Thursday, 19 December 2013

மனிதன் இருக்கின்றானா?


மனிதன் எங்கே?

மனிதன் என்றொரு மகத்துவம் எங்கே?
மனதன் என்றொரு சகத்துவம் எங்கே?
மனிதம் என்றொரு படைப்பும் எங்கே?
இனிதாம் என்றொரு விடையும் எங்கே?

மனிதன் அவனின் அடையாளம் எங்கே?
மனதின் அவனின் கொடைநலம் எங்கே?
மனமது அவனின் சிறப்பும் எங்கே?
குணமது அவனின் பிறப்பும் எங்கே?

மாவினம் விலகிய அனுபவம் எங்கே?
நாவிதம் பழகிய மனபவம் எங்கே?
காவினம் தேறிய சேர்தல் எங்கே?
தீவினை நல்வினை தேர்தல் எங்கே?

காலம் படித்த பாடங்கள் எங்கே?
கோலம் பதித்த ஞானங்கள் எங்கே?
மூலம் விதித்த கூடல்கள் எங்கே?
ஞாலம் விரித்த தேடல்கள் எங்கே?

ஆறாம் அறிவாம் ஆளுமை எங்கே?
கூர்மையும் புரிதலும் நேர்மை எங்கே?
ஊராம் உறவாம் உணர்வும் எங்கே?
தேறா மனிதம் தேறுதும் எங்கே?

இறைவன் இருப்பும் அறிவதும் எங்கே?
இதயம் மறந்தும் சிதைவதும் எங்கே?
உறைவதும் அறிவும் உனக்குள் எங்கே?
நிறைவதும் இறைவன் வேறிடம் எங்கே?

இறைவன் வாழும் இதயம் எங்கே?
மறையவன் கூறும் மனிதம் எங்கே?
சிறையென மாறும் சிந்தை அங்கே:
இறையெனும் நேர்மனச் சாட்சியும் எங்கோ!

ஓரினம் என்னும் உணர்வும் எங்கோ!
வேறினம் எண்ணும் வினையும் ஏனோ!
யாரினம் நண்ணும் நினைவும் எங்கோ?
சேரினம் துன்னா சிறுமை தானோ!

மனிதம் பழகா மடமை எதற்கோ!
புனிதம் விலகும் போர்க்குணம் எதற்கோ!
சகிதம் பகைத்தும் சாதிப்ப தெதுவோ!
உசிதம் தகர்த்தும் உயர்த்த லெதுவோ!

மூலம் தெளிந்தால் ஞானம் துலங்காதோ!
ஞானம் உணர்ந்தால் தானம் விளங்காதோ!
தாயம் ஒன்றென நேயம் அறியாதோ!
மாயம் மற்றென நியாயம் புரியாதோ!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment