Saturday, 23 November 2024

மனிதனாக ஏன் பிறந்தேன்?

மனிதனாக ஏன் படைத்தான்-உனக்குள்
மனதையேன்  ஒளித்து வைத்தான்?
தன்னைத்தானே உணரத்தானே-இறைவன்
உன்னையே சாட்சி வைத்தான்.

மனது ஒன்றை வைத்தானே-அதனால்
மனிதன் என்றும் அழைத்தானே.
மனதைக் கொன்றும் புதைத்தாயோ!-உனக்கு
மனிதன் என்ற பெயரெதற்கு ?

விலங்குக் கில்லா ஆசை உண்டடோ-எதையும்
விரும்பாமல் தொட்ட துண்டடோ!
மனதைவிட சாட்சி உண்டோ!-அதில்லா
மனிதன் போல் மிருகம் உண்டோ!

உலகிலுள்ள உயிரை யெல்லாம்-இறைவன்
ஒருவன்தானே படைத்துவிட்டான்.
மனிதனுக்கே அறிவு வைத்தான்-அதை
மனிதன் ஏன் தொலைத்து விட்டான்.

மனிதருள் மனிதர் சிலர்-மறைந்து
மனிதர் போல் வாழுகிறார்.
கருநாகம் விசம் அவரை-அறிந்து
கண்டிட்டால் கல்லெறிவீர்.

இரத்தம் பல வகையாச்சோ-மனித 
சித்தம் கோடி பகையாச்சோ!
இனத்துக்குள் இனமாக-நமக்குள் 
எதற்கு இத்தனை பிரிவாச்சோ!

ஆசையால் அறிவு போச்சோ-பழகும்
பாசையால் பிரிவு ஆச்சோ!
மனித இனம் ஒன்றென்ற!-உறவின்
புனித உண்மை மறந்ததேனோ!

கொ. பெ. பிச்சையா.




















No comments:

Post a Comment