இறைவா நீ வண்டிக் காரா"
எங்கே வண்டி ஓட்டிப் போகிறாய்?
உறையும் உள்ளே ஆன்மா.நீ!--வண்டி ஆளும் அறிவே நீதான்.
பூட்டிய வண்டி உடலாக
மாட்டிய காளைகள் உயிராக,
வண்டிக் காரன் ஓட்டுகிறாய்--வண்டி
பயணம் எங்கே செலுத்துகிறாய்.
வண்டிக்காரா வண்டிக்காரா"
வண்டியை ஓட்டும் வண்டிக்காரா!
சண்டிக் காளைக ளானாலும்--வண்டி
சுண்டி ஓட்டுநீ வகையாக.
வண்டி மாடுகள் எப்படியோ!
வண்டிக் காரன் நீ தானே.!
சேரும் ஊரை சேர்ப்பதுநீ--வண்டி
செல்லும் முறைமை பொறுப்பு.நீ
திமிரும் எருதுகள் விலகினால்
அமரும் உன்னிலை பிசகினால்
ஓட்டும் பாதை தவறினால் --வண்டி
ஓட்டி நீதான் தவறிவிட்டாய்.
நல்லதும் கெட்டதும் நீ பொறுப்பு.
அல்லல் நேராதே ஓட்டு நீ!
விடைதான் என்ன இரகசியமோ--வண்டி
அடைவதும் ஆவதும் உன்வசமோ!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment