வந்ததில் அழுதோம்
போவதில் அழவைப்போம்.
எந்தநாள் அந்த நாள்
இரகசியம் எவரறிவார்?
சொந்தம் பந்தம் சேர்த்ததும் எல்லாம்.
வெந்த பின் என்னவோ
விளங்கியும் எதற்கோ!
இல்லார்க்குக் கொடுத்தே
இயல்வது வாழ்க்கை.
விருந்தாளி போலவே
நிரந்தரம் இல்லையே.
எதற்கிங்கு வந்தோம்.
அதற்கென்ன செய்தோம்.
பூமிக்குச் சுமையாய்
பிறந்ததோம் வீணோ!
வாழ்ந்தா ரென்றால்
வரலாறு உண்டா?
எல்லாம் கனவாய்
சொல்லாய் அழிந்ததோ!
பிறந்தார் என்பதும்
இறந்தார் அன்றோ!
பிறந்தோம் என்பது
பெற்றவள் வலியும்
பிழைத்தோம் என்பது
அழுகையின் ஒலியும்.
வளர்ந்தோம் என்பது
வார்த்தவர் வளர்ப்பும்
அறிந்தோம் என்பது
அப்பனின் துடிப்பும்
வாழ்க்கை என்பது
வாழ்ந்தவர் படிப்பும்.
எல்லாம் எதற்கோ?
இறந்திட அதற்கோ!
நலம் செய விரும்பு
நாளும் வாழ்வே.
பிறப்புக்கு எல்லாம் பொறுப்புக்கள் உண்டு.
இறப்புக்கு உள்ளும்
பிறப்புக்கள் உண்டு.
பொறுப்பை முடித்தார்
இறந்தும் வாழ்வார்.
வாழ்ந்தா ரெல்லாம்
வரலா றாவார்.
வரலா றென்றால்
பொது நல வாழ்வாம்.
மரணம் என்பதே
வரலாறுக்கு இல்லை.
வாழ்ந்தும் வாழவை
வரலாறு படைப்போம்.
அவரவர் உரிமை
அவனியில் காப்போம்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment