Sunday, 31 August 2025

பாலை வனமும் பூப்பூக்கும்.

பாலை வனங்கூட பூப்பூக்கும்.

பாலை வனங்கூடப் பூப்பூக்கும் அம்பி.
சோலை வளமாகக் காய்காய்க்கும் தம்பி.
ஆக்கும்  கரங்கள் அணிசேர்ந்தால் அம்பி
ஆகாயங் கையெட்டித் தொடுவானம் தம்பி.

ஆகாத ஒன்றேது துணிந்திட்டால் அம்பி.
வேகாத பருப்பேது விறகாலே தம்பி.
நோகாது நுங்குண்ண கிட்டாது அம்பி 
போகாது ஊருவந்து சேராது தம்பி.

மேடேறி ஆறேறி ஓடுமா அம்பி
காடூறக் கழனிக்குப் பாயுமா தம்பி.
செய்யாமல் எதுவும் சீருண்டா அம்பி.
பெய்யாமல் மழையும் நீருண்டா தம்பி.

பாடின்றி வாழ வீடில்லை அம்பி.
வீடின்றி ஊரு நாடில்லை தம்பி
உழையாப் பிழைப்பு உயிர்க்காது அம்பி.
மழைக் காலம் இளைமை தொலைக்காதே தம்பி.

கவிஞர் கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment