Wednesday, 14 October 2015

சந்தித்த வேளை

சந்தித்த வேளை!

இரவும் பகலும் சந்தித்த வேளை
விடியலிடம் என்ன சொல்லி
இரவு பிரிந்திருக்கும்!

"இரவே நீ போ!போ!
கரிய இருளில் உனக்குள்
எதையெல்லாம் ஒளித்தாயோ
அதையெல்லாம் விட்டுவிடு!
அடைபட்ட எல்லாம்
விடுபட்டு ஒளிரட்டும்!
தடைபட்ட முடக்கம்
உடைபட்டு ஓடட்டும்!
அடங்கிய செயல்கள்
தொடரட்டும் தொடக்கம்!
வினைகளை முடுக்கிவிடு!
விடியட்டும் புத்துலகம்!"

எனத்தான் விடியல்
விரட்டியும் இருளை
விடுதலை பெற்றிருக்கும்.

"விடியலே நீ வாழ்க!இனி
வெளிச்சத்தில் உண்மையை
வெளிக்காட்டு!
உறக்கம் கலைத்து
உணர்வினை உசுப்பிவிடு!
மயக்கம் தொலைத்து
மனிதனை எழுப்பிவிடு!
விடுதலை விளக்கி
தொடுதலைக் காட்டிக்கொடு!
வேதம் ஆய்ந்தால்
பேதம் தீயும்.
ஆதி அறிந்தால்
சாதி மறையும்.
பொதுமறை நாட்டி
புதுவழி காட்டு!
ஒளிமுறை ஆண்டால்
இருள்திரை தீண்டாது"

எனச்சொல்லி இடித்துத்தான்
விடியலை விட்டும் 


இரவும் பிரிந்திருக்கும்!.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment