Friday, 29 August 2014

அருகாவேன்.


நானும் அருகாவேன்.

வினைகள் தீர்த்து துணைசெய் நாயகா.
எனைநீ பார்த்து முனைவா (வி)நாயகா.
உனைநான் கேட்டேன் எனைநீ மீட்டு
அணைஉன் கூட்டாய் கணநீ நாதா.

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பானை வயிறே பண்பின் பழமே.
ஏழை இனமே எலியின் வாகனனே.
ஊழை விரட்டு வினையின் சேகரனே.

உலகே சொந்தம் உனக்கென்ன பந்தம்.
பழக என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி செய்யாகும் ஆனை நீதெரிந்தால்.
சந்தி இடமெங்கும் சந்திக்க நீஉறைந்தால்.
முந்தி சுபமங்கு முன்னிற்கும் நீபுரிந்தால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே கோணமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் நல்வரமே
நானும் அருகாவேன் பூணுமணி பொன்சரமே!.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment