Saturday, 28 May 2016

குயிலோ மயிலோ!

காட்டுக்குயில் பாட்டுத்தானா?

காட்டுக் குயில் பாட்டுத்தானா?
கூட்டு மயில் ஆட்டந்தானா ?
பாலை மழை போலத்தானா-வீணே
வாழும் நிலை வாழ்க்கைதானா?

என்ன சொல்லிப் பாடுகிறேன்!
என்ன வெல்ல ஆடுகிறேன்
என்ன இங்கே தேடுகிறேன்-நானே
என்ன எங்கே ஓடுகிறேன்.

சொல்ல வந்தது என்னவோ!
சொன்ன துந்தான் செல்லுமோ!
கொள்ள வந்ததும் என்னவோ-கூடவே
கொண்டு போவதும் செல்லுமோ!

பிறக்கும் போது சிரித்தேனா!
பிழை நினைத்தும் அழுதேனோ!
பறக்கும் போதும் அறிந்தேனா- எங்கே
நிலை நிறுத்தும் இடந்தானோ!

நிலம் என்றால் நிசந்தானா!
புலம் வென்றால் வசந்தானோ!
பூமி என்பதும் பூஜியம்தானா-அந்த
சாமி ஒன்றதும் ராஜியம்தானோ!

பேரென்ன சொல்லவோ!
ஊரென்ன கொள்ளவோ!
யாரென்ன சாதியோ-தூசே
நீரென்ன மீதியோ!

விதைச்சவன் தானதை சொன்னானா!
விளைவதைத் தானெல்லாம் கொண்டானோ!
புதைச்சவன் தானதைப் புரிந்தானா-இங்கே
முளைப்பதைத் தானுந்தான் மறந்தானோ!

எத்தனைக் காட்டுக்குயில் பாடின;
அத்தனைக் காற்றுவெளி போயின!
பித்தனைப் போலத்தான் ஞானியர்-இன்னும்
செத்தனை நாளத்தான் காணியர்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment