுன் கதவைத் தட்டும்
திறந்து பாரு வாய்ப்பதைச் சொல்லும்.

உன்னை நம்பித் தன்னைச் செலுத்து.
முன்னைப் பின்னை யோசனை நிறுத்து.
தருணம் அழைப்பதைத் தவற விடாதே.
கரணம் தப்பிக் காரியங் கெடாதே.
திரும்பாது மீண்டும் இழந்து விடாதே.

காலம் வரையும் கோலம் மாறாது
வாழும் முறையும் நாளும் தீராது.
எண்ணம் மாறி வண்ணம் நேராது
திண்ண மாகினால் எண்ணம் சோரது.
தருணம் இதுதான் மீண்டும் வராது.

கவிஞர். கொ. பெ.பிச்சையா.

Thursday, 13 November 2025

உள்ளம் ஒரு கோவில்

உள்ளம் ஒரு கோவில்.

உள்ளம் ஒரு கோவிலாம்.
உள்ளே உள்ளான் இறைவனாம்.
உள்ளம் தூய்மை யானதால்
உள்ளே வந்தான் இறைவனாம்.
கள்ளமில்லை கபடமில்லை
உள்ளிருக்கும் அவனால்.
பள்ளிக்கூடம் உள்ளேதான்
சொல்லித்தரும் சன்மார்கம்.

ஒளி நிறைந்த உள்ளம்.
வழி திறந்த இல்லம்.
மூடாத ஆலயம்.
வாடாத மாலையாம்.
ஓதாத மந்திரங்கள்.
வேதங்கள் பசனைகள்.
ஓயாத பூசைகளும்
தேயாத திருவிழாவாம்

அங்கிங் கெண்ணாது
ஆண்டவன் அவனையே
எந்நாளும் எப்போதும் 
என்னையே தொழுகிறேன்.
என்னுள்ளே இருக்கிறான்.
எங்கும் நான் செல்லேனே
உறைகிறான் என்னுள்ளே
இறைவன் எனை உணர்கிறேன்.

உள்ளத்துள் ஒளிர்கிறான்.
இல்லமதில் மிளிர்கிறான்.
வள்ளல் அவன் வாழ்கிறான்
அள்ளி யள்ளி வழங்குகிறான்
தெய்வீகம் நானானேன்.
திருமகன் ஆகினேன்.
பெய்வதும் அருள் மழையில்
மெய்வழியே நானானேன்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 12 November 2025

உன் வீடப் பாரு!

உன் வீடப் பாரு"

உனக்குனு ஒரு வீடு 
இருக்குனு தெரியுமா?
ஊருல உலகத்துல எவன் 
எப்படினு அலையாத.
ஏனிந்த ஆராய்ச்சி எதற்கிந்த 
வீண் பேச்சு.
அடுத்தவன் வீட்டுல 
மூக்கை நுழைக்கிற எதுக்கு?

வீட்டப் பாரு எங்கெங்கே 
ஓட்டை இருக்குனு பாரு. 
ஊரென்ன பேசுது 
உறவென்ன சொல்லுது கேளு
வீடு வீசுது கேட்கக் கூசுது  
வெளியில என்ன மோப்பம்?
உன்னோட அழுக்கு 
ஊரெல்லாம்  சிரிக்குது பாக்குது.

ஊரான் வீட்ட எட்டி எட்டிப் 
பார்க்குற நாயே நீ!
உன் வீட்டப் பாருடா 
பயலே பேயே நீயே!
அடுத்தவன் மனச 
அழவச்சு ரசிக்கிற உனக்கு.
கெடுத்தவன் கேடுக்கு 
கடவுளின் தீர்ப்பும் இருக்கு.

நினைச்சுப் பாத்தா நெஞ்சம் 
பதறுது கொதிக்குது பாவி
கெடுத்தே திரியும்  வஞ்சகப் பேய்கள்
அலையுதிங்கே சாமி.
பசுத்தோல் போர்த்தி புலிப்போல் 
பாயும் தெரிஞ்சுக்கோ!
பார்த்துப் பழகி பாதை விலகி 
சமத்தா வாழனும் அறிஞ்சுக்கோ

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 11 November 2025

வெறி கொண்டு முன்னேறு.

வெறி கொண்டு முன்னேறு.

வெறி கொண்டு முன்னேறு.
நெறி கண்டு உன்னோடு.
இலக் கொன்று வைத்துக்கொள்.
இலட்சியம் நோக்கிச் செல்.

அவலங்கள் அவமானங்கள்
அதுதான் வழிகாட்டிகள்.
சபலங்களைக் கடந்து செல்
சன்மானங்கள் தூரமில்லை.

அக்கம் பக்கம் திரும்பாதே
அது உன்னைத் திசைமாற்றும்.
சக்கரங்கள் கால்கள் சுழற்று
நிற்பதற்கு நேரமில்லை.

நோகாமல் நுங்கில்லை
வேகாமல் சோறில்லை
நிழல் தேட முயலாதே
உழைப்புக்குத் தோல்வியில்லை.

வெற்றியாளர் வரலாறு
கற்றுநீக் கரையேறு
வெற்றுக் கதைப் பேசாதே
பற்றியதை விட்டிடாதே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

வாழ்க்கைக் கணக்கு

வாழ்க்கைக் கணக்கு.

நல்லோர் சேர்க்கை கூட்டிக் கோ!
தீயோர் உறவைக் கழித் துக்கோ!
அறிவை நாளும் பெருக்கிக் கோ!
நேரத்தை நலமாய் வகுத்துக் கோ!
இன்ப துன்பங்கள் சமமாக்கு.
இதுதான் வாழ்க்கை அமைச்சுக் கோ!

பழக்கத்தைப் பொறுத்தே பண்பாடு.
பாதையும் அப்படி நிலைப்பாடு.
பூவைப் பொறுத்தே மணம் நாறும்.
பழக்கத்தின் வழியே குணம் மாறும்.
பழக்க தோசமே இனங் கூறும்.
நல்லதும் தீயதும் மனம் போலும்.

வாழ்வந் தாழ்வும் இரு பாகம்.
பகலும் இருளும் சம பாகம்.
அறிவே வாழ்க்கையில் ஒளியாகும்.
அறிவைப் பெருக்க வளம் பெருக்கும்.
நேரத்தை நலமாய் வகுத்திட்டால்
தேரும் புகழது தீர்வாகும்.

வாழ்க்கை என்பது வாய்ப் பாடு
கூட்டல் கழித்தல் பெருக்கி வகுத்தல்
வாழ்வுந் தாழ்வும் நேர்பாடு.
வாழ்க்கைக் கணக்குத் தீர்வோடு
இன்பமும் துன்பமும் சமம் பாடு
இறைவன் தீர்ப்பான் கணக்கோடு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 10 November 2025

வறுமை வந்தால்.

எண்ணத்தில் தூய்மை.

வறுமையில் வருந்தி வாடி விடாதே!
வசதியில் பொங்கி ஆடிக் கெடாதே!!
விட்டுப் போனோரை வேண்டித் தேடாதே!
விலக்கி வைத்தோரை ஊடிக் கூடாதே!

விரும்பி வந்தால் சிரிக்கக் கூசாதே!
விரும்பா ரோடு பழகிப் பேசாதே!
பழகும் முன்னே அவசரம் கூடாதே!
பழகிய பின்னே யோசனை ஆகாதே"

நன்றியை என்றும் மறந்து விடாதே!
நன்றி மறந்தாரை நெருங்கிப் பழகாதே!
கூடி வாழுங் கொள்கை விலகாதே!
பாடி ஆடும் பண்பில் நழுவாதே!

நம்பி வந்தோரை வெறுத்து விடாதே!
கும்பி பசித்தாற்கு கொடுக்கத் தவறாதே!
ஏழைப் பாழையரை இகழ்ந்து பேசாதே!
கூலி வேலையரைக் குறை காணாதே!

வஞ்சத் துரோகம் நெஞ்சிற் கொள்ளாதே
அஞ்சும் எளியரை ஆணவம் செய்யாதே!
எண்ணத்தில் தூய்மை ஏற்றிருந் தாலே
வண்ணத்தில் வாய்மை மாற்ற மிராதே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 8 November 2025

வண்டிக்காரன்.

வண்டிக்காரன்.

நானொரு வண்டி நீயோ ஓட்டி!
என்னை எங்கே ஓட்டிப் போகிறாய்?
ஆன்மா உள்ளே இறையோ நீ!
ஆட்டிப் படைப்பவன் நீயோ!

பூட்டிய வண்டி நான் உடலாக
மாட்டிய காளைகள் உயிராக,
வண்டிக் காரன் ஓட்டுகிறாய்.
பயணம் எங்கே செலுத்துகிறாய்.

வண்டிக்காரா வண்டிக்காரா"
வண்டியை ஓட்டும் வண்டிக்காரா!
சண்டிக் காளை நானானுலும்,
சுண்டி ஓட்டுநீ வகையாக.

வண்டி மாடுகள் எப்படியோ!
வண்டிக் காரன் நீ தானே.!
சேரும் ஊரை சேர்ப்பது நீ
செல்லும் முறைமை பொறுப்பு.நீ

திமிரும் எருதுகள் விலகினால்
அமரும் உன்னிலை பிசகினால்
ஓட்டும் பாதை தவறினால் 
ஓட்டி நீதான் தவறிவிட்டாய்.

நல்லதும் கெட்டதும் நீ பொறுப்பு.
அல்லல் நேராதே ஓட்டு நீ!
விடைதான் என்ன இரகசியமோ--வண்டி
அடைவதும் ஆவதும் உன்வசமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

உம்மும் கம்மும்.

உம்முனும் கம்முனும் இரு

மம்மி பேசுனா உம்முனு இரு
மனைவி பேசுனா கம்முனு இரு.
குடும் பத்துல குழப்பம் வேண்டாமுனா
இடும்ப னாட்டம் டம்மியா இரு.

அங்கிட்டா இங்கிட்டா எங்கிட்டுச் சாயலாம்.
எங்கிட்டுச் சாஞ்சாலும் உங்கிட்ட வச்சிக்கோ
முதுகுல தலையணை இருத்திக் கட்டிக்கோ.
ஆம்பளயா சமத்தா அழாமப் பாத்துக்கோ.

தாயும் வேணும் தாரமும் வேணும்
தனியா புலம்பவும் தைரியம் வேணும்.
அய்யோ பாவம் ஆம்பள சாபம்
குய்யோ முறையோனு கத்துனாலும் கேவலம்.

நூறு வயசு வாழுற ஆசை
வேறோடு புடுங்கி விட்டெறிஞ் சாச்சு.
இன்னைக்குச் செத்தாலும் சந்தோச 
மாச்சு 
என்னைக்கும் சாவுறது இன்னையோடு போச்சு.

வீடுனு இருந்தா வாசலும் இருக்கும்.
வாசல் திறந்தா வழியும் பிறக்கும்.
விளையுற பிரச்சனைக்கு விடியலும் கிடைக்கும்
தலையாட்டுந் தந்திரம் தாராளம் செயிக்கும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 7 November 2025

வானை நம்பி.........

வானை நம்பி......

விண்ணை நம்பி பொன்னை வச்சோம்
பொன்னை மீட்ட விதை விதைச்சோம்.
விதை விதைச்சி வானம் பாத்து 
மழைய வேண்டித் தவம் கிடந்தோம்.
 
அம்மான்னு அழும்புள்ளய 
அமத்தத் தாய்க்குப் பாலு வல்ல.
சும்மா சும்மா சப்பிச் சப்பி
சோந்து புள்ள அசந்து போச்சு.
அசந்த புள்ள முழிச்சதுன்னா 
ஆறுதலா என்ன சொல்ல.
வானத்தையே பாத்துப் பாத்து 
தான தர்மம் விழுது செத்து.

கண்ணா மூச்சு விளையாட்டா
கடவுளுக்கு என்ன ஆச்சு.
என்னதான் நினைச்சிருக்கான்
என்ன செஞ்சு முடிக்கப் போறான்.
மண்விளைய மழை இல்லேன்னா
பொன்னிருந்தும் என்ன செய்ய.
கையிருந்தும் காலிருந்தும்
கஞ்சிக்கென்ன வழிசெய்ய.

இலவசங்கள் வாங்கி வாங்கி
இரும்புப் பெட்டி நிறைஞ்சாலும்
பலம் குறைஞ்சு வலிமை கெட்டு
பாடுபட மறந்து போச்சு.
வாயில் சுட் ட வடை எல்லாம்
வயித்துப் பசி தீத்துடுமா.
காய்ஞ்சு போன பூமியையே
கண்ணீரே நனைச்சிடுமா.

