Thursday, 26 December 2013

கானா சென்னை.

கானாவும் சென்னையும்

சூனா பானா வாண்ணா--ஒரு
கானாப் பாட்டுத் தாண்ணா.
டீயும் பன்னும் சொன்னால்--கானா
தானா தாளம் போடும்.

சென்னைத் தமிழின் பாட்டு--மழலை
கொஞ்சும் மொழியாம் பேச்சு.
கதம்பம் மாலைக் கானா--சென்னைக்
கலக்கல் மெட்டுத் தேனா.

மொழிகள் பலவும் வாசம்--பாரத
விலாசம் நிலவும் நேசம்.
இந்திய நாட்டு ஒருமை--மெய்யே
சென்னை ஊருப் பெருமை..

பிழைக்கும் வெளியூர் துரைகள்-ஊரை
வளைக்கும் நிலம்தான் நிலைகள்.
மண்ணில் விளைந்த மணிகள்-கூவம்
தன்னில் அலையும் பிணிகள்

சோழம் பல்லவத் தமிழர்-அழகு
சூழக் கோவில் கலைகள்.
தமிழுக்கு தலையாய் நகராம்-ஆனால்
தமிழ்தான் தொலைந்த பகையாம்.

பலகலை பயிலும் கழகங்கள்-மற்றும்
படிக்கும் பலநிலை பள்ளிகள்
விலைக்கு விற்கும் வணிகங்கள்-ஏழை
நிலைக்குக் கல்வி அதிசயங்கள்.

கோவில் உயர்த்தும் கோபுரம்--அது
கூறும் ஊரின் கம்பீரம்.
சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்-சென்னை
என்றால் அதுதான் அடையாளம்.

எக்கு மோருதான் ஸ்டேசன்--அது
எப்போதும் நெருக்கடி டென்சன்.
படியில் தொங்கும் பயணம்'-அய்யோ
நொடியில் அங்கும் மரணம்.

வேக வேகமாய் நாட்கள்-ஓடும்
கூட்டம் கூட்டமாய் ஆட்கள்.
பறக்கும் பறவைகள் அவசரம்-ஓயா
பரபரப்பு இங்கு வாழ்க்கையே

ஆசியாவின் பெருமைதான்--நமது
கோயம்பேடு தாங்கல்தான்
தாசுமகால் போலழகு--சென்னை
மோசம் என்பதன் ஓரளவு

வள்ளுவரின் கோட்டம்தான்--கலை
வண்ணத்தமிழ் தோட்டம்தான்
சுவர் பதித்த குறளைத்தான்--படித்து
எவர் தொடர்வார் மனதில்தான்.

இசை வளர்க்கும் மன்றஙகள்-போற்றும்
இயல் இசை நாடகங்கள்.
தொலைந் தெல்லாம் போனது--ஏய்த்து
தொலைக் காட்சி வாழுது.

சென்னைக்கு மெரினாதான்--தமிழ்
அன்னைக்கு மதிப்புதான்!
தமிழுயுரப் பிறந்தவர்கள்--அவள்
தாலாட்டில் ஆறுகிறார்.

அவரவர் காலத்தின் --வாழ்ந்து
அவரவர் காலமானார்.
வரலாற்றின் அடையாளமாய்--வங்கக்
கரையோரம் சிலைகளானார்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment