உசுரு
ஒண்ணு போகுதம்மா.
உசுருன்னு
சொல்லுவாக--அத
ஒருவருமே பாத்ததில்ல.
பிரிஞ்சதுன்னும்
சொல்லுவாக--அத
பிரியக்கண்டும்
அழுததில்ல.
என்னோட உசுரு போகுதம்மா –அது
என்னவிட்டும்
பிரியுதம்மா.
செத்துப் போன பிணமா நின்னு—நான்
சிந்துரனே
கண்ணீரம்மா.
பொத்திப்
பொத்தி வளத்த கன்னு
பொட்டப்புள்ள
போகுதம்மா.
சுத்தி
சுத்தி வந்த பொண்ணு
சொந்தம்
விட்டுப் போகுதம்மா.
பாத்துப்
பாத்துக் காத்த தங்கம்
பாத
கூடிப் போகுதம்மா.
நேத்துவர
எங்க சொந்தம்
இன்னைக்கது வேற சொந்தம்?
மடி
சுமந்து பெத்த பந்தம்
மனசழுது
போகுதம்மா.
பொண்ணாகப்
பொறந்திரிச்சோ
மண்ண
விட்டுப் பிரிஞ்சிரிச்சோ!
வளந்ததொரு
பாவமாச்சோ!
வளத்ததொரு
குத்தமாச்சோ!
இழந்தேன்னு
அழுவேனா--இல்லக்
கடமயின்னு
ஆறுவேனா?
பொண்ணுக்கொரு
தொணவேணும்
எண்ணி
மனம் ஆறிக்கணும்
என்னைக்கும்
நீ வாழ வேணும்
எம்மனசும்
தேற வேணும்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment