Thursday, 24 December 2015

ஆதியில் வார்த்தை.

ஆதியிலே வார்த்தை இருந்தது.

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
யோவான் 1:1-5
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் வல்லவா.

ஆதியில் சத்தியம் வார்த்தை இருந்தது-அது
தேவனிடம் நித்தியம் தேவனாய் இருந்தது.
தேவனால் யாவுமாய்  உருவானது.-அவரே
ஏசுவாக தேவனோடு  ஜீவனாய் இருந்தார்

ஏசில்லாமல் ஏதுமில்லை ஆதியு மில்லை-எல்லாம்
ஏசுதானே ஜீவனுள்ள தேவனு மெல்லை
ஜீவன்தானாய் மனிதருக்கு ஒளியாகினார்--வல்ல
தேவன்தானே இருளி லொளிக்கு வழியாகினார்.

ஆதிதானே ஆவியாகத் தேவ னானது--அதுவே
தேவனாக ஏசுவாக ஜீவ னானது.
பாவிகளால் தூயாவி தானானது--புவியில்
ஏசுவாய் மனிதனாய் பாட மானது.

பாவிகளை இரட்சித்து தூய்மை யாக்கினார்--பாவிகள்
சாபங்களை சிலுவைக்கு தீப மாக்கினார்.
பாவங்களின் பாவமாய் தானுமாகினார்--மீண்டும்
ஆவியாய் விடுவித்து வான மேகினார்.

கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 22 December 2015

நெடும்புனல்

நெடும்புனல் 3

பதறி ஒடுங்காதே!
பாவம் எண்ணாதே!
பின்னால் ஒளியாதே!
பீதி நம்பாதே!
புண்படப் பேசாதே!
பூச்சியாய் வாழாதே!
பெண்டீரை இகழாதே!
பேதம் பழகாதே!
பைத்தியனாய் திரியாதே!
பொறாமை கொள்ளாதே!
போர்க்குணம் புதைக்காதே!
பௌசு பாராட்டாதே!
அப்பியாசம் தள்ளாதே!

மண்ணை துறக்காதே!
மாதாவை மறக்காதே!
மிகுந்தது மறைக்காதே!
மீட்டது சிதைக்காதே!
முன்சொல் மறுக்காதே!
மூத்தோரை வெறுக்காதே!
மெத்தனம் பேணாதே!
மேடைமொழி கேளாதே!
மொழி பிற  பகையாதே!
மோதல் தொகையாதே!
மையல்வெறி மாளாதே!
மௌசு மயங்காதே!
அம்மாமடி ஆறாதே!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 17 December 2015

பொன்னூஞ்சல்.

பொன்னூஞ்சல்

தேடிய தங்கம் தெருவில் கிடைத்ததில்
வாடிய நெஞ்சம் விரியும்போல்-ஊடியும்
கோடிய காதல் குமுதம் மலர்ந்தன்ன
கூடியும் பொன்னூஞ்ச லாடும்.

தொலைந்த பொருளும் தெரிந்த நிலையில்
அலைந்த மனமும் அடங்கினாற்போல் -காலை
கலைந்த உறவும் கலவுமாலை சேர்ந்தும்
குலைந்துமே பொன்னூஞ்ச லாடும்.

அடர்ந்த இரவும் விடிந்த பொழுதில்
அடைந்த விடுதலை ஆரவாரம்போல்-கோடித்
தடித்துப் பிரிந்து திரும்பிய நட்பும்
தொடுத்துமே பொன்னூஞ்ச லாடும்.

வீடு துறந்தும் காடு நிறைந்தும்தீர்
தேடுமுனி யோகமும் தோற்பன்போல்-ஈடெதும்
ஈடோதாய் நன்றி இழந்தான் முகர்ந்தும்கண்
ஓடியும் பொன்னூஞ்ச லாடும்.

பாட சாலை படிக்கத்தான் விடுத்தது
மூடிய பட்டிக்குள் முடங்கியபோல்-தேடியும்
வாடிய மழழையும் வாசலில் தாயவளும்
நோடியே பொன்னூஞ்ச லாடும்.

கொ.பெ.பி.அய்யா.












Wednesday, 16 December 2015

நெடும்புனல்2

நெடும்புனல். 2

சண்டைக்கு முந்தாதே!
சாதிக்கப் பிந்தாதே!
சிந்தை அடக்காதே!
சீற்றம் முடக்காதே!
சுதந்திரம் பிழைக்காதே!
சூதனம் பழகாதே!
செருக்கு முறுக்காதே!
சேவை வெறுக்காதே!
சைவம் அழிக்காதே!
சொல்லுக்கு மயங்காதே!
சோம்பி ஒடுங்காதே!
சௌதாயம் வேண்டாதே!
அச்சம் தூண்டாதே!

தமிழை கழிக்காதே!
தாய்தந்தை ஒதுக்காதே!
திமிர் பேசாதே!
தீவினை முனையாதே!
துணைக்குத் தயங்காதே!
தூய்மை கெடுக்காதே!
தெய்வம் பழிக்காதே!
தேசம் மறக்காதே!
தையலர் இழிக்காதே!
தொண்மை விலக்காதே!
தோல்விக்கு அஞ்சாதே!
தௌலம் பிசகாதே!
உத்தமம் மாறாதே!


மறந்த சொற்கள் -தெரிந்த பொருள்கள்
-----------------------------------------------------------
(பிழைக்காதே-தவறாகப் பயன்படுத்தாதே)
(பிறரை அழிக்க எண்ணாதே)
(தையலர்-பெண்டீர்)
கொ.பெ.பி.அய்யா.
(சௌதாயம்-சீதனம்,நன்கொடை,கையூட்டு)
(தொண்மை-பழமை-மரபு)
 (தௌலம்-துலாக்கோல்- தர்மம்--நடு நிலை)
(உத்தமம்-சத்தியம்-மேன்மை-தர்மம்)

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 15 December 2015

நெடும்புனல்3

நெடும்புனல்.

அம்மையப்பர் மறவாதே!
ஆக்கம் மறுக்காதே!
இயன்றது மறைக்காதே!
ஈகை ஒளிக்காதே!
உரம் விலக்காதே
ஊக்கம் மழுக்காதே
எண்ணம் கலங்காதே!
ஏற்றம் தயங்காதே!
ஐநிலம் பகையாதே!
ஒழுகாது ஓதாதே!
ஓரமொழி பேசாதே!
ஔவியம் எண்ணாதே!
ஃ என சோராதே!

கடவுளைப் பழிக்காதே!
கடமை கடத்தாதே!
கிடந்து கழிக்காதே!
கீழ்மை சேராதே!
குதர்க்கம் பேசாதே!
கூவித் திரியாதே!
கெட்டது கேளாதே!
கேடு பேணாதே!
கையூட்டு விழையாதே!
கொள்கை தவறாதே!
கோஷம் பழகாதே!
கௌடனை பாராதே!
அக்கடானு அலுக்காதே!

தொடரும்.........................

கொ.பெ.பி. அய்யா.

Sunday, 13 December 2015

பேர்சொல்லும் பிள்ளை.

பேர் சொல்லும் பிள்ளை.!

அள்ளியும் முத்தம் ஆடவும் வேண்டும்.
பிள்ளையும் பெற்றம் பேறும் கொண்டும்.
கொள்ளவும் வேறு என்னதான் வேண்டும்!
வள்ளல் நீயும் வாழ்கவே ஆண்டும்.

கொஞ்சும் நெஞ்சம் கர்வம் ஏறுது.
பஞ்சம் அஞ்சிய பாவம் போனது.
மஞ்சம் கெஞ்சிய  மாயம் தீர்ந்தது.
எஞ்சும் துஞ்சமும் ஏனினி வேண்டுது!

வாழ்வும் நீயென வாழ்வது கடமை.
நாளும் தேடல் நானுந்தன் அடிமை.
வாழுங் கல்வி வளர்வுன் உடமை.
ஆளுஞ் சிந்தை அடையும் பெருமை.

இவனது தந்தை இவனென ஊரும்.
அவனது பேரில் அடையாளம் கூறும்.
தவமாம் தாயார்  தன்பிள்ளை சிறப்பும்
இகமும் முற்றும் யாமாறும் பிறப்பும்.


கொ.பெ.பி.அய்யா.

Monday, 7 December 2015

சென்னை கண்ட பாடம்.

சென்னையும் கண்டது.

மொழியும் இனமும் மதமும் எங்கே!
மனிதம் மட்டும் மதித்தது இங்கே.
உறவும் முறையும் உயிரென ஒன்றே.
பரவும் சமூகம் பயின்றது இன்றே!

இடரில் மனிதன் இடறும் போதே
படரும் பழமை பரிவினில் தானே
உடுக்கை இழந்தான் உணர்வினைப் போலே
முடுக்கும் உதவி மனிதம் தானே.

உயிரும் உயிரும் உறவெனக் கண்டே,
உயிரும் தடையோ உறுதியும் கொண்டே,
உதவும் மனிதம் உலகினில் உண்டே.
இதுவும் நிசமே இறப்பில்லை தொண்டே!

சென்னையும் கண்டது முன்னைய சொந்தம்.
தன்னையும் கண்டது நன்னய பந்தம்.
மகத்துவம் கண்டது சகத்துவம் என்றும்.
இகத்துவம் கண்டது சமத்துவம் ஒன்றும்.

பேரிடர் பாடமும் ஆறிட வேண்டாம்.
யாரிடம் பேதமும் கூறிட வேண்டாம்.
ஊரிடம் வாசமும் மாறிட வேண்டாம்.
பாரிடம் பாசமும் மீறிட வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.

அம்மா.

அம்மாதான் அம்மா!

நான் இருப்பேன் நின்னருகே
ஏன் கலக்கம் என்னுறவே!
வீண் மயக்கம் என்னதான்!
தான் துடைப்பேன் அம்மாநான்!

என்நெஞ்சம் உன் வாசம்.
உன்தஞ்சம் என் நேசம்.
நம்சொந்தம் முன் பந்தம்
அம்மா நான் என்றென்றும்.

எண்ணும் போதும் சும்மாதான்.
எண்ணித் தேடும் அம்மாநான்.
என்னை முந்தி சிந்தைதான்.
உன்னை கண்டு ஆறும்நான்.

அம்மா துணை இருக்கிறேன்.
அஞ்சும் வினை அறுக்கிறேன்.
தும்முந் துயர் பொறுப்பேனோ!
அம்முன் அர வணைப்பேனே!

அம்மா தான் அம்மாவாம்.
சும்மா தான் மற்றெல்லாம்.
என்னுயிர் போல் போற்றும்
உன்னுயிர் நான் அம்மா.

கொ.பெ.பி.அய்யா.



Saturday, 5 December 2015

மனிதநேயம் தெரிகிறது.கட்டுரை

மனித நேயம் வெளிப்படட்டும்.

அன்பான அகில உலகில் வாழும் தமிழ்ப் பேரினமே!அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்.நூறாண்டு கால வரலாற்றில் இதுவரை தமிழகம் சந்தித்திராத இயற்கைப்பேரிடரை தமிழகம் இன்று கண்டு தாங்கொண்ணா இன்னலை சந்திக்க நேர்ந்துள்ளது என்பது வேதனையிலும் வேதனை.தமிழத்தில் குறிப்பாக சென்னை மாநகரும் அதன் சுற்றுப்புறமும் இத்துயர நிகழ்வால் அப்படியே முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

கூடியமட்டும் அரசு எந்திரங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் மீட்டிக்கொண்டு தர அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதும் ஒப்புக்குச்சப்பாக சொல்லவில்லை.உண்மையை மறைத்து இந்த நேரத்திலும் இக்கோர நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குவதுதான் வருத்தமாக உள்ளது. மானுட சுய மாச்சர்யங்களுக்கு இது களமோ தருணமோ அல்ல.ஒட்டுமொத்த மனித குலமும் பாகுபாடின்றி மனித நேய வெளிப்பாடோடு கைகோர்த்து இணைந்து நம் மனித இனத்தை இப்பேரிடரிலிருந்து மீட்டு மீண்டும் வாழவைக்க ஒருமனதோடு செயல்படவேண்டும் என்பதே இதயமுள்ளவர்களின் இன்றைய ஏகோபித்த வேண்டுகோளாய் உள்ளது என்பதே உண்மையிலும் உண்மை.

இன்றும் அரசோடு இணைந்து சமூக ஆர்வலர்களும்,எண்ணற்ற தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும்,மாணவச்செல்வங்களும் அயராது உதவிக்கரங்கள் நீட்டி உழைத்தும் வருகிறார்கள் என்று எண்ணும்போது இன்னும் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்றே தெளிவாகத் தோன்றுகிறது.

என்னதான் அரசு எந்திரங்கள் படாத பாடுபட்டாலும் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் எந்த ஒரு மீட்புப்பணிகளும் முழுமையான வெற்றியை எட்டமுடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

ஆகவே உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் இனத் தோழமைகளே தாங்கள் எல்லோருமே தாய்மண்ணின் மீது தளராப் பற்றுடையவர்கள் என்பதையும் தமிழ்ப்பேரினம் அறியும்.கருணை உள்ளம் கொண்டோர் என்பதும் தாங்கள் அவ்வப்போது தமிழுக்குக் காட்டும் பாசமும் பரிவும் வெளிப்படையானது என்பதும் நம்மினம் நன்றியோடு புரிந்துதான் வைத்துள்ளது.இந்த அவசரமான
காலத்திலும் தங்களின் பொன்னான கொடையுள்ளத்தை கொண்டு தங்களால் இயன்றதை வாரி வழங்கி நமது சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவேண்டி தங்களைப் பணிவன்போடு வேண்டி விரும்பி உரிமையோடு கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் உள்நாட்டிலும் வாய்ப்பும் வசதியோடும் வாழும் மனித உள்ளங்களையும், உதவிக்கரம் நீட்ட தமிழ்ப்பேரினம் சார்பாகக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12313509_929462587136817_3742254452265020584_n.jpg?oh=0e73a20dc6802c2698acc2646f36883e&oe=56D4A646