Sunday, 16 March 2014

எல்லாம் இரண்டே.

எல்லாம் இரண்டே!!

நேரும் எதிரும் நிலவாதிங்கே  
நிசங்கள் இல்லை இயற்கையிலே.
சேரும் சேரா மதியாதிங்கே
செலவும் இல்லை வரவினிலே.

காற்றும் நீரும் வேண்டாமலே
ஆற்றும் உயிரும் இங்கில்லை.
சூடும் குளிரும் தீண்டாமலே
சுகமும் இல்லை பூமியிலே!

கருப்பு வெள்ளை மூலமில்லா
கண்கள் இரண்டில் காட்சியில்லை.
விருப்பு வெறுப்பு விளக்கமில்லா
அற்புதம் ஏதும் இங்கில்லை.

வானும் மண்ணும் இரண்டுமில்லா
வளமுமில்லை இயற்கையிலே
ஆணும் பெண்ணும் இரண்டுமில்லா
வாழ்வுமில்லை படைப்பினிலே.

இன்பம் துன்பம் கலப்பில்லாமல்
இங்கும் வாழ்க்கை இதமில்லை.
காதல் மோதல் உரசாமல்
கடக்கும் பயணம் சுவையில்லை.

இப்படி அப்படி என்றே எல்லாம்
இரண்டு விதமும் சமாதானம்.
பழகும் இலக்கணம் .ஏற்பதால்
பிழையும் சரியே நன்மையெனில்.

இயற்கை செயற்கை கொள்கையில்
இயலும் செயலும் அறிகையில்
பயிலும் பாடம் எல்கையில்
இயல்பை மீறும் தீமையில்.

எல்லாம் இரண்டாய் இருப்பதினாலே
வல்லான் படைப்பும் வாழுதிங்கே.
அல்லும் பகலும் தொடர்வதினாலே
இல்லை சலிப்பும் இனிதே சுகமே!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment