தோகை விரித்துத் துணையைத் தேடும்
பாகை அகற்றிப் பரப்பி ஆடும்
மேகம் கண்டு மெய்யது சிலிர்த்து
தாகம் காட்டித் தன்னாளை ஈர்க்கும்.
கார்மேகம் கழன்று சுழன்று நேர்வசம்
ஊர்மீது இரங்கி உழன்று சூழ்வாசம்
கண்டு மகிழ்ந்து குளுமை நயந்து
செண்டாடும் நீர்த்துளி தண்மை வியந்து
அழகில் அழைத்து ஆரோக்யம் காட்டும்
பழகும் விதத்தில் பகட்டைத் தோற்றும்
உலகில் என்போல் அழகினில் யாரோ!
தலைக்கனம் ஏற்றி தள்ளாடு வாரோ!
பெண்ணழ கென்றே பெருமை பேசும்
பெண்ணவள் வியந்து அருமை கூசும்
என்னே எழிலெனத் தன்பால் கவர்ந்து
முன்னே பின்னே நடமிடும் பயின்று.
அழகு நடனம் ஆண்மை மயங்கி
அதனது உதிர்வு பெண்மை கவர்ந்து
தன்சினை ஏந்தி தன்னினம் பெருகப்
பெண்ணின் பெருமை கொண்டாள் அருமை.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment