Thursday, 26 December 2013

கள்ளும் காமமும்.

கள்ளும் காமமும்

வெறியும் போதையும் வெவ்வே றறிக
புரியும் தேவையும் புண்ணி யமாக.
காமமும் செப்பிடும் காதலுள் போதையே!
கள்ளும் எதற்கது கொல்வெறி தீதையே!

காமம் மிகுந்திடில் நாணம் அறியுமோ!
கள்ளும் மிகுந்திடில் மானம் உணருமோ!
காமம் அலரிப்பின் களம்தான் தெளியுமோ!
கள்ளும் உளறிப்பின் ஒழுக்கம் விளங்குமோ!

நினைந்திடக் காமமும் நெஞ்சம் இனிக்கும்.
குடித்திடக் கள்ளும் குடியைக் கெடுக்கும்.
துணிந்திடக் காமமும் தாழை உடைக்கும்.
முனைந்திடக் கள்ளும் திருடப் பழக்கும்

ஊடலைக் காமம் ஒழித்தே அழிக்கும்
கூடலைக் கள்ளும் குழிக்குள் புதைக்கும்.
பிரிவினிற் காமம் உருகிப் பெருக்கும்..
அருந்திடக் கள்ளும் உருக்கி யழிக்கும்.

பற்றும் துறந்திடும் முற்றியும் காமமே!
சுற்றம் தொலைத்திடும் பற்றிய கள்ளதே!
நேயம் நிலைத்திடும் நேர்மையிற் காமமே!
தாயும் வெறுப்பாள் தவறிடும் கள்ளதால்.

மிஞ்சிய காமமும் நெஞ்சம் அடங்காது.
விஞ்சிடக் கள்ளும்  வெறியதும் தங்காது.
கொஞ்சிடும் காமமும் பஞ்சம் வருத்தாது.
கஞ்சிக்கும் கள்ளதால் கொஞ்சமும் மிஞ்சாது.

பொருந்திடாக் காமம்  புலம்பித் திரியும்.
அருந்திடாக் கள்ளும் அவனைச் சொரியும்.
விருந்திடாக் காமம் வருந்திப் பிரியும்.
நிறைந்திடாக் கள்ளும் குறைந்திட எரியும்.

காமம் பிழைப்பின் கலங்கிடும் சித்தமே!
கள்ளோ நிறைந்தால் விலங்கிடும் பித்தமே!
காமம் வளர்ப்பது காதலின் போதை.
கள்ளோ அரிப்பது காலமும் வாதை.

காமம் செறிந்திடு! கள்ளினை நீக்கிடு!
ஏமமும் காமம் இதயத்தில் தேக்கிடு!
நாளைத் தொலைத்து நடைபிணம் ஆகாது
வாழ்வது காத்து வளம்செய் உயிரது.

கொ.பெ.பி.அய்யா.

பி.கு;"-கள்" எனும் சொல் பொதுவாக மதுவகைக்
குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது.

ஏமம்--அரண் அல்லது காவல்.

No comments:

Post a Comment