Saturday, 18 July 2015

இயற்கை மடியில்.

இயற்கை மடியில்.

சிறகுகள் வேண்டிப் பிறப்போம்.
பறவைகளாகப் பறப்போம்.
உலகம் ஒன்றே உல்லாசம்-கண்டு
உலாவியறிவோம் எல்லாமும்.

அழகின் சிரிப்பை பாரு !
அருவிகள் முழக்கம் கேளு!
ஆறுகள் ஊறும் காடு-வழியே
ஊருகள் சேரும் நாடு.

நீலக் கடலின் திரைகள்-
மீள மோதும் கரைகள்.
 சூழ ஆழி நிலத்தின்--அணி
சேலை நீல நிறத்தின்.

புல்வெளிச்  சோலை இலைகள்-
நெல்வயல் வாழை தழைகள்
தவழும் காற்றின் அலைகள்-ஓயா
நிகழும் நாட்டியக் கலைகள்.

ஓடும் முகில்கள் கூட்டம்.
ஆடும் மயில்கள் ஆட்டம்.
பாடும் குயில்கள் பாட்டும்-தவம்
தேடும் பரவசம் ஊட்டும்.

நீரும் காற்றும் இங்கே-
வேறு மாற்றம் எங்கே?
வாழும் கூட்டம் இங்கே-தேடி
மேலும் நோட்டம் எங்கே?

மலைகள் முகடுகள் தேடும்-
மாதவன் கைலை வீடும்.
நதிகள் இணையும் நாளும்--இங்கே
பதிகள் இறங்கி வாழும்.

இயற்கை மடியின் விரிப்பில்-
இறைவி அவளின் சிரிப்பில்-
அன்னை கொடுத்த பிறப்பில்-ஆஹா
தன்னை மறப்போம் அணைப்பில்.

கொ.பெ.பி.அய்யா..



No comments:

Post a Comment