Monday, 24 February 2014

பெற்றதும் பாவமோ!

நிலையான சொந்தங்கள் !

கட்டிவச்ச கோயிலெல்லாம்
சுத்துனது குத்தமாடா?
கெட்டிக்காரா என் மகனே!
ஒத்த உன்னப் பெத்தமடா!
சொத்து சுகம் பாக்கலயே
சொந்தம் உன்ன வளத்தமடா!

தந்தி மேல தந்தி பல
தந்ததெல்லாம் என்னாச்சோ!
வந்திடுன்னு சொன்னதால
வந்த வழி மறந்திரிச்சோ!
முந்துனது காஞ்சிருச்சோ!
பிந்துனது தெரிஞ்சிருச்சோ!

நட்டி வச்ச வாழக் கன்னு
விட்ட தண்ணி மறக்கலயே!
பட்டினிக்குச் சோறாக
நித்தம் பழம் ஊட்டினாலும்
பெத்த புள்ள உன்னத்தான
பித்து மனம் தேடுதடா!

வச்ச நல்ல தென்னம் புள்ள 
மிச்சத் தண்ணிக் குடிச்சித்தானே
உச்சியிலே தான் சுமந்து
எச்சில் நனைக்க ஊட்டினாலும்
அச்சுப்புள்ள உன்மேலே
ஆச உயிர் ஆடுதடா!

வாழமரம் தெனனமரம்
வாசலில காத்திருக்கு
ஆளரவம் ஒஞ்சாலும்
அந்தச்சொந்தம் நிலச்சிருக்கு
ஓலையாகி வாழையாகி
ஒண்ணாவரக் கடன் நெனச்சு

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment