உள்ளம் ஒரு கோவிலாம்.
உள்ளே உள்ளான் இறைவனாம்.
உள்ளம் தூய்மை யானதால்
உள்ளே வந்தான் இறைவனாம்.
கள்ளமில்லை கபடமில்லை
உள்ளிருக்கும் அவனால்.
பள்ளிக்கூடம் உள்ளேதான்
சொல்லித்தரும் சன்மார்கம்.
ஒளி நிறைந்த உள்ளம்.
வழி திறந்த இல்லம்.
மூடாத ஆலயம்.
வாடாத மாலையாம்.
ஓதாத மந்திரங்கள்.
வேதங்கள் பசனைகள்.
ஓயாத பூசைகளும்
தேயாத திருவிழாவாம்
அங்கிங் கெண்ணாது
ஆண்டவன் அவனையே
எந்நாளும் எப்போதும்
என்னையே தொழுகிறேன்.
என்னுள்ளே இருக்கிறான்.
எங்கும் நான் செல்லேனே
உறைகிறான் என்னுள்ளே
இறைவன் எனை உணர்கிறேன்.
உள்ளத்துள் ஒளிர்கிறான்.
இல்லமதில் மிளிர்கிறான்.
வள்ளல் அவன் வாழ்கிறான்
அள்ளி யள்ளி வழங்குகிறான்
தெய்வீகம் நானானேன்.
திருமகன் ஆகினேன்.
பெய்வதும் அருள் மழையில்
மெய்வழியே நானானேன்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment