வளமென்ன இனிவேண்டும்?
பொன்னே பூச்சரமே புன்னைமர இளங்காற்றே
கண்ணே கண்மணியே காலையிளங் கதிரொளியே
பெண்ணே பெண்ணரசே பேசுமொழி சித்திரமே
எண்ணே என்மகளே எழுந்துவா என்னிடமே
தந்தைநான் தவமிருந்து தனித்துவரம் பெற்றேனே
எந்தைவழி பேரெடுக்க உந்தாயில் கண்டேனே
முந்தைநாள் நான்தந்த முத்தங்களை சேர்த்துவைத்து
இந்தைநாள் மொத்தமாய் இன்பமுனைத் தந்தாளே!
ஆழ்கடல் தேடலிலே ஆனிமுத்து பெற்றதுபோல்
வாழ்ந்தயெம் வாழ்க்கை யுன்னால் வரலாறாய் மலர்ந்ததம்மா.
தேர்ந்தயெம் பந்தமிது தேனாகிக் கனிந்ததம்மா.
நேர்ந்தயெம் நன்மை யெலாம் நீயாகி வந்தாயம்மா.
குலம்செய்த புண்ணியமோ குலமகளேநீ கிடைத்தாய்.
நலமெல்லாம் நீயென்றே குலம்வாழ அறம்படைத்தாய்.
வளமென்ன இனிவேண்டும் வள்ளல் நீ வந்துவிட்டாய்
பலமென்ன பெறவேண்டும் படை நீயே
செல்லம்மா.
கவஞர்.கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment