உன்னைக்
காணாத...............!
உனைக்
காணாதக் கண்கள்--பீளைச்
சுனை தானோ! புண்கள்
நீ
நிறையாத இடமோ--பாலை
வனம் தானோ!மனமோ!
உனை
எண்ணாத நெஞ்சும்--புகை
நஞ்சுந் தானோ!தஞ்சம்.
நீயில்லாதப்
பொழுதும்--கொல்லும்
தொல்லை தானோ!முழுதும்.
உனைத்
தீண்டாத கரங்கள்--பட்ட
மரம் தானோ!நிசங்கள்.
நீ
அணையாத தூரம்--எட்டாக்
கனி தானோ!சோகம்.
உனை
வேண்டாத சுரங்கள்--அழும்
சுதி தானோ!வரங்கள்.
நீ
பாடாத கவிதை--சுடும்
வரி தானோ!உயிரை.
உனைக்
கேளாத செவியோ--ஒலைச்
சுருள் தானோ!சருகோ!
நீ
சொல்லாத சேதி--மரண
மடல் தானோ!தேதி.
உனை வாசியா நாசிகள்--தூசித்
துளை தானோ!ஓட்டைகள்.
நீ
வீசாத வாசங்கள்--உயிர்க்கு
பகை தானோ!தோஷங்கள்.
உனை
முத்தாத அதரங்கள்--காய்ந்த
மலர் தானோ!சருமங்கள்.
நீ
ஊட்டாத மதுரங்கள்--சாய்ந்து
நான்
மாய்ந்திடத்தான் விசனங்கள்!
உனைத்
தழுவாத ஏக்கங்கள்--தீ
வினை தானோ!தாக்கங்கள்.
நீ
தணிக்காத தாகங்கள்--பாலை
ஏங்கிடத்தான் மேகங்கள். !
உனைச்
சுவையாத ஐம்புலன்கள்--வாட்டும்
பகை தானோ!ஊடல்கள்.
நீ
திகட்டாத தீங்கனியோ!---நிதம்
தேடிடத் தான் நீங்கினியோ!
உனை
அகலாத மேனியிதும்--தீய்ந்தும்
அடங்கத் தானோ!தேடுவதும்.
நீ அழுகாத பொற்கனியோ!--ஒருநாள்
நீ அழுகாத பொற்கனியோ!--ஒருநாள்
அள்ளி அழுதிடத்தான் இக்கதியோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment