Friday, 19 September 2014

ஆளுக்கொரு மரம்........தெம்மாங்கு.


ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.(தெம்மாங்கு) 

பெண்:-- 
சரிகைக் கரை வேட்டி கட்டி 
சிலுக்குச்சட்ட மின்னும் மச்சான். 
அம்சமாக எம் ஜி யார 
அச்சாகக் காட்ட வச்சான். 
கண்ணு படும் சாமி-- காலடி 
மண்ணு எடு பூமி. 

ஆண்:- 
ரெட்டப் பின்னல் பாசி மாலை 
வட்டக் கொண்டக் காரி புள்ள 
சிக்குனுதான் சிங்காரமா 
நச்ச்சுன்னுதான் தேவிபோல 
அசத்துறைய குட்டி—நீ 
ஒசத்தி வெல்லக் கட்டி. 

பெண்:- 
என்னப் போல யாரு உண்டு 
இவ்வுலகில் கூறு ஒன்று. 
சும்மா கிடக்கும் காடு என்று 
அம்மான் நீயும் ஆசை கொண்டு. 
நம்பி வந்தால் மோசம்—நானும் 
நம்பிவிட்டால் மாசம். 

ஆண்:- 
என்னவிட யாரு புள்ள. 
உன்னத்தொட ஆளே இல்ல. 
சிந்து கங்கை காவேரியே 
சங்கமித்த சிங்காரியே! 
கை எடுத்தேன் வணங்க.—இது 
பொய் இல்லையே அணங்கே! 

பெண்:- 
உனக்கு நானே முந்தி தந்து 
எனக்கு நீயே தொந்தி தந்து 
கணக்கு ரெண்டு ஆணும் பெண்ணும் 
மணக்க என்றும் வாழ வேணும். 
நமக்கு நல்ல காலம்---அன்று 
நடத்து உந்தன் யோகம். 

ஆண்:- 
நதியெல்லாம் பெருகி வரும் 
நிலம்பஞ்சம் அருகி விடும். 
ஆறெல்லாம் கைகோர்க்கும். 
ஊரோடும் நமை வாழ்த்தும். 
இருவர் அன்று இணைவோ.ம்—நாம் 
திருமணமும் செய்வோம். 

பெண்:- 
நாடு வளம் ஆகுமுன்னா. 
வீடு நலம் வாழுமுன்னா. 
ஆளுக்கொரு மரம் நடுவோம். 
வாழ்வுக்கது வரம் கொடுக்கும். 
புள்ள குட்டி போல—காடும் 
எல்லாம் கட்டிக் காப்போம். 

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment