Thursday, 13 August 2015

கரியமாலழகு

இதுதான் பொதுவாழ்வு!

இப்படியும் ஒரு பஞ்சாயத்துத் தலைவரா!

அதிசயம் ஆனால் உண்மை.

உண்மையாகவே மக்கள் நலனுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்து பொதுவாழ்வு மேற்கொள்ளும் உத்தமர்கள் சிலர் இப்போதைய காலச்சூழலிலும் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் சத்தியமாக நாம் நமது மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்படவேண்டிய அதிசயமனிதர்தான்.
அவர்.

அப்படியா!அப்படிப்பட்ட அந்த அற்புத மனிதர் யார்?அவருடைய அடையாளம் என்ன?ஒரு இத்துப்போன சைக்கிள்தான் அவருடைய வாகனம்.மா.பொ.சி.போல் எடுப்பான மீசையும் புருவமும்,அண்ணாவைப்போல் அடக்கமான தோற்றமும் எளிமையும்,காமராசரைப்போல் தூயவெண்மை வேட்டியும் சட்டையும் அணிந்துவரும் கம்பீரம்.பெரும்பாலும் அவர் காலணி அணியக் கண்ட ஞாபகம் எனக்கில்லை.இதுதான் அவருடைய அடையாளம்.

மகோன்னதமான மாபெரும் தேசியத் தியாக சீலர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்,கபலோட்டிய தமிழன் வ.உ.சி,மகாகவி பாரதியார் தோன்றிய தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்னும் வரலாற்றுச்சிறப்புமிக்க புண்ணிய பூமி வட்டத்தில் உள்ள பெருமைக்குரிய வேடநத்தம் எனும் சரித்திரப்புகழ் பெற்ற ஒரு அழகான கிராமத்தில் பிறந்து அதே ஊரில் நான்குமுறை(அதில் இரண்டு முறை போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பதும் இவருடைய தூய்மையான பொதுவாழ்வுக்கு கிடைத்த சிறப்பம்சமாகும்) தொடர்ந்தும் பஞ்சாயத்துத் தலைவராக பொதுவாழ்வு வாழ்ந்துகொண்டு மக்கள் பணியாற்றி வருபவர்தான் திரு. கரியமால் அழகு எனும் அரிய மனிதர்.இந்தப் புண்ணியவானைப் பெற்ற பெருமைக்குரியவர்கள் திரு தொ.அழகுக் கவுண்டர்--சரஸ்வதி தம்பதியர் ஆவர்.இவருடைய பொதுவாழ்வுக்கு பக்க துணையாக நின்று ஊக்கம் தரும் துணைவியார் திருமதி கொண்டம்மையாரும் மற்றும் இவருடைய பிள்ளைகளும் இவருக்கு ஒத்த குணமாக அமைந்ததும் அக்கிராம மக்களின் பாக்யமாகும்.

ஒரு சராசரிக்கும் கீழான மிகவும் பிற்பட்ட நிலையில் சாதாரணக் கிராமமாக இருந்த வேடநத்தம் கிராமத்தை இன்று அக்கம் பக்கம் கிராமத்தாரும் விரும்பி வந்து குடியேறும் அளவிற்கு சகல அடிப்படை வசதிகளும் நிறைந்த சொர்க்கபுரியாக எழில் பெறச்செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது.உலகத்திற்கே குடி நீர்ப் பஞ்சம் வந்தாலும் இந்த ஊரை அது எட்டியும் பார்க்காது என்பது திண்ணம்.அந்த அளவிற்கு பல்முனைக்குடிநீர்த் திட்டம்.சந்து, பொந்து,ஊர்ப்புறம் மற்றும் அனைத்துத் தெருக்களும் சிமெண்ட் சாலைகள்.அது போன்றே இரவும் பகல் போல் காட்சிதரும் அருகருகே குறைவான இடைவெளிகளில் தெருவிளக்குகள்.எந்த ஒரு விளக்கும் எந்த ஒரு குடிநீர்க்குழாயும் எந்த ஒரு நாளிலும் ஓய்வெடுப்பதில்லை கரியமால் அழகைப் போலவே.

இப்படிப்பட்ட சேவைகள் எல்லாம் ஒரு பஞ்சாயத்துத் தலைவரின் கடைமைக்கு உட்பட்டதுதான் என்றாலும்கூட அக்கடைமைகள் செவ்வனே நிறைவேற்றப்படுகின்றனவா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்புகள்.அவ்விதமான பொதுவான எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி சில அதிசயங்கள் புரிவார் இவர்.அந்தக் கிராமத்தில் எந்த ஒரு தனிப்பட்ட வீட்டிலும் நிகழும் மங்கள மற்றும் அமங்கள நிகழ்வுகள் எதுவானாலும் இறுதிவரை நின்று தோள் கொடுப்பார்.பந்தல் கால் நட்டுவதிலிருந்து பாத்திரங்கள் கழுவி வண்டி ஏற்றும்வரையும் துணை நிற்பார் என்பதால்தால்தான் இவர் அக்கிராம மக்களின் நெஞ்சம் நிறைந்த தலைவராகவும் தொண்டராகவும் பாரதி கண்ட சேவகக் கண்ணனாகவும் என்றும் மாறா பொதுவாழ்வு வாழ்ந்து வரும் உடன்பிறவா உறவாக நிலை பெற்றுள்ளார். ஊர்த் திருவிழா எதுவானாலும் இவரே முன்னின்று நடத்துவார்.எந்த சமூகம் ஆனாலும் அதுவும் தன் சொந்த சமூகமே என்றே தோளோடு தோள் கொடுக்கும் தோழனாக துணை நிற்பார்.

