Friday, 7 November 2025

வானை நம்பி.........

வானை நம்பி......

விண்ணை நம்பி பொன்னை வச்சோம்
பொன்னை மீட்ட விதை விதைச்சோம்.
விதை விதைச்சி வானம் பாத்து 
மழைய வேண்டித் தவம் கிடந்தோம்.
 
அம்மான்னு அழும்புள்ளய 
அமத்தத் தாய்க்குப் பாலு வல்ல.
சும்மா சும்மா சப்பிச் சப்பி
சோந்து புள்ள அசந்து போச்சு.
அசந்த புள்ள முழிச்சதுன்னா 
ஆறுதலா என்ன சொல்ல.
வானத்தையே பாத்துப் பாத்து 
தான தர்மம் விழுது செத்து.

கண்ணா மூச்சு விளையாட்டா
கடவுளுக்கு என்ன ஆச்சு.
என்னதான் நினைச்சிருக்கான்
என்ன செஞ்சு முடிக்கப் போறான்.
மண்விளைய மழை இல்லேன்னா
பொன்னிருந்தும் என்ன செய்ய.
கையிருந்தும் காலிருந்தும்
கஞ்சிக்கென்ன வழிசெய்ய.

இலவசங்கள் வாங்கி வாங்கி
இரும்புப் பெட்டி நிறைஞ்சாலும்
பலம் குறைஞ்சு வலிமை கெட்டு
பாடுபட மறந்து போச்சு.
வாயில் சுட் ட வடை எல்லாம்
வயித்துப் பசி தீத்துடுமா.
காய்ஞ்சு போன பூமியையே
கண்ணீரே நனைச்சிடுமா.

காமராஜர் கக்கன் அந்தக்
கடவுள்கள் பிறக்க வேணும்
காலத்தில் பெய்யும் மழை
கடல் மறக்கத் தடுக்க வேணும்.
நீர்நிலைகள் பெருக்கி எங்கும்
வானம் பொய்த்தால் திறக்க வேணும்.
பசுமை செய்து பூங்காற்றால்
பார்குளிர்ந்து செழிக்க வேணும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






No comments:

Post a Comment