Friday, 14 November 2014

நல்லதோர் இராகம்.


புலமை ஏன்?

நல்லதோர் இராகம் செய்தாய்—அதை
நலஞ்செய ஏன் மறந்தாய்?
கள்ளமற ஞானம் தந்தாய்—எனை
களஞ்செய ஏன் நொந்தாய்?

மனிதனாய் படைத்து விட்டாய்—அலை
மனதினை ஏன் இணைத்தாய்?
சிந்தனைத் தீயை வைத்தாய்—தேடும்
வெந்தணல் ஏன் வளர்த்தாய்?

கண்களில் காட்சி ஈந்தாய்—அந்த
காட்சியில் இரசனை சேர்த்தாய்..
இரசனையின் இரகசியத்தை-பாவி
ஏனொழித்து தேட விட்டாய்.

தேடத் தான் கற்பனையோ!—உள்ளே
தேடிச் சொல்ல சொற்கணையோ!
தேடி நான் வென்றதெல்லாம்—நீயும்
தேடிவரப் பொழு தில்லையோ?

அறிந்த தெல்லாம் எழுதவே—எனக்கு
அய்யன் நீதான் ஆணையிட்டாய்.
அறிவு வரம் தந்தசாமி—ஆளும்
பொருள்தரவும் ஏன் ஒளிந்தாய்?

உயிர் படைக்கும் உன்னைப்போல்—நானும்
உணர்சசி உயிர் கடவுள்தான்.
படைப்புகளை சிறை முடக்கி---பாவம்
பார்க்க ஏன் புலமையோ?

கொ.பெ.பி.அய்யா.
 


No comments:

Post a Comment