Tuesday, 15 April 2014

எழுதாக் கடன்.

எழுதாக் கடன்.

அம்மையப்பா ஆதா மேவாளோ!
இம்மை ஈட்டிய உண்மை ஊழியமோ!
எழுதாக் கடனை ஏந்திய ஐசுவரியமோ!
ஒழுக்கம் ஓதம் ஔடதம் அவரோ!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தேடி அங்கென்ன உய்வம்.
இம்மையில் புண்ணியம் இவரடி பெய்வம்.
ஈட்டிய செல்வம் எல்லாம் செய்வம்.

உயிராய் எம்மை உலகினில் ஈந்து
ஊட்டிய உதிரம் உண்பதில் உவந்து
எல்லாம் நீயெனத் தன்னில் சுமந்து
ஏற்றிய ஒளியை போற்றுதும் நினைந்து.

ஒப்பிலாக் கருணை செப்பிலாப் பொறுமை
ஓம்பிய அருமை ஏங்கிய பெருமை
ஐதீகம் அதுதான் அவர்மடி உரிமை.
ஔவை மொழியின் அடங்கிய திருமை.

அம்மை யப்பன் அன்பை மறந்தால்
வெம்மைத் தீயிலும் வேகாது கிடப்போம்.
செம்மை வேறென்ன செய்நன்றி கடனாம்.
நம்மைத் தந்தாரை நலந்தந்து பெறுவோம்.

கொ.பெ.பி.அய்யா.








No comments:

Post a Comment