Sunday, 15 December 2024

எங்கே கடவுள்,,?

எங்கே கடவுள்!எங்கே கடவுள்!
என்றே ஓடு!
அங்கே கடவுள்!இங்கே கடவுள்!
எங்கே தேடு!
கஷ்டம் வந்தால் கடவுள் தேடும் கஷ்டம் வேண்டாமே.
இஷ்டம் கொண்டே ஏழைக்கவன்
இரங்கி யருள்வானே!

இல்லை இறை என்றே சிலர் மறுத்துச் சொல்லுவார்.
இல்லம் உள்ளே பூஜை அறை
மறந்தே பேசுவார்.
படைக்காமல் எதுவுந்தானே ஆவதே இல்லை.
படைக்கும் மூல இயற்கையே
பகவா னென்போம்.

பகுத்தறிவு  என்பதையும் பகுத்துப் பாருங்கள்.
தொகுத்த அந்த இயற்கையை
தொழுது கூறுங்கள்.
சக்தி யன்றி எதுவுமே சாத்தியம் இல்லை.
சக்திதான் சாமி யென்றால்
பக்தி என்றில்லை.

உடலுக்குள் எத்தனையோ உறுப்புக்கள் உண்டு.
உடன்பட்டு கடன்பட்ட பொறுப்புக்கள் கொண்டு
எந்திரம் போல் இயங்கச் செய்த
விஞ்ஞானி யார்?
தடை படாமல் சுழலும் பூமிக்கு
உடையவன் யார்?

கடல் நீரை ஆவிபோகக் காய்ச்சியது யார்?
கதிரவனுக்கு கட்டளையிட்ட அதிகாரி யார்?
இயக்க வல்ல மூலம் ஒன்றை
இயற்கை என்கிறோம்.
இயற்கை யென்ற சக்தியையே இறையென்று தொழுகிறோம்.

கொ.பெ.பிச்சையா.






No comments:

Post a Comment