Wednesday, 18 December 2013

வெளுத்திடு வெள்ளை

வெளுத்திடுமா வெள்ளை?

பொழுதும் வெளுத்து அலுத்துவிட்டார்--புலமை
முழுதும் கசக்கிப் பிழிந்துவிட்டார்.
அடித்தும் இடித்தும் முறுக்கிவிட்டார்--இன்னும்
வெளுத்து முடியாமல் வெளுக்கின்றார்.

அழுக்கும் தொலைந்து ஒழியவில்லை--ஏனோ
வெளுத்தும் வெள்ளை வரவில்லை..
பழுப்பும் வெளுத்து ஒளிரவில்லை--வீணோ
பலரும் வெளுத்துதும் பலனில்லை

தினமும்  அடித்து வெளுத்திருந்தால் --தூய்மை
துணியில் தொடர்ந்து இருந்திருக்கும்.
காலம் காலமாய் சேர்ந்த அழுக்கு--என்ன 
காரம் உண்டிதை வெளுப்பதற்கு/

வள்ளுவன் தொட்டுப் புலவரெல்லாம்---அழுக்கு
அள்ளிக் கும்மி வெளுத்துவிட்டார்.
இன்னும் வெளுத்தும்  தீரவில்லை--அதனால்
ஒண்ணும் பின்னும் மாறவில்லை,

ஆசை அழுக்கை அகற்றப்புத்தன்--அவனும்
அலசித் துவைத்து வெளுத்துவிட்டான்.
மாசைக் களைய இயலவில்லை--மனிதன்
மனதை வெளுக்க முடியவில்லை.!

பாரதி வெளுத்தும் அழியா மலங்கள்--இன்னும்
யாரது வெளுத்தும் வெளுத்திடுமோ!
சித்தம் ரத்தம் மொத்தங்கரைத்தும்--பேதப்
பித்தம் ஒழிந்த பாடில்லை.

உயிர்கள் வதையா மனிதந்தானே--மதங்ள்
உரைக்கும் தூய மறைமொழிகள்?.
உள்ளம் வெளுக்க்கும் முயற்சிதானே--மறைகள்
எல்லாம் கூறும் திருவழிகள்!

ஊழல் கறையும் ஒழிவதெப்போ--சுயநல
ஆளல் முறையும் அழிவதெப்போ?
சாதி மதமெனும் புகையிலைக்கறையோ--வேதி
நீதி மருந்தும் வெளுப்பதெப்போ?

தர்மம்  வெளுக்க உழைத்தது--எல்லாம்
வர்மச் சேறாய் ஆனதினால்
கர்மம் கண்ணாய் வெளுத்தாலும்--தீய
கறையொழிந்தும் தீராது.

தீரா அழுக்கும் பூரணம் வெளுக்குமோ--தீர
ஊராச் சேர்ந்தும் வெளுத்திடுமோ!
தாரா வெள்ளை ஆராக் காத்து--மனது
நேராய் வாழப் பழகிடுமோ!

கொ.பெ.பி.அய்யா..






No comments:

Post a Comment