Friday, 14 February 2025

அம்மா உன் மூச்சு.

அம்மா உன் மூச்சு.

அம்மா அம்மா உன்னோட மூச்சு.
அது தானம்மா என்னோடப் பேச்சு.
அம்மா உந்தன் சுவாசக் காற்று
அதுதானம்மா என்னுசுர் ஊற்று.
அம்மா உன்பாசம் ஆகாயத்தும் மேலே!


என்னோட உசுரு உன்னோடக் கனவு.
உன்னோட ஆசை என்னோட வாழ்வு.
என்னோடப் பிறப்பு உன்னோட உயிர்ப்பு.
உன்னோடச் சிரிப்பு என்னோடப் பிறப்பு.
.
பெண்ணா நீ பிறந்ததாலும்
பாவம் என்றும் எண்ணலயே!
வாங்கி வந்த வரம் என்றே
தாங்கி என்னை ஈன்றாயே!

புருசஞ் செஞ்ச கொடுமைகள்
பெருசா ஏதுங் கொள்ளாமல்.
வரமா என்னைக் கொடையாக
தவமாப் பயனாய் பெற்றாயோ!

பேறுகால வலியவிட  பெரிய கொடுமை வேறில்லை.
ஆறுதலாய் நான் பிறந்தேன்
தேறுதலாய்  வளர்த்தாயே!
காலைப் பொழுது புலர்ந்த வேளை
புதிய நாள் வரவாக நானுந்தான் மலர்ந்தேனோ!

புதியவன் நானும் என்னாலே 
அம்மா உனக்கு என்ன செய்தேன்?
கண்ணில் என்னைக் கண்டாயோ!
தன்னில் வலியை 
மறந்தாயோ!
உன்னால் ஒருவன்  விருந்தாளி 
உலகில் நானும் பிறந்தேனோ!

தாயே உன்னை நோயாக்கி தரைமேல் விழுந்து
அழுதேனோ!
வேதனைகள் எல்லாம் சாதனையோ!
வென்றது யார்? நீயா நானா?

மார்பில் என்னை அள்ளினாய்.
மனதுள் மகிழ்ந்து துள்ளினாய்.
நேர்ந்த இன்னல் மறந்தாயோ!
தூர்ந்தும் எல்லாம் மறைந்தனவோ!

உதிரத்தை எனக்குப்
பாலாக்கி-என்
சதுரத்தை வளர்த்து ஆளாக்கி
மனிதனாய் என்னை வளமாக்கி
வாழ வைத்தாய் என் தாயே!

சேலையில் வரிந்து துயில் கட்டி
சீமானாய் நினைந்து பாட்டுக் கட்டி
சோலை நிழலில் தாலாட்டி
சொக்க விட்ட அம்மா! அம்மா!

வேலை வெய்யில் 
வேர்த்தூற்றி,
நாளை எனக்காய் நேர்ந்தாற்றி
பாடுப்பட்டுச் சீராட்டிப் பாலூட்டி,
வாலிபனாக்கி வளர்த்து விட்ட: அம்மா!அம்மா!

தாயே தாயே  நீ தானம்மா!
தந்த தமிழ் சொல் நீயே அம்மா!
வாயுள்ள பிள்ளை ஆனேன் 
அம்மா
 வையம் வாழ்த்த வாழ்கிறேன் அம்மா!அம்மா!

அப்பனுக்கு இணையாத் தப்பாமல் நீயும்
சொப்பனத்திலுங் கூட சோராமல் தாயே!
எப்பவுமே எனக்காய் உழைத்தாய்.
ஒப்பிட முடியாத உயரம் வைத்தாய் அம்மா!அம்மா!

நானும் உனக்குப் பிள்ளையாக
ஏனோ பிறந்தேன் பாக்யமே!
என்ன தவந்தான் செய்தேனோ!
உன்னைத் தாயாய்ப் பெற்றேனே!

வேறென்ன தெய்வம் வேண்டுவேன்!
பேரென்ன ஊரென்ன உனை விடவா!
என் குலத்தெய்வம் நீயம்மா!
பின்புலம் எனக்குத் தாயம்மா!

எல்லாம் எனக்கு நீ தானே!நீ
இல்லை என்றால் நான் என்னாவேன்!
நானும் உனக்கு என்ன செய்தேன்?++எனக்குப்
பெண்ணாய் மகளாய் பிறந்து
வா! அம்மா! அம்மா!

பாலூற்றி அனுப்பவா வந்தேன்! !
பாவி நான் பாசமகன்.
அம்மா!அம்மா!
தீயேற்றிக் காலாற்றத் 
தாயே வாரேன் காடு வரை. 
அம்மா!அம்மா!

கொள்ளி கொண்டு பாவி நான்
அள்ளிக் கொஞ்சிய தாயுனக்கு
கொள்ளியிடும் பிள்ளை நான்...
பாலூற்றி அனுப்புகிறேன்.
பாவி நான் பாசமகன்.
போய் வா!அம்மா!அம்மா!

கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment