தெருவீதித் தெய்வங்கள் உருவான விதமென்ன!
இரக்கம் இல்லா இதயங்கள்
உருவாக்கிய பாவங்கள்.
உறவிருந்தும் ஒதுக்கப்பட்டார்
வரவில்லா காரணத்தால்.
இருந்த தெல்லாம் உதறிவிட்டு
பிறந்த கோலம் ஆகிவிட்டார்.
ஆதாரம் சொத்து இல்லை
அதனாலே சொந்தம் இல்லை.
சேதாரம் செல்வம் போனால்
ஆதாரம் அருகுந் தன்னால்.
தனக் கென்று ஒரு பாகம்
தன்வசம் இல்லாமல்
ஆதரவு அற்றதால் அநாதை ஆக்கப்பட்டார்.
உடுக்கவும் உடை இல்லை
படுக்கவும் இடம் இல்லை.
உண்ணவும் ஒரு வேளை
எண்ணவும் விதம் இல்லை.
தன் தோலை தான் போர்த்தி
தன் நிழல் தனைக் கிடத்தி
பாரமாய் பூமிக்கு
ஓரமாய் கிடக்கிறார்
மக்கள் நலம் கொள்கை என்பார்.
மக்கள் ஆட்சி நாடு என்பார்.
தெரு ஓரம் கிடப்பவரை
ஒரு ஓரம் போடு என்பார்.
அநாதை என யாருமே அவனியில் பிறப்ப தில்லை.
இருந்த தெல்லாம் இழந்த
பின்னே,
பிறந்தாரும் காப்பாரில்லை.
கருணை உள்ளம் மனிதர் சிலர்
கடவுளாய் வாழ்கிறார்கள்.
தெருவில் இத்தெய்வங்களை
தேடித் தேடி தரிசிக்கிறார்கள்.
பணம் பொருள் பசி தீர்த்து
மனித நேயம் காக்கிறார்கள்.
மனம்போல் வாழ்கவென மனிதராகத் தொடர்கிறார்கள்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment