Wednesday, 25 December 2013

சாதிக்கா நீதிக்கா

தமிழனென்றே சொல்லுவோம்!

என்ன சொல்லி அழுவதோ!
என்ன எண்ணி சிரிப்பதோ!
யாரை இங்கு குற்றம் சொல்ல!
ஊரை என்று மாற்றம் செய்ய!

யாருக்கென்ன ஆசையோ!
போருக்கென்ன தேவையோ!
சாதிக்கொரு  நீதியோ!
சலுகையொரு பாதையோ!

சாதியென்ன சாதியோ!
ஆதியென்ன சாட்சியோ!
ஒதியென்ன இலாபமோ!
மீதியென்ன வேதமோ!

தொழில்முறை ஏற்பாடோ!
வழிமுறை முற்பாடோ!
விளிமுறை சொற்பாடோ!
தலைமுறை பிற்பாடோ!

கூட்டத்திற்கொரு விதம்.
கொண்டாடிய களி பதம்,
ஏற்றத்திற்பெறும் நிதம்
என்னடா  பிரி மதம்.!

ஒலிகண்டு மொழிகொண்டோம்.
ஒருமந்தை உறவென்றோம்.
உறவுக்குள் பிரிவென்ன!
உணர்வுக்குள் இனமென்ன!

நேற்று வந்த சாதி மதம்.
வேற்றுமைகள் ஆனதோ!
ஊற்றுக் கண் ஓரினம்.
தோற்றுத்தான் போனதோ!

மொழியின்றி வழியுண்டோ!
வழி ஒன்ற பகையுண்டோ!.
மொழி என்ற ஓரினம்.
நிலை கொண்டால் பிரிவுண்டோ!

வேதங்கள் சொல்வதென்ன!
ஆதிமூலம் ஒன்றுதானே!
பேதங்கள் என்பதென்ன!
வாதங்கள் கொண்டுதானே!

திருக்குறள் பொதுமறை.
ஒருகுரல் வழிமுறை.
மறுப்பில்லா வரையரை
பொறுப்புள்ள உரைநிறை.

மெய்வழி உணருவோம்.
பொய்மொழி விலகுவோம்.
ஆதியும் பகவனுமே
அம்மை அப்பன் ஆகுமே!

மொத்தமும் சேர்ந்திழுப்போம்
சத்தியம் தேர் நகரும்.
ஒத்தையா  சோர்ந்திருந்தால்
எட்டுமோ சேருமிடம்.!

பிழைப்புக்கு பிரித்து வைத்தார்.
பிழையாக்கி பகை வளர்த்தார்.
தலைமைக்குத்தனை பெருக்கி


நிலைமைக்கு வினை விதைத்தார்.

தமிழனென்று சொல்லுவோம்!
தலை நிமிர்த்திச் செல்லுவோம் !
அடையாளம் தமிழன்றோ!
அது நம் இனமன்றோ!

கொ.பெ.பி.அய்யா..





No comments:

Post a Comment