Saturday, 15 February 2025

முருகன் கவசம்.

முருகன் கவசம்

புன்னகை கண்டேன்  மின்னொளி என்பேன.
பொன்னிறம் கண்டேன் உன்னிறம் வியந்தேன்.    விண்ணெழில் கண்டேன். 
உன்னெழில் வரைந்தேன்.

சிலையாக் கண்டேன்!
கலையேக் கண்டேன்.
கலையாக் கண்டேன்!
அழகேக் கண்டேன்.
அழகாக் கண்டேன்!
தமிழேக் கண்டேன்.

தமிழாக் கண்டேன்
தத்துவம் கண்டேன்.
வேலாக் கண்டேன் 
வினைதீரக் கண்டேன்.
சமர்தோள் கண்டேன் 
திமிரைக் கொண்டேன். 

மயில் மேற்கண்டேன் 
மனம்மகிழ் வென்றேன்.
கயல்விழி வள்ளியின்
கருணை கண்டேன்.
வயல்வெளி நெல்லாய் 
வாரிக் கொண்டேன்.

சேவல் கூவிடும் 
செருக்குடன் இணைந்தேன்.
ஆவல் கூடிய
முறுக்குடன் முனைந்தேன்.
ஏவல் விடுத்தால்
இமயமும் எடுப்பேன்.

பன்னிரு விழிகளும் ,
பன்னிரு கரங்களும்,
உன்னெழில் காணவும்;
 உன்னடி தொழவும்:
தண்ணருங் கருணை
தயவால் வாழ்வேன்.

மங்களம் பாடி 
வணங்கிட விழைந்தேன்.
நன்கலம் கூடி 
வன் கடல் கடந்தேன்.
உன்னருள் தேடவும் 
உன்புகழ் பாடவும்,
என்னெஞ்சும் நாவும்
உன்னடி கிடக்கும்.

அருட்பா கவசம் 
திருநீர் வாசம்:
கேட்கவும் நுகரவும் செவிமூக்குங் காக்க!
பாடவும் நாடவும்
வாய் கால் காக்க!

எண்ணவும் ஏற்கவும்
இதயம் காக்க!
காணவும் வேண்டும்
கண்கள் கரங்கள் காக்க!
திருநீர் இட்டிட
திரு நெற்றிக் காக்க!

குன்றந் தோறும் குடிகொண்ட முருகா!
கண்டுந் தேறும் கடையிந்த பிறப்போ!
கொண்டு ஏறும் கொடைநல் உறுப்புகள்:
வந்தும் வந்தும் வழிபடக் காக்க!

இயக்கும் சக்தி இயங்கும் முறைகள்,
இயல்பில் மலசலம் கழிக்கும் வழிகள்;
வயிறும் மார்பும் உள்ளாடும் பொறிகள்:
பயக்கும் செயல்கள் நயமுறக் காக்க!

கருணைக் காதல் ஞானம் வீரம்,
துறவுச் சாந்தம் கூறும் விதஙுகள்;
அறுபடை வீடுகள் அறுவருள் முகங்கள்:
உறுவினை அறுக்கும் அருட்கொடைத் தலங்கள்.

ஏவல் நீதான் எதுவரை பெறுவேன்?
காவல் நீதான் அதுவரை தொடர்வேன்.
மேவல் கொண்டேன் ஆவல் துறந்தேன்:
நோவது மறந்தேன் குகனடி நிறைந்தேன்.

பாவம் என்றோர் பழிச்சொல் நீக்கு!
சாபம் தந்தோர் கோபம் போக்கு!
தீபம் உள்ளொளிர் ஆண்மா ஆக்கு!
தூபம் உன்னடி சரணென் காப்பு.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment