Monday, 23 December 2013

பெண்குலம் காப்போம்.

பெண்குலம் காப்போம்!

மண்ணில் பல அருமை உயிரினங்களை
கண்ணில் படாமல் தொலைத்து விட்டோம்!
மண்ணின் உயிரான பெண்ணினத்தையும்
எண்ணிப் போற்றாமல் இன்று தொலைத்துக்
கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை!
தாயில்லாமல் நீயா?

காலத்தின் சுழற்சியை நிறுத்தும் முயற்சியில்
நாளும் சில நயவஞ்சகங்ககள் நடந்தேறுகின்றன!
வாழும் உலகின் சுவாசத்தை அடைத்துவிட்டு
வாழப்போவதும் இங்கு யாரோ சொல்!
கோலமில்லாப் புள்ளிகளாய் குன்றுகளே மிஞ்சும்!
மண்ணில்லாமல் பெண்ணா?

வாசலை அடைத்த வீட்டில் வரவுக்கு யாரப்பா!
வாரிசும் பெண்ணின்றி வருவதுண்டோ கூறப்பா!
வாயு மட்டும் அலையுமிங்கு வரலாறு சுமந்தப்பா!
பேயுங்கூடத்திரியாது பெண்ணில்லா பூமியப்பா!
ஓயுமுன் உணர்ந்து நீ பெண்ணினம் போற்றப்பா!
கோழியில்லாமல் குஞ்சுகளா?

கடலிருக்கும் காற்றிருக்கும் மலையிருக்கும்!
நிலமிருக்கும் நீரிருக்கும் வளமிருக்கும்!
இயற்கை தந்த எல்லாச்செல்வங்களும் இருக்கும்!
ஆணின ஆதிக்கமும் ஆங்காங்கே ஒளிந்திருக்கும்!
ஆனால் மனிதத்தடம் மட்டும் மறைந்திருக்கும்
பெண்ணினம் அழியலாமா?
  
அருகித்தான் சுருங்குது அருமைப் பெண்ணினம்!
ஆராய்ச்சிமணி ஒலியின் எச்சரிக்கை தினந்தினம்!
கருவிலே கொன்றழிக்கும் கருமந் தொலையவில்லை!
திருமண வன்மைகளும் தேசத்தில் குறையவில்லை!
ஒருமனப்பட்டு உயிராம் பெண்குலம் காப்போம்!
பெண்ணழித்து தன்னொழிவா?

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment