Friday, 28 February 2014

விந்தை நீ!

விந்தை நீ!

கார்மேகத்தி னூடே ஓடுகிறேன்—உன்
கருங்கூந்தல் மூடி மறைகிறேன்.
வானத்தின் வீதியில் பாடுகிறேன்—உன்
மோனத்தின் நுதலில் உறைகிறேன்.  

நிலவை எட்டிப் பிடிக்கிறேன்--அதுஉன்
நெற்றியில் ஒட்டி சிரிக்கிறது.
விண்ணில் மீன்களை அள்ளுகிறேன்.—அதுஉன்
கண்களில் மின்னி ஒளிர்கிறது.`

இருளைத் தொட்டுத் துடைக்கிறேன்-அதுஉன்
புருவத்தில் வில்லாய் வளைகிறது.
பகலைக் கேட்டு அழைக்கிறேன்-அதுஉன்
பருவத்தில் சொல்லாய் விளைகிறது.

வானில் வில்லை நீட்டுகிறேன்-அதுஉன்
நாணில் தானது குவிகிறது.
மாலைச் சிவப்பைப் போற்றுகிறேன்-அதுஉன்
சேலை ஒளிந்து சிவக்கிறது.

முதலாய் சிந்தும் முத்தூறல்-அதுஉன்
இதழில் தேனாய் இனிக்கிறது`
இதமாய்க் குளிரும் பனிச்சாரல்-அதுஉன்
பதமாய்க் கன்னம் நனைக்கிறது.

காலைச் சுடரைத் தொழுகிறேன்-அதுஉன்
கனிந்த முகத்தில் வளர்கிறது.
வாலை மின்னலைப் பழகுகிறேன்-அதுஉன்
பாளைச் சிரிப்பில் மிளிர்கிறது.

விண்ணில் தோற்று விழுகிறேன்-உன்
பண்ணில் காற்றை ரசிக்கிறேன்.
தண்ணீர்க் குவளைத் தண்டதுவோ!—அது உன்
ஒன்னிய கழுத்தாய் கண்டதுவோ!

திகிலில் பாயும் பகடிரண்டோ!-அதுஉன்
துகிலில் பதுங்க அஞ்சுகிறேன்.
பகலில் கூடத் தேடுகிறேன்-அது உன்
தகவல் தேடும் இடுப்பாமோ!

இயற்கை கூடித் தேடியதோ-உன்
இயல்பில் தேடிக் கூடியதோ!
அழகைத் தொகுத்து அமைத்ததோ-உன்
அமைப்பில் அழகை சமைத்ததோ!

கொ.பெ.பி.அய்யா.


Thursday, 27 February 2014

ஓவியம் பாடுமோ!

ஓவியம் பாடுதடி

ஓவியம் பாடுதடி எனக்குள்
உள்ளுயிர் கூடுதடி.
ஆவியும் தேடுதடி உன்
அழகினில் ஆடுதடி.

படைத்தவன் விரல்களிலே
கிடைத்தநீ பொற்சித்திரமே!
அடைந்தஎன் உயிரினையே
குடைந்தநல் பேரழகே!

வரைந்தவன் சிந்தையிலே
வளர்ந்த கலைவடிவே!
நிறைந்தென் நெஞ்சத்திலே
கிளர்ந்தெழு கவியடியே!

எழுதிய தூரிகையோ!
முழுதாய்க் களித்ததோ!
பொழுதும் உன்னோடு
புழங்கித் திளைத்ததோ!

வண்ணங்கள் எத்தனையோ!
எண்ணங்கள் அத்தனையோ!
ஒண்ணும் பாக்கியில்லை
உன்னிடம் தேக்கினனோ!

பார்ப்பவர் பத்திரமே
பழகும் சித்திரமே!
நேர்வதும் என்னாகும்
ஊறுதே என்செய்வேன்?     

கொ.பெ.பி.அய்யா.





Wednesday, 26 February 2014

காதல் பித்து.

காதல் பித்து.

விழிவழி மொழிநீ மௌனமோ
உளிவிழி கொண்டு உடைத்தாயோ!
கழிமொழி பேசி கொன்றாயோ!
பழிகுழிக் காயம் படைத்தாயோ!
வழிவிழி பொழிய விட்டாயோ!

வில்லால் அடிக்கும் கல்லாலும்
பள்ளம் அள்ளும் புண்ணானாலும்
வெல்லும் மருந்தால் தீருமடி
சொல்லடி பட்ட  உள்க்காயம்
என்னடி மருந்தால் ஆறுமடி?

கண்ணால் பாடிய பண்ணாலே
என்னைப் பித்தன் ஆக்கினாய்.
உன்னைதேடி விண்ணைக்கூடி
பின்னைப் புத்தனாய் மாற்றினாய்.
இன்னைத் தனி வழி ஆற்றினாய்.

தூண்டில் படுமோ விண்மீனும்
தூரம்போனாய் கண்படுமோ!
அழைத்து என்பசி ஆற்றுவதார்?
மறுத்த காதலும் தேற்றுவதார்?
பொருத்தி ஒட்டவும் ஏற்பவரார்?

களிமொழி கசந்த பேதமோ!
வழி வழி தொடரும் பாவமோ!
இறையோ பேயோ சாபமோ!
இடையில் எவர் கொடுங்கோபமோ!
இன்று நானும் காவாமோ!

கொ.பெ.பி.அய்யா.

மயக்கும் சொல்லில் மயங்காதே!

சோராதே கண்ணே!

சோராதே கண்ணே சோராதே-பொய்யாம்
பார்வையில் பழகி  சோராதே !
கேளாதே கண்ணே கேளாதே-மயக்கும்
சொல்லில் மயங்கியும் வீழாதே(சோரா)

பேச்சும் எழுத்தும் நாடகமறிவாய்-அறிவை
மாற்றும் அழகுத் தந்திரமே.
துடிப்பையும் படிப்பையும் சுரண்டுவாரே--தனது
தோளுக்கு உயர்ந்தால் அழுத்துவார்.(சோரா)

நல்ல மனிதரெல்லாம் கள்ளம் அறியாமல்-வஞ்சப்
பள்ளம் விழுந்து தொலைந்திட்டார்..
உள்ள பொழுதினை உழைத்து உயராமல்-எவரோ
வெல்லும் படியாக கிடந்திட்டார்.

ஊர்நலம் வாழ வாழ்ந்து பாரு--காக்கும்
உண்மைக்கு சாவும் நேர்ந்து சாவு.
ஏமாற்றும் பொய்யனை நீமாற்ற வேண்டும்-தலைமை 
நீயேற்று உலகினை நேராக்கவேண்டும்.

கடமை உணர்வை மறந்தோம் அதனால்--பொது
உடைமைகள் சுயநலம் ஆகிறது.
விழித்துக் கொண்டால் அழிப்பவர் இல்லை-பாவம்
எதிர்த்து நின்றால்  பழியுமில்லை.

கொ.பெ.பி.அய்யா.


  

Tuesday, 25 February 2014

குடிக்காதே!



குடிக்காதே தம்பி குடிக்காதே!!

குடிக்காதே தம்பி குடிக்காதே
குடிக்காதே தம்பி குடிக்காதே
அடிமைத் தனமாய் மயங்கிவிடாதே
குடும்பம் இருக்கு மறந்துவிடாதே!  (குடிக்காதே)

பாட்டிலைப் பாரு எழுத்தும் பாரு
பழகும் முன்னே படிச்சுக்கோ—குடிக்கப்
பழகும் முன்னே படிச்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ   (குடிக்காதே)

வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது
வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது`--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது `--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது
நினைத்து உனையும் உணராவிட்டால்
நீசரைத் தப்ப முடியாது.
குடிப்பவன் தானே திருந்தாவிட்டால்
குடியை ஒழிக்க முடியாது. (குடிக்காதே)

கெடுக்குற காலம் கலிகாலம்—இனி
தடுக்குற முயற்சி வருங்காலம்—குடி
தடுக்குற ஆட்சி நிகழ்காலம்.
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
வடிக்கிற தொழிலும் உருவாகும்—அதை
தடுக்குற படையும் பலமாகும்
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
கெடுக்குற குடியும் இருக்காது. (குடிக்காதே)

கொ.பெ.பி.அய்யா.

Monday, 24 February 2014

பெற்றதும் பாவமோ!

நிலையான சொந்தங்கள் !

கட்டிவச்ச கோயிலெல்லாம்
சுத்துனது குத்தமாடா?
கெட்டிக்காரா என் மகனே!
ஒத்த உன்னப் பெத்தமடா!
சொத்து சுகம் பாக்கலயே
சொந்தம் உன்ன வளத்தமடா!

தந்தி மேல தந்தி பல
தந்ததெல்லாம் என்னாச்சோ!
வந்திடுன்னு சொன்னதால
வந்த வழி மறந்திரிச்சோ!
முந்துனது காஞ்சிருச்சோ!
பிந்துனது தெரிஞ்சிருச்சோ!

நட்டி வச்ச வாழக் கன்னு
விட்ட தண்ணி மறக்கலயே!
பட்டினிக்குச் சோறாக
நித்தம் பழம் ஊட்டினாலும்
பெத்த புள்ள உன்னத்தான
பித்து மனம் தேடுதடா!

வச்ச நல்ல தென்னம் புள்ள 
மிச்சத் தண்ணிக் குடிச்சித்தானே
உச்சியிலே தான் சுமந்து
எச்சில் நனைக்க ஊட்டினாலும்
அச்சுப்புள்ள உன்மேலே
ஆச உயிர் ஆடுதடா!

வாழமரம் தெனனமரம்
வாசலில காத்திருக்கு
ஆளரவம் ஒஞ்சாலும்
அந்தச்சொந்தம் நிலச்சிருக்கு
ஓலையாகி வாழையாகி
ஒண்ணாவரக் கடன் நெனச்சு

கொ.பெ.பி.அய்யா.



அழகின் அர்த்தமென்ன?

அழகென்றால் .............!

அழகென்ற சொல்லுக்குப் பொருளென்ன ?
அதையளந்து சொன்னவன் பேரென்ன?
நிலையாய் நெஞ்சில் நிற்பதெல்லாம்
அழகே என்றால் சரி தானோ!

கவனம் ஒன்றில் கவரும் என்றால்
காண மீண்டும் ஈர்க்கு மென்றால்
யவனம் அதுதான் பொருளென்றால்
சிவப்பு நாவு  செந்தீயும் அழகன்றோ!

முழுமை பெற்ற சிறப்பெல்லாம்
அருமை என்று மனம் மகிழ்ந்தால்
அறிவின் வெற்றி அது வென்றால்
அதுவும் அமைதி அழகன்றோ!

கண்டதில் மேன்மை கொண்டதுதான்
கொண்டதில் நன்மை என்றதுதான்
உண்டதில் சுவையும் உயர்ந்ததுதான்
நின்றது அதுவே அழகன்றோ!

ஆடும் கடலும் ஓடும் நதியும்.
வீசும் தென்றல் கூசும் பனியும்
மேடும் முகிலும் கூடும் விதமும்
ஆசை அசைவில் அழகன்றோ!

வாசம் வண்ணம் நேசம் நெகிழ்ந்தால்
பேசும் எண்ணம் பாசம் திகழ்ந்தால்
மலரும் மொழியும் மனது நிறைந்தால்
புலரும் இரவும் அழகன்றோ!
.
மென்மை என்றால் பெண்மையே!
இன்மை சொர்க்கம் காதலே!
மென்மை பெண்மை இன்மையில்
என்றும் அதுவே அழகன்றோ!

கொ.பெ.பி.அய்யா.









Saturday, 22 February 2014

நிறமென்ன பாவம்!

நிறமென்ன பாவம்?

கருப்பா வெள்ளையா நிறத்தில் என்ன
இருக்கும் இரகசியம் பெண்ணே!
வெறுக்கும் விதத்தில் நிறம்மென்ன பாவம்?
விருப்பும் எதனில் விளைந்தது கண்ணே?

உழைக்கவும் ஓயவும் பகலும் இரவும்
ஒன்றில் ஒன்று நன்மையே இருக்கும்.
அழகு என்பதும் நிறத்தில் இல்லை
அதனதன் செயலில் தானது விளங்கும்.

தோலில் என்ன பேதம் சொல்லும்.?
தோன்றுவ தென்ன வாதம் செல்லும்?
ஈர்ப்பு என்பதும் நிறத்தில் இல்லை.
இயல்பின் அருமை என்பதில் துலங்கும்..

கண்ணில் காணும் கருப்பு வெள்ளை
எண்ணில் தோணும் இரண்டும் நன்மை.
ஒளியும் என்பதும் நிறத்தில் இல்லை.
விழியன் பெருமை விதத்தில் இலங்கும்.

நிறங்களின் காட்சி ஒளியின் மாட்சி.
விரைவின் நீட்சி நிறைவின் சாட்சி.
அறிவு என்பதும் நிறத்தில் அல்ல
செறிவின் திறமாய் சீரில் முழங்கும்.

இயற்கை செய்யும் மாயம் எல்லாம்
ஏதோ ஒன்றில் நியாயம் கொள்ளும்.
இனிமை என்பதும் நிறத்தில் இல்லை.
இதயம் பழகும் இதத்தில் புழங்கும்.

கொ.பெ.பி.அய்யா.



கண்டாங்கி சேலை.

கண்டாங்கி சேலை

கண்டாங்கி சேலை கட்டி
கம்மங்காடு போற பொண்ணே
முந்தான மூடிக்கிட்டு
முகம் மறச்சிப் போவதென்ன?
பின்னாலயே வருவேன்—உனக்கு
பேச்சுத் துண தருவேன்.

அறிவுகெட்ட பய உனக்கு
புரியலயா சொல் எனக்கு
வேல வெட்டி இல்லாமலே
சேல மோப்பம் பிடிக்கிறியோ
வேண்டாமுன்னு தானே—பயலே
விலகி நானே போறேன்.

முண்டக்கண்ணி சண்டாளியே
கண்டபடி பேசாதடி.
தண்ட சோறு திங்கிரேன்னு
தரக் கொறவா எண்ணாதடி.
பொண்டாட்டியா வச்சு—உன்ன
பொன்னால் அழகு செய்வேன்.

முசப் புடிக்கிற மூஞ்சியா நீ
வசப் படுத்தப் பேசிறியா?
எசப்பாட்டுப் பாடாதடா
என்னத் தொல்ல செய்யாதடா
வேல ஒண்ணு தேடு—அப்புறம்
வெளங்க வழி பாரு.

நானும் நல்லாப் படிச்சிருக்கேன்
நாலும் வழி தெரிஞ்சிருக்கேன்.
வீணா நானும் இல்லயடி
வேல எழுதிப்போட்டிருக்கேன்.
தபால்காரன் வாரான்—ஆடர்
தாளு தான தாரான்.

இப்பத்தான் நீ ஆம்பள
எனக்கு ஏத்த மாப்புள
அப்பேன் ஆத்தா கூடவந்து
அவசரமா என்னக் கேளு
இப்போப் போறேன் நானு---சாமி
என்ன விடு ஆளு.

கொ.பெ.பி.அய்யா.  



Friday, 21 February 2014

ஒன்னம்மன் வாழ்த்து


வாழ்த்து
அம்மா ஒன்னுத் தாயம்மா!
அய்யா தொட்டன் துணையம்மா!
உழைக்கும் குலத்தின் தேவியே!
பிழைக்கும் வழியும் காமியே!

ஆயர் பாடித் தெய்வமே!
அழைத்துத் துதியும் செய்வோமே!
ஆவாய் எம்மைக் காத்துமே!
அருள வேண்டும் தீர்க்கமே!

கொல்லம் பரும்பு தேடியே! 
கோவில் கொண்ட தேவதையே!
கம்மாக் கரையதன் மேலேயே!
காட்சி தருகின்ற தீமகளே!

இலந்தை முள்ளுக் கோட்டையே!
எழுப்பக் கேட்ட காவிரியே!,
வளரும் தமிழிந்த நாட்டையே
வாழ்விப்பாய் அனுப்பர் தாயே!!.

புல்லாங் குழலையும் மீட்டுவாய்!
புதுப்புனல் நீயுங் காட்டுவாய்!
குடகு மலையின் கொடைமகளே
நடை பயின்றுவா காவிரியே!

நெருப்பில் பிறந்த தேவியே!
நீதி காக்குங் கோவியே!
வாடும் பயிரும் விளையவே
ஓடி வருவாய் காவிரியே!

உறுமிமேளம் தாளம் கொட்டி,
உனதுபுகழே கானங் கட்டி
உருக நாளும் கெஞ்சுகிறோம்.
வருக அருள்க ஒன்னம்மா!

பாட்டாளி குலமிங்கு அனுப்பராம்
பசிவலி  மறந்துமே வாழனும்.
கூட்டாக் கூடி ஒற்றுமையாய்
குலமெம்மை தழைக்க வைப்பாய்!.

அனுப்பர் எல்லாம் கூடுவோம்.
அம்மா அவளைப் பாடுவோம்.
அன்னை ஒன்னு காவிரியாம்.
அனுப்பர் குலத்தின் காவலவளாம்.



கொ.பெ.பி.அய்யா.

விழியென்ன மொழியோ!

விழி பேசும் மொழி!

விழி என்ன மொழியோ!
மொழி என்ன பொருளோ!
பழகும் உயிர்க் காதலே
எழுதாதே பழகுமோ!

உணர்வுகள் சொல்லாமல்
உருவான மொழி உண்டோ!
நினைவுகள் எண்ணாமல்
நீர் விடும் விழி உண்டோ!!

உணர்வுகள் விழிக்காமல்
கனவுகள் கண் வளர்மோ! 
நினைவுகள் தூங்காமல்
நீள் விழிகள் துஞ்சுமோ!

உணர்வுகள் தூண்டாமல்
ஒழுகி விழி தேடிடுமோ!     
நினைவுகள் ஏங்காமல்
நீல விழி வாடிடுமோ!

உணர்வுகள் பேசாமல்
பிரியும் விழி உருகிடுமோ!
நினைவுகளும் கூசாமல்
சேர் விழிகள் மூடிடுமோ!

உணர்வுகள் துள்ளாமல்
கூடும் விழி விரிந்திடுமோ!
நினைவுகள் அள்ளாமல்
நேர் விழிகள் சிந்திடுமோ!

உணர்வுகள் அஞ்சாமல்
ஓர விழி கசிந்திடுமோ!
நினைவுகள் கலங்காமல்
பிரிவெண்ணி உதிர்த்திடுமோ!
கொ.பெ.பி.அய்யா.



      
 

விடையென்ன!

கேள்விக்கென்ன விடை.

நீலவானத் தந்தையின் நிழலிலா?
நில மடந்தை அன்னையின் மடியிலா?.
கால பகவன் கருணைக் கொடையிலா?
வாழும் மனிதன் வாழ்க்கை இடையிலா?

யாரையும் கேட்டுத் தான் வந்தானா?
ஊரையும் தேடித் தான் கண்டானா?.
பேரென்ன ஊரென்ன பிறப்புக்கு முன்னேதான்?
யாரென்ன சீரென்ன இறப்புக்குப் பின்னேதான்?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைவெளி தூரமா?
உறவுக்கும் பிரிவுக்கும் நடைவழி பாரமா?
இருக்கவும் பறக்கவும் எது அது நேரமா?
பிறக்கவும் மறக்கவும் விதி எங்கே ஓரமா?

நாளென்ன பொழுதென்ன நாழிகைக் கணக்கென்ன?
ஊழென்ன தொழுதென்ன உற்றது உனக்கென்ன.?
வாழவும் வீழவும் வந்ததன் சிறப்பென்ன?
ஆளவும் தாழவும் ஆசையின் பொருளென்ன?

காதலென வொன்றுதான் கருவிலே வந்தததா?
சாதிபின் பொருளாலே சண்டாளம் நுழைந்ததா?
வேதங்கள் காதலுக்கு வேலியிட முளைத்ததா?
சாதலே விடுதலையா சாத்திரங்கள் பிழைத்த’தா?

கேள்விக்கென்ன விடையுண்டோ கேட்டுயார் சொல்லுவீர்?
கோளுக்குள் வேறென்ன கொண்டாடும் காதல் என்பீர்!
நாளில்லை பொழுதில்லை நமக்கிங்கு நிலையென்ன?
தோணையும் காதலன்றி துணையிங்கு வேறென்ன?

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:--அன்பர்களே!
 “கரிசல் மண்ணில் ஒரு காவியம்”
அத்தியாயம்—12
வெளியாகியுள்ளது.படித்துத்தான் சொல்லுங்களேன்!








Thursday, 20 February 2014

நதிமூலம் வேண்டுமா?

நதி மூலம் தேடவேண்டாம்.
//////
இப்படித்தான் சிலர் இன்னும் ஏனோ மாறவில்லை.
என்ன வேண்டும் இவர்களுக்கு?ஏதும் புரியவில்லை.
அப்படியும் இப்படியும் எப்படியும் இவரில்லை.
அர்த்தம் சொல்லித் திருத்திடவும் ஆவதில்லை..
////////
நன்மை என்ன தீமை என்ன நாலும் தெரிந்திருப்பான்
உண்மை அதை மறுப்பதற்கும் உள்ளொன்றும் செய்திருப்பான்.
தீமை என்றே தீர்த்ததையும் நன்மை என்றும் நட்டிவைப்பான்.
நன்மை எனத் தேர்ந்ததிலும் தீமை ஒட்டி வெட்டிப் பொயப்பான்’
/////////
நல்லதொன்று செய்தாற்குப் பொல்லதெல்லாம் சாட்சி வைப்பான்.
உள்ளபடி நல்லததை ஒப்புக்கொள்ளப் பொய்யுரைப்பான்.
நல்லதென்ற சொல்லிவற்கு பொல்லாத ஒவ்வாமை.
வல்லமை அதிலென்ன வரவாகும் இவர் பெருமை?
///////
கேடுவரும் என்றறிந்தால் கூடியெல்லாம் எதிர்க்கலாம்
தேடி வரும் நன்மைதனை தேவையென்ன எதிர்ப்பதால்
தெருவாடத் தெரியாதவன் தெருக்கோணல் என்பானாம்.?
வரும் நன்மை வரவேற்க வலிமையற்றோன் கோழையாம்.
/////////
மனதிலொன்றை வைத்துகொண்டு மற்றவரை வம்பிழுப்பான்
சனத்திலொன்றை சொல்லிக்கொண்டு உற்றதையும் மெய்மறுப்பான்.
தனக்கிலான லாபநட்டம் கணக்கிலதை மட்டும் பார்ப்பான்.
தனக்கிலது நட்டமானால் பிணக்கியதை தான் கெடுப்பான்.
///////
நிச்சயம் உறங்குபவன் நிழல்படவும் விழித்திடுவான்.
நித்திரை போல் பாசாங்கன் நெருப்பிட்டும் எழமாட்டான்.!
பத்திரமாய் பொய்யர்களை பழகித்தான் பேசவேண்டும்`
சத்தியமாய் மனிதெரென சகலரையும் நம்பவேண்டாம்.
////////
நன்மையது உண்மையானால் நதிமூலம் தேடவேண்டாம்.
தன்மையது செம்மையானால் தன்னலம் சேரவேண்டாம்.
பன்மையது பாராட்டி பழிப்பவனைத் தள்ளிவிட்டு
திண்மையது மனங்கொண்டு தேர்ந்ததில் வெற்றி கொள்வோம்!
///////////
கொ.பெ.பி.அய்யா..

Wednesday, 19 February 2014

இதயக்கடல்.

இதயக் கூடல்.

மண் மணக்குது மண் மணக்குது
மங்கை மொழியிலே!
பொன் ஒளிருது பொன் ஒளிருது
பூவை சிரிப்பிலே!

மொழி விளங்குது மொழி விளங்குது
மூடும் அழகிலே!
எழில் துலங்குது எழில் துலங்குது
இடையின் ஒளிவிலே!

நடை மொழியுது நடை மொழியுது
நல்ல தமிழிலே!
விடை புரியுது விடை புரியுது
விளங்கும் உடையிலே!

குணம் தெரியுது குணம் தெரியுது
கூசும் பண்பிலே!
மனம் அறியுது மனம் அறியுது
மறைக்கும் அன்பிலே!

கண் பழகுது கண் பழகுது
மண் உறவிலே!
பெண் வரையுது பெண் வரையுது
பெருகு விரலிலே!

எண் வளருது எண் வளருது
இரண்டின் தெளிவிலே!
இங்கும் அங்கும் இடம் மாறி
இதயம் கூடுதே!


கொ.பெ.பி.அய்யா.

உயிர் தந்த தாயே!

உயிர் தந்த தாயே நீ வாழ்க!

தாயே!உன்னைத் தாயெனச்சொல்லத்
தமிழ் இனி கூசாது.
அம்மா!உன்னை அம்மாவென அழைக்க
அணி தமிழ் மறக்காது,

எட்டாவது வள்ளலாய் ஏற்றம் பெற்றாய்.நீ!
எட்டுத் திக்கிலும் உன் புகழ் எட்டுவாரில்லை.
கட்டிய சுருக்கினை வெட்டிய கருணை நீ வாழ்க!--நீ
நட்டிய நீதி நாற்புரங்களும் பரவ முதலே நீ வாழ்க!

மூவரின் உயிரை மீட்ட முத்தமிழ் அன்னையே!
ஈவரின் இது போல் எவர் செய்வர் நன்மையே !
உயிர் தந்ததால் அன்னை நீ !
உலகினில் இதுவன்றி வேறென்ன கொடை இனி.

அன்னையின் கருணை அளப்பரியது என்பர்
உண்மை விளக்கம் இன்னை புரிந்தனர்.
முன்னைத் தடயங்கள் உன்னை ஒப்பிட
என்ன தேடினும் உன்னையே காண்பர்.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 February 2014

செம்மொழித் தமிழ்.

செம்மொழி வாழ்த்து

முதலொலியாம் முத்தாம்; வளர்மொழியாம்; வாய்த்தயிரு,
கண்ணாம், கருவிழியாம்,காலமாம்! -கன்னல் இனிமை, வளமை, இளமை
தனித் தமிழ் செம்மொழி.

பிறக்கும் பொழுதே ஒலியாய்
பிறக்கும் மொழி அம்மாவாம்! - சிறப்பிதுபோல் உண்டோ!
அறிந்து சொல்க பிறமொழியும்.
செறிநற் றமிழ் செம்மொழி.

அறம் பொருள் இன்பம் பேறும்
பெறும் பொருள் சொல்லும்
உறுந் தரம் திறமாய் வளமாய் 
சிறந்தும் நிலமதில் வாழும்
அருமைத் தமிழ் செம்மொழி.

பன்மொழி ஏற்றுப் பதித்த 
வண்பொலி இலக்கியங்கள்
தன்னிலைத் தேறி முன்னிலை
வென்றும் நின்றும் என்றும்
முன்னைத் தமிழ் செம்மொழி

கொ.பெ.பி.அய்யா.

சுட்டிப் பாபா.....குழந்தைப்பாடல்.

சுட்டிப் பாப்பா

சுட்டிச் சுட்டிப் பாப்பா  நீ
சுட்டு விழியில் தேடுறே!
கிட்டக் கிட்ட வாவென
கேவிக் கேவித் துள்ளுறே!.

குட்டிக் குட்டிப் பாப்பா  நீ
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறே!
கொட்டிக் கொட்டிக் கைகளால
கூப்பிடத் தானே துள்ளுறே!

எட்டி எட்டிப் பாக்குறே நீ
என்னை நீயும் அழைக்குறே!
கட்டி முத்தம் கொடுக்கத்தானே
கைய்ய நீட்டிக் கேக்குறே!

தட்டித் தட்டிப் பாப்பா நீ
தாவித் தாவித் தவழுறே!
ஒட்டி நானும் தூக்கிட உன்னை
உறவைக் காட்டத் தவிக்குறே!

ஆட்டி ஆட்டிப் பாப்பா நீ
ஆடி ஓட நினைக்குறே!
பாட்டி வாயைக் காட்டித்தானே
பதிலும் கூறத் துடிக்குறே!