இன்றைய அரசியல் வாழ்வில் அதாவது பொதுவாழ்வு என்ற பேரளவில் ஒரு வார்டு உறுப்பினர் கூட கோடி சேர்த்துள்ளதாக வெளிப்படையான உண்மைதான்.ஆனால் இவரோ தன் பூர்விக சொத்தையும் இழந்துள்ளார் என்பதே அந்த ஊர் மக்களின் ஆதங்கம்.அவருடைய குடும்பப் பங்கில் கிடைத்த வீடொன்றைத் தவிர வேறொன்றும் இருப்பதாகவும் நான் என் அனுபவப்பூர்வமாகக் கேள்விப்படவில்லை.என்றும் இக்கிராமத்தின் பெருமை கரியமால் அழகு எனும் பேரும் காசி விசாலாட்சி கோவிலும்தான்.

பிறர் பாராட்டும் விரும்பமாட்டார்.ஒருவேளை இக்கட்டுரை அவர் கண்ணில் பட்டுவிடக்கூடுமோ என்பதே எனது கவலை.ஏனெனில் இப்படிப்பட்ட செயல்கள் அவருக்கு ஏற்புடையது அல்ல என்றே நான் தயங்கினாலும் அவர் என் வயதுக்கும் மூத்தோன் என்னும் சிறப்புக்கும் என்றென்றும் மரியாதை தரகூடியவர் என்பதில் எனக்கும் ஐயமில்லை.அவரைப்பற்றி நான் யோசிக்காமல் ஒரு உதாரண புருஷரை உலக்குக் காட்டவேண்டிய கடமை ஒரு எழுத்தாளனுக்கு உண்டு என்று துணிந்தேதான் எழுதுகிறேன்.

இதுதான் பொதுவாழ்வு என்று முன்னுதாரணமாக வாழும் இந்த உண்மையான மக்கள் தொண்டரை நமது அரசாங்கம் கண்டுகொள்ளுமா?அப்படிக் கண்டுகொண்டால் அரசு என்ன விருது தந்து ஊக்குவிக்கும்.அல்லது கௌரவிக்கும்?

முன்னுதாரணமாக வாழும் அரிய மனிதர்களை தேடிக்கண்டறிந்து உலகுக்குக் காட்டி இளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டி வழி நடத்துவீராக!

விரும்பும் ஊர் வேடநத்தம்.

வேட நத்தம் என்றாலே--எவரும்
விரும்பும் ஊர் என்னும் பொருளே.
தேடும் நித்தம் கண்டாலே--காசி
விசுவநாதர் அருளாலே!

தூத்துக்குடி மாவட்டம்--வளம்
ஏற்றுக்குடி வேடநத்தம்.
வேற்றுமைகள் பாராட்டா--உளம் 
போற்றுக்குடி வேடநத்தம்.

ஊரென ஒன்றும் தூரம்--காட்டும்
உயர்ந்து நின்றும் தோப்பு.
நேரெனக் கொண்டும் நித்தியம்--போற்றும்
நிமிர்ந்த கோபுரம் வேட நத்தம்.

வீர வேடர் நீராவி--கண்டு
வேட்கை தணிய மொண்டு
ஆறிய தாகம் அருமை--கொண்டு
தேரிய நத்தம் வேட நத்தம்.

வேடுவர் பெண்ணை நாடியே--வேலன்
தேடிக் களைத்து ஓடியே-
கூடிய மோகம்  தீரவே---ஊற்று
ஆடிய தீர்த்தம் வேடநத்தம்

ஊரெனக் குடும்பம் ஒன்றாம்--பந்தம்
தேரெனப் பிடிக்கச் சொந்தம் 
சீரென நகர்த்தும் நன்றாம்--ஒன்றாம்
பேரெனப் புகழுறும் வேடநத்தம். 
.
விரிந்தும் பெருகியும் வளர்ந்தும்--தினம்
அறிந்தும் சமத்துவம் அமைந்தும்-
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்--கணம்!
உறையும் வணக்கம் வேட நத்தம்.

சுவர்க்கம் எங்கே தேடலாம்--அந்த 
சுகமும் கண்டே ஆறலாம்.
கரிய மாலின் கருணையே--கண்ட
புதிய சுவர்க்கம் வேடநத்தம்.

காசி விஸ்வ நாதனும்--துணை
வாசி விசாலா ஆளும்-
ஆசி மேவும் வாசம்--இணை
நேசம் வாழும் வேடநத்தம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment