Friday, 27 January 2017

விடியட்டும்.

விடியட்டும் விலகச்சொல்லு!

மக்களுக்கே உழைத்திட்ட
மாமனிதம் போற்றிட்ட
மறுவில்லா அரசியல்--இன்று
மறைந்தவொரு விரசியல்.

காந்தியர் காமராசர்
ஏந்திய தேசியம்.
குடும்பவியம் ஆனதோ-இன்று
தடமாறிப் போனதோ!

குடும்பங்களே கட்சிகள்.
இடும்புகளே இயக்கங்கள்.
உடும்புப்பிடி நாற்காலி-இன்று
படும்பாடு போர்க்கோலம்.

விடியலைக் காட்டியவர்
விருதுபட்டிக் கோட்டியவர்.
பொடியனிடம் தோற்றபாவம்-இன்று
எறுமைகள் மேயும்சாபம்.

ஏமாறுந் தமிழனோ
இழக்கின்றான் சுதந்திரம்..
சோமாறும் எவனெவனோ-இன்று
கொழுக்கின்றான் தினந்தினம்.

அடிமைகளாய்த் தொண்டன்கள்
அடியாளாய்த் தண்டங்கள்.
கொடியேந்தும் கைமரங்கள்-இன்று
கொடிக்கென்ன கொள்கைகள்!

அடிமைத்தனம் ஒழித்திடத்தான்
உரிமைக்கணம் விழித்தது.
வழிவழித் தலைமுறைக்குள்-இன்று
ஒளித்தடிமை இலைமறைக்குள்.

விடியலைத் திருடத்தான்
விட்டிலைச் செருகுகிறான்!
விடியட்டும் விலகச்சொல்-இன்று
முடியட்டும் கழுவித்தள்!

வெக்கங்கெட்ட பயணங்கள்
நக்கி வாழும் நயனங்கள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்-இன்று
சிக்கி மீட்பு எப்போ!எப்போ!

மாற்றமென்றால் என்னய்யா?
மாற்றமொன்று சொல்லய்யா!
நாட்டாத புதியவன்-இன்று
நாட்டுவது தானய்யா!

விடுதலை விளைத்திட
விதையான உயிர்களே
விளைந்துதான் எழுவீரோ-இன்று
விடியலாய் விளைவீரோ!

கொ.பெ.பி.அய்யா..

Wednesday, 18 January 2017

நகரமா நரகமா?

வீடுகளா கூடுகளா!

வீடுகளா கூடுகளா விளங்கவில்லையே!
வாழுவதும் மனிதர்களா துலங்கவில்லையே!
விடியலுக்குக் காத்திருக்கும் பறவைக் கூட்டமாய்
வெளிச்சமென நம்பித்தான் பறந்து தேடுதோ!

நரகமா நகரமா புரியவில்லையே!
அவலந்தான் வாழ்க்கையா தெரியவில்லையே!
நாற்றமே காற்றாகி நகரும் நெருக்கமாய் 
நாதியற்ற துயரந்தான் நாகரிகமா! 

அவசரமே வாழ்க்கையா தெரியவில்லையே!
அடையுமிடம் எங்கேயோ
தோணவில்லையே!
பழகிக்கொள்ள நேரமில்லா
உறவுப் பஞ்சமாய்
வாழும் இந்த வாழ்க்கைதான்
மனித நேயமா!

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.