நீட்டி நீட்டிப் பாப்பா நீ
நினைச்சு எதையோ கேக்குறே!.
காட்டி அதையே கேட்டு நீ
கையைக் காட்டி அழுகுறே!.

ஊட்டி ஊட்டிப் பாப்பா நீ
ஒன்னு கூடத் தின்னல்ல.
கேட்டகாரும் வாங்கித் தாரேன்
கிளியே வந்து உண்ணடி!

கெட்டித்தனமா நீயும் நன்கு
கடமையாற்றி வளரணும்.
சுத்தமாகக் கைகளை நீயும்
பத்திரமாகக் காக்கணும்.

நல்ல குழந்தை நீயென்றேதான்
நாடு உன்ன வாழ்த்தணும்.
ஈன்றவள் தானும் உன் புகழில்
மீண்டும் இன்பம் மகிழணும்.

பெற்ற உனது தந்தை அவரை
பெருமை பேசி மெச்சணும்!
உற்ற அவரது தவத்தினை எண்ணி
ஊரும் போற்றி வியக்கணும்!

உனக்கும் மட்டும் வாழாமலே
உலகுக்காக வாழணும்.
நினைக்க மணக்கச் சரித்திரம்
நீயும் செய்து நிலைக்கணும்.


கொ.பெ.பி.அய்யா.

Monday, 17 February 2014

ஏறு பூட்டி போறமச்சான்.

சஞ்சலங்கள் எதுக்கு?

ஏரு பூட்டி போற மச்சான்
என்னக் கொஞ்சம் பாரு மச்சான்
சோறு தண்ணி வெறுதிருக்கேன்
சுகமில்லாம சிறுதிருக்கேன்
ஊரு சனம் சிரிக்கி—நான்
உன்னினப்பு சிறுக்கி.

என்ன நான் சொல்லுவேன்டி
இன்னும் ரெண்டு குமறிருக்கு
அண்ணங்கிற பொறுப்பிருக்கு
அவங்க கவல எனக்கிருக்கு
எண்ணி ஒரு வருஷம்--நான் -
எடுத்து வாறேன் பரிசம்.

என்னப்போல குமறிருந்தா
எனக்கு அது பாவம் மச்சான்
உன்னைப்போல பொறுப்பிருந்தா
அண்ணங்கெல்லாம் சாமி மச்சான்
வருசந்தான கணக்கு—நீ ‘
புருசந்தான எனக்கு,

சத்தியமா சொல்லுரேன்டி
சாகாமத்தான் இருப்பேன்டி
இத்தரையில் உன்னவிட்டா
எனக்கு யாரு பொண்டாட்டியாம்,
முத்தழகு மானே –நீ
தித்திக்கிற தேனே.

மன்னவனே கண்ணாளனே
என்ன வார்த்த சொல்லுறியே
இன்னும் நூறு வருசத்துக்கும்
என்னோடதான் வாழுவியே
கண்ணு படும் போயா..ஊரு
மண்ணு சுத்திப் போட.

போடி போடி பைத்தியமே
தேடுறிய வைத்தியமே
மாடு போல உழைக்கிறவன்
மனசில் ஒண்ணும் வஞ்சம் இல்ல
சாமி துணை இருக்கு.—நமக்கு
சஞ்சலங்கள் எதுக்கு.?

கொ.பெ.பி.அய்யா.





மனதை தேடுகிறேன்.

எங்கே தேடுவேன்?

எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?
இறைவன் கொடுத்த அற்புதக்
கொடையை--
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

அறிவாய் அமர்ந்து ஆட்சி செய்யுது,
அன்பாய் கனிந்து ஆனந்தமாகுது
அபிமானமாய் மனிதமாக்குது
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

அருவமாகவே ஆற்றல் படைக்குது.
இறைவனாகவே இயக்கமருளுது.
ஐந்தின் ஆளுமை அதுவே நடத்துது.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

எண்ணம் ஏவல் எல்லாம் அதுவே.
ஈவு இரக்கம் சொல்லும் அதுவே,
உண்மை ஊக்கம் உணர்வும் அதுவே.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

ஒழுகும் முறையும் ஓதும் நலமே.
பழகும் விதமும் பரிந்திடும் நலமே.
அழகும் ஆய்ந்து தேர்ந்திடும் நலமே.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

ஔவியம் அகற்றிட அதுவே உதவுது
பௌவியம் காத்திட பாதையும் காட்டுது.
திவ்வியம் மேம்பட செம்மையாக்குது
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

புத்தியும் சித்தியும் சத்தியமாக்குது,
சக்தியும் எனக்குள் உத்தமமாக்குது.
முக்திக்கு வழியும் முன்னே ஆக்குது.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

ஆன்மா அதுதான் நானெனச் சொல்லுது.
ஆழ்ந்தே உனக்குள் தேடெனச் சொல்லுது.
அங்கே அறிவாய் நானேநீயெனச் சொல்லுது.
என்னில் தேடுவேன் என்னை
நானே தேடுவேன்.


கொ.பெ.பி.அய்யா.

Sunday, 16 February 2014

மகளே என் முத்தே.

வளமென்ன இனிவேண்டும்?

பொன்னே பூச்சரமே புன்னைமர இளங்காற்றே
கண்ணே கண்மணியே காலையிளங் கதிரொளியே
பெண்ணே பெண்ணரசே பேசுமொழி சித்திரமே
எண்ணே என்மகளே எழுந்துவா என்னிடமே

தந்தைநான் தவமிருந்து தனித்துவரம் பெற்றேனே
எந்தைவழி பேரெடுக்க உந்தாயில் கண்டேனே
முந்தைநாள் நான்தந்த முத்தங்களை சேர்த்துவைத்து
இந்தைநாள் மொத்தமாய் இன்பமு
னை தந்தாளே!

