Tuesday, 18 February 2014

சுட்டிப் பாபா.....குழந்தைப்பாடல்.

சுட்டிப் பாப்பா

சுட்டிச் சுட்டிப் பாப்பா  நீ
சுட்டு விழியில் தேடுறே!
கிட்டக் கிட்ட வாவென
கேவிக் கேவித் துள்ளுறே!.

குட்டிக் குட்டிப் பாப்பா  நீ
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறே!
கொட்டிக் கொட்டிக் கைகளால
கூப்பிடத் தானே துள்ளுறே!

எட்டி எட்டிப் பாக்குறே நீ
என்னை நீயும் அழைக்குறே!
கட்டி முத்தம் கொடுக்கத்தானே
கைய்ய நீட்டிக் கேக்குறே!

தட்டித் தட்டிப் பாப்பா நீ
தாவித் தாவித் தவழுறே!
ஒட்டி நானும் தூக்கிட உன்னை
உறவைக் காட்டத் தவிக்குறே!

ஆட்டி ஆட்டிப் பாப்பா நீ
ஆடி ஓட நினைக்குறே!
பாட்டி வாயைக் காட்டித்தானே
பதிலும் கூறத் துடிக்குறே!

நீட்டி நீட்டிப் பாப்பா நீ
நினைச்சு எதையோ கேக்குறே!.
காட்டி அதையே கேட்டு நீ
கையைக் காட்டி அழுகுறே!.

ஊட்டி ஊட்டிப் பாப்பா நீ
ஒன்னு கூடத் தின்னல்ல.
கேட்டகாரும் வாங்கித் தாரேன்
கிளியே வந்து உண்ணடி!

கெட்டித்தனமா நீயும் நன்கு
கடமையாற்றி வளரணும்.
சுத்தமாகக் கைகளை நீயும்
பத்திரமாகக் காக்கணும்.

நல்ல குழந்தை நீயென்றேதான்
நாடு உன்ன வாழ்த்தணும்.
ஈன்றவள் தானும் உன் புகழில்
மீண்டும் இன்பம் மகிழணும்.

பெற்ற உனது தந்தை அவரை
பெருமை பேசி மெச்சணும்!
உற்ற அவரது தவத்தினை எண்ணி
ஊரும் போற்றி வியக்கணும்!

உனக்கும் மட்டும் வாழாமலே
உலகுக்காக வாழணும்.
நினைக்க மணக்கச் சரித்திரம்
நீயும் செய்து நிலைக்கணும்.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment