Tuesday, 26 May 2015

கூலிக்கு மாரடிப்பான்.

எங்கிருந்தோவருவான்.

எங்கு இருந்தோ வந்திடுவான்.
இங்கு தமிழ் நானென்பான்.
சொங்கு மொழி ஏதோபேசி
பங்கம்செய் பாவம் செய்வான்.

அப்பாவி  நானென்பான்--சாமி 
சப்பரம் சாவியெடுப்பான்.
கூலிக்கு மாரடிப்பான்--நீதி
வேலிக்கு சீரழிப்பான்.

எங்கிருந்தோ அலறுவான்.--பட்டு
ஏதேதோ உளறுவான்.
சங்கறுந்த கோழி போல்--தலை
தொங்கி ஊளை கூவுவான்.

வேலையற்ற கோழையவன்--விடி
காலையற்ற தேரையவன்.
நெஞ்சமற்ற வஞ்சனவன்.--நேர்
கொஞ்சமற்ற கஞ்சனவன்.

ஆடும் வரை ஆடுவான்.--அவனே
அகம் ஒடுங்கி வாடுவான்.
கூடும் அவன் பாவங்களே--சிவனே
குழி அடங்கி மூடுவான்..

கொ.பெ.பி.அய்யா.


Saturday, 2 May 2015

அரிதாரம்.

தனக்குத்தானே

தனக்குத் தானே படிப்பவன்
தலையில் தீ வைப்பவன்.
எனக்குத் தெரியும் என்பவன்
எரிவது புரியாமல் அழிகிறான்.

மல்லாக்கப் படுத்துத் தன்
மார்மீதே உமிழ்கிறான்.
சொல்லாக்கம் விளங்காமல்
சீர்கெட்டு உளர்கிறான்.

தன்னைத் தானே பாறைமீது
முன்னை முட்டி படுகிறான்
கண்ணைக் கட்டி குழியிலே
மண்ணை மூடி விழுகிறான்.

ஆளாக்கி விட்டவரை
கீழாக்கிப் பழிக்கிறான்.
பாழாக்கும் பொல்லோரை
தோளாக்கி இழிகிறான்.

ஊரு கெட்டுப் போனாலும்
தூரம் போய் வாழலாம்.
பேரு கெட்டு நாறிபோனால்
யாரிடம் போய் சேரலாம்.

குடிகாரன் சொல்வதெல்லாம்
அதிகாரம் ஆகுமா?
அரிதார வேசமெல்லாம்
அழியாமல் போகுமா?

ஆடும்வரை ஆட்டமெல்லாம்
கூடும்சனம் கூட்டமெல்லாம்
வீழும்வரை இரசிக்கத்தானடா
வீழ்ந்தபின் சிரிக்கத்தானடா.

தூண்டிவிடும் கோழைத்தனம்,
தூண்டில்விழும் ஏழைத்தனம்.
ஆண்டிமடம் பேடித்தனம்,
ஆண்டதுண்டா அடிமைத்தனம்?



கொ.பெ.பி.அய்யா.