ஆழ்ந்தயெம் தேடலிலே அதுமுத்தாய் பிறந்தது.
வாழ்ந்தயெம் வாழ்க்கையுன்னால் வரலாறாய் மலர்ந்தது
தேர்ந்தயெம் பந்தமிது தேனாகிக் கனிந்தது  
நேர்ந்தயெம் நன்மையெல்லாம் நீயாகி வந்தது.

குலம்செய்த புண்ணியமோ குலமகளேநீ கிடைத்தாய்.
நலமெல்லாம் நீயென்றே நாம்வாழ அறம்படைத்தாய்.
வளமென்ன இனிவேண்டும் வள்ளலே வந்துவிட்டாய்
பலமென்ன பெறவேண்டும் படையேநீ தந்துவிட்டாய்,


 கொ.பெ.பி.அய்யா





சாமி போட்ட கணக்கு.

சாமி போட்ட கணக்கு.

காட்டு மேல போற புள்ள
களை எடுக்க வாரேன் நில்லு
ஏட்டு மாமன் ரோட்டுப் புஞ்ச
கூட்டிவப்பான் கூலி ரொம்ப
அருகு பத்திக் கிடக்கு-அடியே
அலுப்பு நிறைய இருக்கு.

பெட்டி போட்ட சட்டக்காரா
சுட்டித்தனம் பேசாதடா !
சுத்தி வளச்சி எங்கே வாரே
சூச்சுமத்த நானறிவேன்
கட்டிப்போட்டு இறுக்கு—ஓங்
கதயக் கொஞ்சம் சுருக்கு.

மாமன் பொண்ணு மல்லிகையே
மச்சான் பேச்சத் தள்ளுரியே!
ரமணன் சொன்ன சேதியடி
ரெட்டவெயில் கொல்லுமடி
மேனி சுட்டுக் கருக்கும்—ஏங்
மனசும் பட்டுத் துடிக்கும்.

அத்த பெத்த ரத்தினமே
அழுக்கு ஒட்டா சுந்தரனே
அவுத்து விட்ட காளபோல
அலையிற நீ கொழுத்துப் போயி
பாட்டன் வச்ச சொத்து –அதப்
பாழாக்கத்தான் சுத்து..

போடி போடி வாயாடி நீ
போட்டி பொட்டு பேசாதடி
மூடி வைய்யி பத்திரமா
ஓடி எங்க போவாயடி
கிணத்துத் தண்ணி தான்டி—எனக்கு
கிடப்பயடி வேண்டி.

சாமி போட்ட கணக்கிருக்கு
பூமி சனம் நிறைஞ்சிருக்கு,
யாருக்குன்னு பூத்திருக்கு
யார் வரவு காத்திருக்கு
நேரும் விதி இருக்கு—நம்ம
நினப்பில் என்ன வழக்கு?

கொ.பெ.பி.அய்யா.
 -

Saturday, 15 February 2014

தாலாட்டு.

சொத்துக்கு சொத்தாக.

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

நீரோடா ஆறை இங்கு--தமிழ்
யார் பாடக் கூடுமடா?
சீராளும் செந்தமிழா!—தமிழ்
ஊர் உன்னைப் பாடுமடா!

பாரதியும் தமிழ் வளர்த்தான்—தமிழ்
பசியிலே தான் மகிழ்ந்தான்.
ஊரவனைத் தேடவில்லை—தமிழ்
உலகம் இன்று பாடுதடா!

குறள் பாடிய வள்ளுவனோ—தமிழ்
கொடுக்கும் என்றும் பாடவில்லை.
ஊருலகம் அவன் புகழை—தமிழ்
ஓத நாளும் மறக்கவில்லை.`

ஔவை அந்தக் கிழவியவள்—தமிழ்
அழகி வாழுங் கன்னியவள்.
செவ்வைவழி காட்டித் தானே—தமிழ்   .
செழிக்கத் தான் சுழன்றாள்.

இலக்கியங்கள் செய்தோரை –தமிழ்
ஏற்றவில்லை உப்பரிகை.
விளங்க வாழ்ந்த வித்தகரை—தமிழ்
வெஞ்சாமரம் ஆற்றுதடா.  

என்னதரும் என்று எண்ணி—தமிழ்
எழுதுவது வியாபாரம்.
பின்னவரும் நலம் இயற்றி—தமிழ்
பிறவி நீயும் வாழ்வாயடா!

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

கொ.பெ.பி.அய்யா.



Friday, 14 February 2014

காதல் பரிசு.

காதல் பரிசு!

காதல் தந்த  பரிசு! இது.
கையில் வந்த பூமியிது.
அண்டம் தேடி அன்பளிப்பாக
அள்ளித் தந்த சாமியது.

அழகான உறவு அதிலொரு பூவு
அது மணந்த வாழ்வு இது.
பிறப்பான போது வரமான ஈவு
வேறென்ன சாமி அதுதான் காதலிது..

ஏனிந்த பூமி யாரிங்கு சாமி?
நாமிங்கு சாமி நமக்கிந்த பூமி.
வானிங்கு கீழே தானிங்கே ஆள்வோம்.
வேறெங்கு சொர்க்கம் யாரிங்கு சொல்வோம்?

தேடி எங்கும் பாரு பாரு
தேறாது வேறு வேறு
கூடி இங்கு காதல் செய்வோம்.
கொண்டாடி இன்பம் கொள்வோம்.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 13 February 2014

கொத்தனாரும சித்தாளும்

இன்று காதலர்கள் தினம்.

கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
பட்டணந்தான் போறவுக
பத்திரமாப் போய் வாங்க!—உங்க
பொட்டணத்த இழுத்து மூடுங்க

கொத்த வேல தேடிக்கிட்டு
கொத்தனாரா போறவுக
வெத்தலைய மடிச்சிப்போடுங்க—எங்கள
சத்தியமா மறந்திடாதங்க.

ஒட்டுச்சாரம் ஏறும்போது
உசரத்துல நிக்கிம்போது
எட்டி சாந்து எறியும்போது—நீங்க
எச்சரிக்கையாக இருங்க.

அக்கம்பக்கம் பாத்துக்கிட்டு
அடுத்தவட்ட சிரிச்சிக்கிட்டு
வெக்கம் கேட்டுப் பேசாதீங்க –எனக்கு
சக்களத்தி தேடாதீங்க.

சாந்து சட்டி வாங்கயில
சரிஞ்சு விழும் மாராப்பில
ஆந்தக்கண்ணு போடாதீங்க—என்ன
அலையை விட்டு ஓடாதீங்க.

வேலையில கவனம் வச்சு
மாலையில என நினச்சு
விலகாம பாத்துக்கோங்க—கோமணத்த
வீடுவரை இறுக்கி வாங்க.

கொ.பெ.பி.அய்யா.
   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimXXTd9mOxb963NSKwTW_iFr4YPiSArN31SNa8TEQvTiBR480YAwYbx1XePuEucOCokgVsFN3lKLqYrtqijle957mNPBzgHxu5gEb8PyTiHMy4HlkVOiYsCuDKa0arH-Jvz9XvH0hg62k/s1600/1654450_445558985575575_1030812838_n.jpg



Wednesday, 12 February 2014

காதல் வாழ்க.

காதலர் தினம் .

காதலே! என் காதலே!—நீ
காலமும் வசந்தமே!
வாழ்கவே!நீ வாழ்கவே!—என்
வாழ்வதன் சுகந்தமே!

உயிரிலே!என் உயிரிலே!—நீ
உள்ளொரு துடிப்பிலே!
வாழ்கவே!நீ வாழ்கவே!—என்
வாழ்வெலாம் வாழ்கவே!

உணர்விலே!என் உணர்விலே!—நீ
உயிர்த்திடும் மூச்சிலே!
வாழ்கவே!நீ!வாழ்கவே!—என்
வாழ்வுடன் வாழ்கவே!

நினைவிலே!என் நினைவிலே!—நீ
நிசம் இந்த உலகிலே!
வாழ்கவே!நீ வாழ்கவே!---என்
வாழ்வென வாழ்கவே!

கனவிலே!என் கனவிலே!—நீ
கண் நிறை நிசத்திலே!
வாழ்கவே! நீ!வாழ்கவே!--என்
வாழ்வே!நீ!வாழ்கவே!

காலமே!என் காலமே!—நீ
கவினுறு! கோலமே!
வாழ்கவே!நீ! வாழ்கவே!—என்
வாழ்வினில் வாழ்கவே!

உலகமே!என் உலகமே!—நீ
உண்மையின் வடிவமே!
வாழ்கவே!நீ!வாழ்கவே!—என்
வாழ்முறை வாழ்கவே!

சொர்கமே!என் சொந்தமே!—நீ
சுகம் அருள் பந்தமே!
வாழ்கவே!நீ!வாழ்கவே!—என்
வாழ்நிரை வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.  




பட்டமரம்.

பட்ட மரம்.

பட்ட மரம் ஒண்ணு
வெட்ட வெளி நிண்ணு
சொட்டும் பனி உண்டு-பாவம்
சொருகுதம்மா கண்ணு.

கூடு கட்டத் தேடி
ஓடி வந்த கூட்டம்`
வாடும் போது காணோம்-இது
வாழ்க்கை தந்த பாடம்.

பழம் கனிஞ்சா தேடும்
நிழல் தந்தா கூடும்.
இலை உதிர்ந்தா ஓடும்.-இது
பழகி வந்த பாடம்.

வரவி ருந்தால் உறவு
வலுவி ழந்தால் தெருவு.
பசை காஞ்ச பிறகு-இது
பாடை ஏறும் விறகு.

சொந்த முண்ணு சொல்ல
எந்த வொண்ணும் இல்ல.
எழுதி வச்சேன் எழுத்து –இது
பழு தறியா கருத்து.


கொ..பெ.பி.அய்யா.

வெற்றியைத் தேடி.....

வெற்றியைத் தேடி.................!

விளக்கம் சொல்ல விளங்கிடும் பொழுதே
பழக்கம் அதையும் பழகிட வேணும்.
முழக்கும் முரசைப் போலவே முழங்கி
மூலை ஓய்ந்தால் தீராது –வெற்றி
காலை வணங்கி சேராது.

அன்பாம் புத்தன் அவன்வழி புகழ்வோர்
அதன்நடை பயில விரும்ப வில்லை.
இரக்கம் காட்டிய ஏசுவைப் போல
எவரும் மன்னிக்க இரங்க வில்லை-இன்னும்
ஏமாறும் அடிமை  தீரவில்லை.

பணிவைப் பழகி பாரதம் மீட்ட
பாபு அண்ணல் கோழையில்லை
கண்டிக்கும் வேதம் காட்டும் வேகம்
தண்டிக்கும் கோபம் தானில்லை-வாழும்
தர்மம் ஏனோ புரியவில்லை.

இளகிய மனமாய் ஈகைக்குணமாய்
இறைநபி வாழ்ந்தார் பொய்யில்லை
வழங்கிய சேதி வாழும் நீதி
வள்ளல் அவர் போல் சாட்சியில்லை-ஏற்று
வாழ்ந்தால் உலகில் வீழ்ச்சியில்லை.

மந்தம் கூடி சொந்தம் சேர்ந்து
மடத்தில் அரட்டை கூடாது.
பந்தாய் ஓடி பரவிப் பறந்து
உரிமை தேடி உழைப்பை நாடி-நீயும்
உயரும் உயரம் வெற்றியே!

கொ`பெ`பி`அய்யா`