காமராஜர் கக்கன் அந்தக்
கடவுள்கள் பிறக்க வேணும்
காலத்தில் பெய்யும் மழை
கடல் மறக்கத் தடுக்க வேணும்.
நீர்நிலைகள் பெருக்கி எங்கும்
வானம் பொய்த்தால் திறக்க வேணும்.
பசுமை செய்து பூங்காற்றால்
பார்குளிர்ந்து செழிக்க வேணும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






Wednesday, 5 November 2025

ஒற்றையடிப் பாதை.

ஒற்றையடிப் பாதை.

ஒற்றை யடிப் பாதை வழி
மெல்ல மெல்லப் பார்த்து நட
முந்தப் பார்கும் முன்னாலே--கேடு
தள்ளப் பார்க்கும் பின்னாலே.

கூப்பிடாமக் கூட வரும்
கோபப்படத் தூண்டி விடும்
அவசரத்தில் ஆசை ஊட்டி --கேடு
ஆழ் குழியில் தள்ளி விடும்.

கேடுகெட்டக் கெட்ட நேரம்
தேடிவந்து ஒட்ட வரும்.
பாடு பட்டுச் சேர்த்ததெல்லாம்--கேடு
ஓடவிடும் உன்னை விட்டும்.

தன்பேச்சைக் கேளாமல்
தன் முயற்சி நம்பாமல்
மனம்மயக்கி மாற்று வழி--கேடு
வனம் விலக்கித் தொலைத்திடும்.

தேவையற்ற பழக்க தோசம்.
தீயவர்கள் சக வாசம்
குறுக்குவழி மோக மோசம்--கேடு
உருவாக்கும் தன்னீசம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 3 November 2025

தம்பி பாலா

தம்பி KPYபாலா!

தம்பி பாலாநீ தரமத்தாய் பிள்ளை நீ!
அம்பி போலநீ அக்கரை சேர்வள்ளம் நீ!
நம்பி முயன்றோர்கு நல்கும் வள்ளல் நீ!
எம்பி என்போர்கு உள்ளம்வாழ் செல்வம்நீ!

அழைப்பவசர ஊர்தி நீ ஆதரவுக் காவலன்நீ!
தொலைதூர மக்களின் மலைப்புறச் சேவகன்நீ!
நிலைகுலைந்த கலைஞர்களின் நலம்தந்த நாயகன்நீ!
உலையேறா இல்லங்களில் இலைபோட்ட அன்னவன்நீ,!

இருப்போன் அல்லான்நீ இருப்பதைக் கொடுப்போன்நீ!
பிறப்பால் கரணன்நீ சிறப்பால் வர்ணன்நீ"
மனமுள்ள மனிதன்நீ குணமுள்ள பாரிநீ!
இனமான மனிதம்நீ தனமான தானன்நீ!

குலம்போற்றும் உரியன்நீ!விளம்பிடாப் பிரியன்நீ
நலம் விளையும் விருச்சம்நீ! குலங்காக்கும் மருத்துவம்நீ!
அறஞ்செய் தர்மன்நீ கரம்பெய் நண்பன்நீ!
புறம்பேசும் பொய்யர்கும் சிரங்காக்கும் சீராளன்நீ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



தமிழ் நாடு வாழ்த்து

தமிழ் நாடு வாழ்த்து.
--------------------------------------------------
தமிழ்நாடே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் தாயே வாழ்க!

பல்லவம் கொங்கு பாண்டியம் நாஞ்சில்
வல்லவம் சேது ஈழம் சோழம்
சேரம் செழித்த இலக்கியத் தமிழகம்
சீராம் சிறப்பாம் தமிழே வாழ்க!

காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை பெரியாறு
பூமூன்று விளைய பொங்கிடக்கருணை
நீ தந்தாளும் வளநாடு வாழ்க!

வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள்
சங்கம் பாடும் செம்மொழி வாழ்க!

மேற்கும் கிழக்கும் மலைத்தொடர்க் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
தீர்க்கம் பொழிலாம் எழிலே வாழ்க!

இனிக்கும் தன்மை இயலிசை நாடகம்.
கணக்கின் செம்மை தொகையும் பாட்டும்.
காவியம் காப்பியம் தொன்மை போற்றும்
மேவிய செந்தமிழ் புகழே வாழ்க!

கவிஞர் கொ.பெ.பிச்சையா.