Sunday, 3 May 2020

சத்தியம் போற்றுபவன்.

வைகிறவன் வைகிறான்
வாரிசை மெய்பிக்கிறான்.
செய்கிறவன் செய்கிறான்
சிந்தையிலே நிற்கிறான்.

பொய் சொல்லப் பிறந்தவன்
பொழப்புக்காக புளுவுறான்.
மெய் சொல்லி வாழ்கிறவன்
நெஞ்சங்களை ஆள்கிறான்.

யோசிக்காமல் பேசுபவன்
தூசாகித் தொலைகிறான்.
பேசும் முன்னே யோசிப்பவன்
வாசகமாய் நிலைக்கிறான்.

வஞ்சத்தில் இடிக்கிறவன்
வெஞ்சினத்தில் முடிக்கிறான்.
நெஞ்சத்தால் மொழிகிறவன்
எஞ்சி மனிதம் பொழிகிறான்.

உள்ளொளித்து வாதிடுவான்
கள்ளம் வைத்து மோதுபவன்.
நல்லதே சொல்லுவான்
வெள்ளை மனம் உள்ளவன்.

கத்திக் கூட்டம் கூட்டுவான்
வெத்து வேட்டு வெடிக்கிறவன்.
சத்தம் இன்றி ஆற்றுவான்
சத்தியம் போற்றுபவன்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment