Wednesday, 19 March 2025

புதுப் பணக்காரன்.நிசமில்லா நிசவாழ்வு.

புதுப் பணக்காரன்.

புதுமை வாழ்வு புதுப் பணக்காரன்.
புதிதாய் நாளும் பொய் மனக்காரன்.
பதவி அதிகாரம் மதப்பில்
பறப்பான்.
உதவிய மனிதரை மதிக்க மறப்பான்.

மக்கிய பழமை கக்கத்தில் சிரிக்கும்.
வெக்கத்தில் புதுமை வெளியே ஒளிக்கும்.
பொய் யென்னும்  மாயை புதைக்குழி மறக்கும்.
மெய்யென்னும் வாழ்க்கை மீள்வது துறக்கும்.

சமூகம் பாவம் சரித்திரம் அறியும்.
சுய முகம் கூறும் சந்தர்ப்பம் விரியும்.
சொந்தம் மட்டும் சும்மா நிற்கும்.
வந்தது விட்டும் அம்மணம் ஆக்கும்.

பணத்தின் செருக்கு, குணத்தின் முறுக்கு;
தனத்தின் பெருக்கு:
மனத்தின் கொழுப்பு.
ஏழ்மை வாழ்ந்தது,
ஏக்கத்தில் தாழ்ந்தது.;
தூக்கத்தில் தோன்றித்:
தொலைந்திட்ட கனவோ!

கனவாய்க் கலைந்து,
நினைவில் மறைந்த,
மாயை‌ போன்றதோ!
மறைந்தே போனதோ!
புதுமை வாழ்வும்,
பதுமை போலவே!
நிசமில்லா நிசமே,
வசைபட்ட வாழ்வே!

வாழ்ந்தாய் என்றால்
வாழவைத்த துண்டா?
வாழ்க்கை என்றால்
வாழ வைப்பது.
பாதிக்கப் பட்டோரே
பலபேர் உண்டென்றால்
வாழ்ந்த அடையாளம்
வரலாறு கிடையாது.

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment