கடையக் கடையப் பாலில் நெய்யே!
அடைய அடைய உள்ளில் மெய்யே!
அறிய அறிய உள்ளுள் ஒளியே!
தெரியத் தெரிய ஒளிர்வான் இறையே.!
உள்ளம் ஒளிர இல்லம் துலங்கும்
உள்ளே மிளிர இறையும் விளங்கும்.
தெய்வம் தானெனத் தெளிந்து உணர்க.
தேடி அலைவது வீணெனப் புரிக!
மருண்ட இதயம் இருண்டு கிடக்கும்
திரண்ட மாயைத் தேடலை அடைக்கும்
ஆசைக் களவுக் கோபப் பேய்கள்
பூசைப் புண்ணியம் பலனை அழிக்கும்.
எண்ணம் வண்ணம் தூய்மை யானால்
எண்ணும் செயலும் நல்லற மானால்
இதயக் கோவில் ஒளி மயமாகும்
இறைவன் உள்ளே சுடராய் ஒளிர்வான்.
கோவில் தனக்குள் கட்டிய புலவன்
கும்பா பிஷேகமும் செய்து முடித்தான்.
பக்தியில் இறையைக் கொண்டா டினால்
முக்தியும் தனக்குள் கண்டாகலாம்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment