Thursday, 19 December 2013

திருப்பதி உண்டியல்.

உள்ளம் ஒரு கோவில்.

திருப்பதி மலையப்பாஉன்
திருவடி துணையப்பா
இருப்பது நிலையப்பாஅது
ஏழையின் மனதப்பா.

உண்டியல் நிறைத்திட்டேன்--நான்
உன்னருள் கரைந்திட்டேன்.
உண்டியும் கொடுத்திட்டேன்ஏழை
உளம் நிறைக்க மறந்திட்டேன்.

அன்னமும் தானமும்நான்
ஆயிரமும் செய்திட்டேன்.
எண்ணமும் நிறையவும்ஏழை
இதயமதும் மறந்திட்டேன்.  

தேரதுவும் இழுத்திட்டேன்நான்
தெருவெல்லாம் பூவிட்டேன்.
ஊர் வாழும் வறுமையில்ஏழை
உழலுவதும் மறந்திட்டேன்.

பட்டுனக்குக் கட்டிட்டேன்நான்
பகட்டினைக் காட்டிட்டேன்.
ஒட்டுத்துணி ஒட்டாதஏழை
உறுபிணி மறந்திட்டேன்.

தோரணங்கள் அமைத்திட்டேன்நான்
ஊருக்கும் காட்டிட்டேன்
தெருவினில் படுத்துறங்கும்ஏழை
இருப்பதும் மறந்திட்டேன்.

ஊரெல்லாம் கூட்டிட்டேன்நான்
ஊர்கோலம் செய்திட்டேன்.
ஊரினில் ஒரு கோவில்ஏழை
கூரையை மறந்திட்டேன்.

கோவிலும் கட்டிட்டேன் நான்
கோபுரமும் உயர்த்திட்டேன்.
உண்மையில் உன் கோவில்ஏழை
உள்ளமதும் மறந்திட்டேன்.

மலையேறி வந்திட்டேன்நான்
தலையுனைத் தேடிட்டேன்
இலையெனப் புரிந்திட்டேன்ஏழை
மனத்தேற மறந்திட்டேன்.

கொ.பெ.பி.அய்யா.










 



No comments:

Post a Comment