Tuesday, 30 September 2025

அவதாரங்கள் தோன்றும் நேரம்.

அவதாரங்கள் அவசரம்.

கேடு காலம் கிருஷ்ணர் அவதரிப்பார்.
கெட்டழியும் நேரம் கிறிஸ்து பிறப்பார்
அல்லல்படும் போது அல்லா வருவார்.
அப்படிஒரு காலந்தான் இப்பொழுது.
அவசரம் அவசியம் அவதாரம் நேரும்.

ஆன்மீகம் வீண்மோகம் என்றது மறுப்பு
தான் தோன்றித் தனத்தின் பொறுப்பு.
அதனால் ஏற்பட்ட விளைவின் கருப்பு
அலட்சிய உள்மன அறநிலைக் கலைப்பு
இலக்கிலாப் பயணம் காலக் குழப்பம்.

பக்திகெட்டது நெறிப்பயம் விட்டது
முக்தி ஞானம் முட்டாள் தனமானது.
தனக்குள் தன்காப்பு தகர்ந்துபோனது.
மனத்துள் சாட்சி மறைந்து தானது.
இனம்பல பிரிந்து மனிதம் செத்தது.

பொய்யும் புரட்டும் போக்கிரித் தனமும்
கையூட்டு ஊழல் கொடுஞ் செய்மனமும்
நீதிபிறழும் நெறிகெட்ட குணமும்
ஊறி உழன்ற நரக வாழ்வும்
நாறிய நாகரிகம் நாளும் அழிகிறது.

நாய்போல் மனிதன் நரகன் திரிகிறான்.
தன்னினம் தானே தரங்கெட்டு ஆனான்.
விலங்காக விலங்கறுந்து அலைகிறான்.
பலமோகம் பழகி பாலியல் பிறழ்கிறான்
இறைபயம் நீங்கித் தானே கெடுகிறான்.

நன்மை தின்மை பகுப்பாய்வு புரிந்து,
உண்மை திண்மை வகுப்பாய்வு அறிந்து
உள்ளம் தெளிவு உள்ளது உணர்ந்து
நல்லது பொல்லது நான்கும் தெளிந்து
கொள்வது சத்தியம் ஆன்மிகத் தத்துவம்

காவல் காவா ஆளுமை ஆகாது
காவலன் இல்லா அரணும் வாழாது.
காப்பில்லா வெறுமனம் நிலையாது
பக்தியெனுங் காவல் பயமும் இல்லாது
சக்தி யெனும் புத்தி உத்தமம் பெறாது.

உள்ளம் உள்ளே உள்ளது கோவில்.
உள்ளதும் நீயே உணர்வாய் நினைவில்.
உணர்ந்து தெளிக உன்னுள் ஆன்மா.
அதுதான் தெய்வம் அதுவும் நீயே.
அதுவே பகுத்து ஆய்ந்த அறிவே.

அக்கினிப் பெருவெள்ளம் இடராதாக
அக்கிரமப் பஞ்சம் அல்லல் ஆகாதாக.
மனிதனை மனிதன் உண்ணாதாக
ஆன்மீகம் மீண்டும் அவனியில் தொடர
அவதார புருசர்கள் அவசியம் அவசரம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment