இனியென்ன தூரம்?
இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன தூரம்?
உறவுக்கும் உணர்வுக்கும்
கணக்கில்லை நேரம்.
நிலவுக்கும் கதிருக்கும்
நெருங்குது தூரம்.
தழுவவும் கூடவும்
தள்ளுமோ வாரம்!
மலருக்கும் மணத்திற்கும்
இடையென்ன தூரம்?
நுகரவும் பகிரவும்
அதற்கில்லை பாரம்.
நாற்றுக்கும் காற்றுக்கும்
நாணமோ தூரம்!
வளையவும் குலையவும்
வரையுமோ தாரம்!
முகிலுக்கும் முகடுக்கும்
துகிலென்ன தூரம்!
நெகிழவும் முகரவும்
நிகழ்வென்ன சோரம்!
கொடிக்கும் கொம்புக்கும்
கூடிடும் தூரம்!
துடிக்கும் பின்னவும்
துளிர்த்திடும் சாரம்.
காருக்கும் சேறுக்கும்
தேருமோ தூரம்!
இசைந்திடப் பிசைந்திட
கசிந்திடும் ஈரம்.
ஆடைக்கும் மேனிக்கும்
தடையில்லை தூரம்.
வாடைக்கும் குளிருக்கும்
இடமில்லை ஓரம்!
வானுக்கும் வில்லுக்கும்
வளர்வில்லை தூரம்!
நாணும் தொலைந்ததும்
நிறையுது தீரம்!
முத்தவும் ஒத்தவும்
எத்தனை தூரம்?
அத்திட அகலும்
மொத்தமாய் தூரம்.
குளிரும் மேகமும்
கலவிடும் தூரம்
குறையுது கரையுது
நிறையுது கீரம்.
பூவுக்கும் வண்டுக்கும்
புரிந்தது தூரம்.
ஆவுக்கும் காளைக்கும்
அதுதான் வீர்ம்.
கொ.பெ.பி.அய்யா.
தாரம்--எல்லை
துகில்--ஒருவகைக்கொடி
சாரம்---கொடி பற்றிக்கொள்ள சுரக்கும் திரவம்.
நசியுது----அழியுது,கரையுது,உடையுது
தீரம்----வரப்பு,கரை
கீரம்--மழை பொழிந்து பெருகிய நீர.
No comments:
Post a Comment