Saturday, 20 December 2014

நாளையப் பாரதம்.

நன்று சொல்லுவோம்.

நன்று சொல்லுவோம் நாமே வெல்லுவோம்
நமக்குள் நாமே நன்றி கொள்ளுவோம்.
நாளையப் பாரதம் நமது கைகளில்
வேளை வந்தது விடியல் காணுவோம்.

இளைஞர் படையதும் இயக்கம் வெல்வதும்
இமயம் பெறுவதும் புரட்சி என்பதும்
தமிழன் கொடியதும் தரணி ஆள்வதும்.
தருமம் ஜெயமெனப் பரணி பாடுவோம்.

தென்திசைக் கோடியும் விண்மிசை ஏறியும்
பண்ணிசைப் பாடியும் பரவசம் கூடியும்
வெற்றியை முழக்கியும் சுற்றியே கூவியும்
பற்றுவோம் நடுவணை முத்தமிழ் சூடியும்.

கட்டியம் கூவிடும் நிச்சயம் ஒலிக்குது
சத்தியம் மேவிடும் பச்சையம் ஒளிருது.
விண்ணதிர் முழக்கம் அன்னையர் குலவைகள்
கண்ணெதிர் விளக்கம் முன்மொழி கேட்குது.

ஜெயம்ஜெயம் ஜெயமென ஜெயம்பாடும் வாழ்த்துக்கள்
நயம்வயம் நட்பிணை நலம்நாடும் ஏற்புகள்.
தயவென்ன தமிழுக்கு தமிழுறவு மேன்மைக்கு?.
புயமென்ன புதுமைக்கு புகழ்வரவு ஆண்மைக்கு?

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment